மலையாள ஒடிடி நாயகனாக மாறிய மோகன்லால்.. அடுத்த 5 படமும் தியேட்டரில் இல்லையாம்!
திருவனந்தபுரம்: உலகம் முழுவதும் ஏகப்பட்ட நடிகர்கள் ஒடிடி தளங்களில் தங்களின் புதிய படங்களை ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
தமிழில் சூர்யா, தனுஷ், ஆர்யா, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களை நேரடியாக ஒடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மலையாளத்தில் மோகன் லால் ஒடிடி நாயகனாகவே மாறியுள்ளார் என்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கொரோனாவால் வந்த யோகம்
2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனாவின் உச்சம் இந்தியாவில் தலைவிரித்து ஆட தொடங்கிய நிலையில், இந்தியா முழுவதும் திரையரங்குகள் இழுத்து மூடப்பட்டன. அதற்கு முன்பாகவே பல புதிய படங்களை ஒடிடியில் வெளியிட முயற்சி செய்து வந்த ஒடிடி நிறுவனங்களுக்கு தியேட்டர்களின் முடக்கம் மிகப்பெரிய எழுச்சியாக அமைந்தது.

ஒடிடி ரிலீஸ்
புதிய படங்களை நேரடியாக ஒடிடியில் வெளியிட அமிதாப் பச்சன், மோகன் லால், சூர்யா, அக்ஷய் குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் முடிவெடுத்து ரிலீஸ் செய்ய ஆரம்பித்தனர். தமிழ் சினிமாவில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், சூர்யாவின் சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் கடந்த ஆண்டு வழி வகுத்த பாதை இந்த ஆண்டு சார்பட்டா பரம்பரை, ஜெய்பீம் வரை ஒடிடியில் படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்து வருகின்றன.

த்ரிஷயம் 2
இந்த ஆண்டு தொடக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான பிருத்விராஜ், பகத் ஃபாசில் உள்ளிட்ட பலரது படங்கள் ஒடிடி வெளியீடாக வெளிவர தொடங்கின. சிறு பட்ஜெட் படங்களையும் தாண்டி பெரிய பட்ஜெட் படங்களும் ஒடிடியில் வெளியாகி வெற்றி பெற முடியும் என்பது சாத்தியம் ஆனது.

மரைக்காயரும் ஒடிடியில்
கிட்டத்தட்ட தியேட்டர்களில் வெளியாக வேண்டும் என்பதற்காக ஒன்றரை ஆண்டுக்கு மேலாக ரிலீஸ் செய்யாமல் கிடப்பில் கிடக்கும் மோகன்லாலின் பிரம்மாண்ட திரைப்படமான மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் திரைப்படமும் ஒடிடியில் வெளியாக போவதாக அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

5 படங்களும்
இந்நிலையில், மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படம் மட்டுமல்ல மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் Bro Daddy, 12th Man, Alone மற்றும் ஒரு படமும் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மலையாள திரையுலகின் ஒடிடி நாயகனாகவே மோகன்லால் மாறியுள்ளார்.

என்ன காரணம்
ஆசிர்வாத் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் Bro Daddy, 12th Man, Alone உள்ளிட்ட படங்கள் தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டு இருந்ததாகவும் 21 நாட்கள் தியேட்டரில் வெளியான பின்னர் ஒடிடியில் வெளியிட அனுமதி வேண்டும் என கேட்டதற்கு வெறும் 80 தியேட்டர் ஓனர்கள் மட்டுமே சம்மதம் தெரிவித்ததாகவும் மற்ற தியேட்டர் ஓனர்கள் கோரிக்கையை நிராகரித்ததால் இனி தியேட்டரில் படங்களை வெளியிட முடியாது என்கிற முடிவை எடுத்து விட்டதாக ஆசிர்வாத் நிறுவன தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











