வீட்ல சாமி படம் இருக்குறதால கோயிலுக்கு போறதை நிறுத்துறோமா?.. மாரி செல்வராஜ் நறுக்குனு சொன்ன விஷயம்!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சமீபத்தில் சந்தித்த அவர் ஓடிடி தொடர்பாக பேசியிருப்பது ரசிகர்களை கவனிக்க வைத்துள்ளது.
இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ் பா. ரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.

சாதியின் அடிப்படையில் மக்களை ஒடுக்குவதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கும் விதமாக தனது படைப்புகளை வழங்கி வருகிறார் மாரி செல்வராஜ். தனுஷை வைத்து கர்ணன், உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
பக்கா மேக்கிங்: தனது முதல் படத்திலிருந்து அவர் இயக்கிய மூன்று படங்களிலும் அவருடைய மேக்கிங் ஸ்டைல் ரசிகர்களை கவரும் விதமாகவே உள்ளது. மாமன்னன் படத்தில் அந்த குளத்தில் கல் எறிந்து சிறுவர்களை அடித்து துன்புறுத்தும் காட்சி எல்லாம் பார்க்கும்போதே அந்தக் கல் நம் மீது விழுவது போல படமாக்கப் பட்டிருக்கும். பரியேறும் பெருமாள் படத்தில் கடைசியில் கிளைமாக்ஸில் வெறும் டீ கிளாஸை வைத்து பாடம் எடுத்தது எல்லாம் வேற லெவல். கர்ணன் படத்தில் கழுதை கால் கட்டப்பட்டு நடந்து கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் கால் கட்டை கழட்டி விட்டு அது மலையின் உச்சிக்கு ஓடும் காட்சிகள் மிரட்டல். மாமன்னன் படத்தில் வடிவேலுவை உட்கார சொல்லிவிட்டு உதயநிதி ஸ்டாலின் சண்டையிடும் காட்சிகள் தியேட்டரே தெறித்தன.
துருவ் விக்ரம் படம்: வாழை எனும் படத்தை இயக்கி முடித்துள்ள மாரிசெல்வராஜ் அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை இயக்கி வருகிறார். சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதலில் பாலா இயக்கத்தில் அதே படத்தை வர்மா என்கிற பெயரில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் அவருக்கு பிடிக்காத நிலையில் மீண்டும் ஆதித்ய வர்மா என வேறு ஒரு இயக்குநரை வைத்து படத்தை வெளியிட்டார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. அதன் பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அப்பா சியான் விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்தார். அந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
கபடி விளையாட்டு: மண்ணத்தி கணேசன் எனும் கபடி வீரரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பாக மாரி செல்வராஜிடம் கேட்டபோது இந்த படம் உண்மை மற்றும் புனைவு கதையாக உருவாகி வருகிறது என்றார். படத்தின் பட்ஜெட் குறித்த கேள்விக்கு, அது தனக்குத் தெரியாது என பதில் அளித்துள்ளார்.
ஓடிடி பற்றி: சமீப காலமாக பல பெரிய படங்களை கூட ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று பார்க்காமல் வீட்டிலேயே குடும்பத்துடன் ஓடிடியில் கன்று ரசித்து வருகின்றனர். அது தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன என்கிற கேள்விக்கு, ஒவ்வொரு வீட்டிலும் சாமி படங்கள் பூஜை அறையில் உள்ளன. அதற்காக மக்கள் கோயிலுக்கு செல்வது இல்லையா? அங்கே தானே அதிக கூட்டம் இருக்கிறது. அதுபோலத்தான் ஓடிடி ஒரு லைப்ரரி போல பிடித்த படத்தை திரும்பத் திரும்ப போட்டு பார்க்கலாம். ஆனால், புதிய படங்கள் வரும்போது மக்கள் கூட்டமாக தியேட்டருக்கு வந்து பார்ப்பதை தான் விரும்புகின்றனர் என மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











