OTT Review: தூக்கில் போட்டும் சாகாத ரங்கா.. திகார் ஜெயிலில் நடந்த சம்பவங்கள்! பிளாக் வாரண்ட் விமர்சனம்
சென்னை: நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ள பிளாக் வாரண்ட் சீரீஸ், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள வெப் சீரீஸ் ஆகும். உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ், திகார் ஜெயிலில் பணியாற்றிய சுனில் குமார் குப்தா எழுதிய, பிளாக் வாரண்ட்: கன்ஃபெசன்ஸ் ஆஃப் திஹார் ஜெயிலர் என்ற புத்தகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டாப் 10 இல் இந்த வெப் சீரிஸ் உள்ளது. இந்த வெப் சீரிஸ் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
1980களில் திஹார் ஜெயிலில் நடைபெற்ற பல திடுக்கிடும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, படுகொலைக்குப் பின், திஹார் ஜெயிலில் இருந்த சீக்கியர்களின் நிலை என்னவாக இருந்தது? அந்த பதற்றமான சூழலில் ஜெயிலராக இருந்த சீக்கியர்களுக்கும், குற்றவாளிகளாக இருந்த சீக்கியர்களுக்கும் இடையில் நடைபெற்றது என்ன என்பதைக் காட்சிப்படுதியுள்ளார்கள்.

ஜெயிலை ஜெயிலர்கள் நடத்துவது கிடையாது, ஜெயிலை நடத்துவது குற்றவாளிகள்தான் என்ற அதிர்ச்சியூட்டும் டயலாக்கோடு வெப் சீரிஸ் தொடங்குகின்றது. ப்ளாக் வாரண்ட் என்றால், தூக்கு தண்டனை என்று பொருள். சுனில் குமார் திஹாரில் பணியாற்றிய காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அதனை மிகவும் சிறப்பாக காட்சிப் படுத்தியுள்ளார்கள். மொத்தம் 5 தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. அதில் பில்லா மற்றும் ரங்கா ஆகியோர் தங்கள் மீது ஜோடிக்கப்பட்ட வழக்கில், தூக்கில் ஏற்றப்படுகிறார்கள்.
தூக்கு: இதில் பில்லா இறந்துவிடுகிறார். ஆனால் ரங்கா வெகு நேரம் ஆகியும் இறக்கவில்லை. ஆனால் அவர்களை தூக்கில் ஏற்றியே ஆகவேண்டும் என்பது நீதிமன்றத்தின் உத்தரவு என்பதால், சிறை வளாகத்திற்குள் ரங்கா சிறை அதிகாரிகளால் கொலை செய்யப்படுகிறார். இந்தக் காட்சியைப் பார்க்கும்போது, இப்படி எல்லாம் நடந்து கொள்வார்களா என அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

பணம்: குற்றவாளிகளாக திஹாருக்குள் இருப்பவர்களில் பலர் குற்றவாளிகளே இல்லை. எனவே அவர்களுக்கு முறையான சட்ட உதவி கிடைத்தால் அவர்களால் திஹாரில் இருந்து வெளியேற முடியும் என்பதால் அவர்களுக்கு சட்ட உதவி கிடைக்க தன்னால் முடிந்த அளவிற்கு முயற்சிகளை மேற்கொள்கிறார் சுனில். கைதிகளின் உணவுக்கு வரும் பொருட்களை விற்று, ஜெயிலர்கள் பணம் சம்பாதிப்பது, குற்றவாளிகளுக்கு வரும் கம்பளிகளை தாங்களே வெளிச்சந்தையில் விற்று பணம் பார்ப்பது, பணக்கார குற்றவாளிகளுக்கு எல்லா சௌகரியங்களையும் ஏற்பாடு செய்து கொடுத்து அவர்களிடம் பணம் பார்ப்பது என எல்லாவற்றையும் காட்சிப் படுத்தியுள்ளனர். குற்றவாளிகளுக்கு ஜெயிலர்களின் உதவியாலே போதைப்பொருட்கள் உள்ளே வருவது என பல உண்மைச் சம்பவங்களை தைரியமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

தகாத வார்த்தை: மொத்தம் 7 எபிசோட்களைக கொண்ட இந்த வெப் சீரிஸை மிகவும் சிறப்பான முறையில் விக்ரமாதித்ய மோத்வானி மற்றும் சத்யன்ஷு சிங் இயக்கியுள்ளனர். இந்த வெப் சீரிஸின் திரைக்கதை தொடங்கி, பின்னணி இசை என அனைத்துமே அட்டகாசம். கட்டாயம் பார்க்கலாம். வெப் சீரீஸில் தகாத வார்த்தைகள் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது, குழந்தைகளுடன் பார்க்க இது ஏதுவான வெப் சீரிஸ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications