படத்தில் கள்ளக் காதல் இருக்கும்.. படம் முழுக்க அதுவா இருக்கும்? ஹாட்ஸ்டார் ஓடிடியில் இப்படி ஒரு மூவி
சென்னை: இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் மங்களவாரம் என்ற பெயரில் உருவான படம் தமிழில் செவ்வாய்க்கிழமை என்ற தலைப்புடன் நவம்பர் மாதம் தியேட்டரில் வெளியானது. தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் உள்ளது.
இயற்கை எழில் சூழ்ந்த ஒரு கிராமத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் ஒரு ஜோடி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தொடங்குகிறது கதை. கொலைக்கு முன்பாக ஊர் சுவற்றில் கொலையாகப்போவோர் பெயர்கள் எழுதி வைக்கப்படுவதும், அதைப் பார்த்து ஊர் பதட்டப்படுவதும் பார்ப்பவர்களுக்கும் பயத்தை ஏற்படுத்துகிறது.

திடீர் திடீரென காளி போன்ற வேடம் அணிந்த ஒரு பெண் காட்டுக்குள் ஓடுவதும், கூடவே ஒரு நாய் பின்தொடர்வது போல இடை இடையே வைக்கப்படும் காட்சிகள் திகிலை முதுகு தண்டுக்கு நகர்த்துகிறது. இதெல்லாம் முதல் பாதியில் தான். இரண்டாம் பாதிக்குப் பிறகு பரங்கிமலை ஜோதி தியேட்டரின் 11 மணி காட்சி போல மாறிவிடுகிறது படம்.

இது கிராமமா.. கள்ளக்காதலர்களின் கூடாரமா என்று கேள்வி கேட்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கள்ளக்காதல் இருக்கிறது. அதிலும் கிளைமேக்ஸ் நெருங்கும் போது வரக்கூடிய "ட்விஸ்ட்" கள்ளக் காதல்களின் இளவரசி என்று பட்டம் கொடுத்து அழைக்கும் அளவுக்கு இருக்கிறது. எது.. இந்த பொண்ணுமா இந்த வேலை பார்த்துச்சு என்று கடுப்பாகுவது கேரண்டி.

கிராமம் முழுக்க கள்ளக்காதல், கதையின் கருவும் கள்ளக்காதல், கிளைமாக்ஸும் அதுதான் என்றதும், நாம் பார்க்க வந்தது திகில் படமா அல்லது பலான படமா என்ற சந்தேகம் பலருக்கும் வந்து விடுவதை தவிர்க்க முடியாது. ஏனெனில் இங்கு திகிலுக்கு எந்த வேலையும் இல்லை. பாதி படத்தோடு அது காற்றோடு காணாமல் போய்விடும். மீதி படம் முழுக்க மசாலாதான்.
கதாநாயகிக்கு இருக்கும் வினோதமான நோய் இதில் இன்னொரு ரகம். எத்தனையோ வகையான உடல் பிரச்சினை குறித்து இதுவரை பல படங்கள் பேசியுள்ளன. ஆனால் இப்படி ஒரு உடல் பிரச்சினை குறித்தும், அதை காட்சிப்படுத்திய விதமும் இது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான படம் மட்டுமே என்று பறைசாற்றுகிறது. எனவே மக்களே பார்க்கணும் என்று முடிவு செய்தால் தனியாக பாருங்கள். குடும்பத்தோடு பார்த்தால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பாகாது.


Click it and Unblock the Notifications











