நெட்பிளிக்ஸில் வெளியாகும் மம்முட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம்... ஓடிடி ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
திருவனந்தபுரம்: மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் கடந்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் மம்முட்டியுடன் ரம்யா பாண்டியன், மறைந்த நடிகர் பூ ராமு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், மலையாளம் என இருமொழிகளில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு படக்குழு இன்று முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மம்முட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம்
மம்முட்டி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகி வருகின்றன. பீஸ்மா பர்வம், புழு, ரோர்சாக் என வெவ்வேறு ஜானரில் வெளியான இந்த மூன்று படங்களுக்கும் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படமும் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது. டபுள் பேரல், அங்கமாலி டைரீஸ், ஈ.மா.யூ, ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற வித்தியாசமான படங்கள் மூலம் கவனம் ஈர்த்த லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்
மம்முட்டி - லிஜோ ஜோஸ் பெல்லிசேரி கூட்டணி முதன்முறையாக இணைந்த நண்பகல் நேரத்து மயக்கம், தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் வெளியானது. மம்முட்டி கட்டம் போட்ட அழுக்கு லுங்கி, சட்டை என வித்தியாசமான லுக்கில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருந்தார் மம்முட்டி. கதை, திரைக்கதை, மம்முட்டியின் நடிப்பு, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு என அனைத்துமே சிறப்பாக வந்திருந்தன. இந்நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

நெட்பிளிக்ஸில் நண்பகல் நேரத்து மயக்கம்
ஆக்ஷன் ஜானர், ஸ்டைலிஷான கேரக்டர்கள் கொண்ட படங்களில் நடித்து வந்த மம்முட்டியை, அப்படியே முழுவதுமாக மாற்றிக் காட்டியிருந்தார் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்க்க தவறிய ரசிகர்கள் ஓடிடி ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து இருந்தனர். அதன்படி, இந்தப் படம் வரும் 23ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. படக்குழுவின் இந்த அறிவிப்பால் ஓடிடி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மாலையாள சினிமாவில் கிளாசிக்கல் காம்போ
மம்முட்டியும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியும் மலையாள சினிமாவில் கிளாசிக்கல் டச்சுடன் ஒரு படத்தை கொடுத்துள்ளதாக விமர்சகர்கள் பாராட்டியிருந்தனர். இப்போது ஓடிடியில் வெளியாவதால், இனிமேல் நண்பகல் நேரத்து மயக்கம் படத்துக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

விரைவில் கிறிஸ்டோபர் ஓடிடி ரிலீஸ்
நண்பகல் நேரத்து மயக்கம் படத்தைத் தொடர்ந்து மம்முட்டி நடித்த கிறிஸ்டோபர் திரைப்படம் இந்த மாதம் 9ம் தேதி வெளியானது. மம்முட்டி போலீஸ் ஆபிஸராக நடித்துள்ள இந்தப் படம் ஆக்ஷன் ஜானரில் மாஸ் காட்டியது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற கிறிஸ்டோபர் படமும் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. மார்ச் முதல் வாரத்திலோ அல்லது இரண்டாவது வாரத்திலோ கிறிஸ்டோபர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











