Nayanthara Beyond The Fairy Tale - சர்ச்சைகளுக்கு இடையே வெளியானது நயன்தாரா ஆவணப்படம்
சென்னை: நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடந்த அவர்களது திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், ஷாலினி, மணிரத்னம், அட்லி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். சூழல் இப்படி இருக்க அவர்கள் திருமணம் பற்றியும், நயன் பற்றியுமான ஆவணப்படம் இன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது.
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் இத்துறைக்குள் வந்து இன்று தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். ஏகப்பட்ட பிரச்னைகள், சர்ச்சைகளை சந்தித்திருக்கும் அவர்; பல விஷயங்களை தைரியமாக செய்தார். இதன் காரணமாகவும் அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவரது நடிப்பில் கடைசியாக ஹிந்தியில் ஜவானும், தமிழில் அன்னபூரணி படமும் வெளியாகின.

விக்னேஷ் சிவனுடன் திருமணம்: இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார் நயன். கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்துவந்தனர். அதற்கு பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்தில் பாலிவுட் முதல் கோலிவுட்வரை இருக்கும் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். சில காதல் பிரேக்கப்புகளுக்கு பிறகு காதல் திருமணம் செய்துகொண்ட நயனை பார்த்து பலரும் மகிழ்ச்சிதான் அடைந்தார்கள்.
வாடகை தாய்: நயன் எது செய்தாலும் சர்ச்சையாக்கப்படுவது இருந்தது. அப்படி அவர் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றார். வழக்கம்போல் அதையும் சிலர் சர்ச்சையாக்கினார்கள். ஆனால் அதில் எந்தவிதமான விதி மீறலும் இல்லை என்று தமிழ்நாடு அரசு விசாரித்த பிறகு உறுதியானது. தங்களது குழந்தைகளுக்கு உயிர், உலக் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் விக்கி - நயன் ஜோடி. சூழல் இப்படி இருக்க Nayanthara Beyond The Fairy Tale என்ற பெயரில் ஆவணப்படமும் தயாரானது.
நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸ்: இதனை கௌதம் மேனன் இயக்கியிருக்கிறார். இன்று அந்த ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நயனின் பிறந்தநாளான இன்று அந்த ஆவணப்படம் ரிலீஸாகியிருக்கிறது. இப்படம் ரிலீஸானதிலிருந்து பலரும் அதனை பார்த்து மகிழ்ந்துவருகிறார்கள். மேலும் இந்தப் படம் மிக அருமையாக வந்திருப்பதாகவும்; யாருக்கும் தெரியாத நயனின் மறுபக்கம் இதில் அனைவருக்கும் தெரியவந்திருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
பெரும் சர்ச்சை: முன்னதாக, இந்த ஆவணப்படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் காட்சிகள், இசை உள்ளிட்டவைகளை பயன்படுத்த அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷிடம் நயனும், விக்கியும் அனுமதி கோரினார்கள். ஆனால் அதற்கு தனுஷ் அனுமதி அளிக்கவில்லை. மேலும் இதன் ட்ரெய்லரில் மூன்று விநாடி காட்சி ஒன்றை பயன்படுத்தியிருந்தார்கள். அதனையடுத்து பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார் தனுஷ். சூழல் இப்படி இருக்க நேற்று முன் தினம் தனுஷுக்கு மூன்று பக்க அளவில் கடிதம் ஒன்று எழுதி ஏகப்பட்ட விஷயங்களை நயன பேசியிருந்ததை அடுத்து பெரும் பரபரப்பு திரையுலகில் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











