OTT: பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை.. டிஜிட்டல் தரத்தில் மே 1 முதல் ஓடிடியில் ரிலீஸ்
சென்னை: இன்றைய தமிழ் சினிமா உலகில் ரசிகர்கள் பலராலும் மெச்சப்படுகிற இயக்குநர்கள் பலரையும் உருவாக்கியவர் இயக்குநர் பாலுமகேந்திரா. பாலுமகேந்திரா பட்டறை என்றாலே அவர்களின் திரைப்படமாக்கல் என்பது யதார்த்தத்தை விட்டு விலகாத சினிமா பாணி. பாலா, வெற்றிமாறன், சீனு ராமசாமி, ராம் உள்ளிட்ட இயக்குநர்கள் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்கள்.
பாலுமகேந்திரா இயக்கத்தில் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று வரை உள்ளது. இப்படம் காலம் கடந்தும் கொண்டாடப்படும். டி. ஜி. தியாகராஜன் மற்றும் ஜி. சரவணன் தயாரிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய இந்த திரைப்படத்தை பாலுமகேந்திரா எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இளையராஜா இசையமைத்த இந்த படத்தின் "கண்ணே கலைமானே", "பொன்மேனி உருகுதே", "பூங்காற்று புதிதானது" போன்ற என்றென்றும் நிலைக்கும் பாடல்கள் தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. நெகிழ்ச்சியான கதை சொல்லல், கவிதை நயம் மிக்க காட்சியமைப்பு மற்றும் மறக்க முடியாத உச்சக்கட்ட காட்சியால் இந்த திரைப்படம் இந்திய சினிமாவின் மைல்கல்லாக போற்றப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது பெற்றார். நடிப்பில் சாதிக்க நினைப்பவர்கள் பலருக்கும் கமல் மற்றும் ஸ்ரீதேவி என இருவரும் இந்த படத்தில் நடித்த காட்சிகள் அனைத்தும் பல்கலைக்கழக வகுப்பு போல. இந்த படத்தில் ஸ்ரீதேவி தனது மறக்க முடியாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். துணை நடிகர்களாக ஒய். ஜி. மகேந்திரன், சில்க் ஸ்மிதா, பூர்ணம் விஸ்வநாதன் மற்றும் காந்திமதி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒரு வருசம் ஓடுன படம்: மூன்றாம் பிறை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், விருது ரீதியாகவும் மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் படத்திற்காக கமல்ஹாசன் தனது முதல் தேசிய விருதான சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். மேலும் பாலு மகேந்திரா சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதையும் வென்றார். இதனுடன் பிலிம்பேர் தென்னிந்தியாவின் சிறந்த இயக்குநர் விருது, பல தமிழக அரசு விருதுகள் உள்ளிட்ட பல்வேறு கௌரவங்களையும் பெற்றது. மேலும் இந்தியா முழுவதும் தொடர்ந்து ஒரு ஆண்டு காலம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி, அதன் மகத்தான வெற்றி மற்றும் நிலையான வரவேற்பை நிரூபித்தது.
ஓடிடி தளத்தில்: பல தசாப்தங்கள் கடந்த பின்னரும் மூன்றாம் பிறை இன்று வரை எவர்கிரீன் கல்ட் கிளாசிக்காகவும், சிறந்த நடிப்பு மற்றும் கதை சொல்லலின் அளவுகோலாகவும் திகழ்கிறது. டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்ட இந்த வெளியீடு, புதிய தலைமுறையினரும் பழைய ரசிகர்களும் இந்த அற்புதமான படைப்பை மீண்டும் ரசிக்கும் அரிய வாய்ப்பாக அமையும் என்பதால் டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை திரைப்படம் மே 1, 2026 முதல் Amazon Prime Video தளத்தில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications