OTT: மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் ஓடிடியில் எப்போ வருது தெரியுமா?.. தியேட்டர் வசூலை விட அதிகம்ப்பா!
சென்னை: மகேஷ் பாபு நடிப்பில் கடந்த சங்கராந்திக்கு வெளியான குண்டூர் காரம் திரைப்படம் ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக போகிறது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியானது. மகர சங்கராந்தியை முன்னிட்டு மகேஷ் பாபு, ஸ்ரீலீலா, மீனாக்ஷி சவுத்ரி, ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான குண்டூர் காரம் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.
வெறும் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஹனுமான் திரைப்படம் மகேஷ் பாபு படத்தை எல்லாம் மதிக்காமல் ஆஞ்சநேயர் இருக்க பயமேன் என ரிலீஸ் செய்து 300 கோடி வசூலை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது.

பூஜா ஹெக்டே நீக்கம்: திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடித்து வெளியான அலா வைகுந்தபுரமுலோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதே போல நமக்கும் ஒரு படம் கிடைக்கும் என அந்த இயக்குநர் உடன் மகேஷ் பாபு கூட்டணி வைத்தார். புட்ட பொம்மா பாடல் மூலம் பிரபலமான பூஜா ஹெக்டேவையே ஹீரோயினாக போட்ட நிலையில், ராதே ஷ்யாம், பீஸ்ட் என அவர் நடித்த படங்கள் எல்லாம் சொதப்பி வந்த நிலையில், அதிரடியாக பூஜா ஹெக்டேவை படத்தில் இருந்து நீக்கி விட்டார் மகேஷ் பாபு. அது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
ஓடவே இல்லை: பூஜா ஹெக்டேவை தூக்கி விட்டால் தனது படம் ஓடிவிடும் என தப்புக் கணக்கு போட்ட மகேஷ் பாபுவுக்கு இந்த சங்கராந்தியில் சரியான படத்தை ரசிகர்கள் புகட்டி விட்டனர். ஃபேமிலி டிராமா எனும் பெயரில் வெளியான குண்டூர் காரம் விஜய்யின் வாரிசு மெகா சீரியலை விட மோசமாக இருக்கே என விமர்சனங்கள் பறந்த நிலையில், படம் படுதோல்வியை சந்தித்தது.
பட்ஜெட்டை விட வசூல் குறைவு?: மகேஷ் பாபுவின் சம்பளமே 85 கோடி முதல் 100 கோடி எனக் கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாக 200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் வெளியாகி 155 கோடி ரூபாய் தான் வசூல் ஈட்டியதாக பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் தெரிவித்தனர். ஆனால், படம் 200 கோடி வசூல் செய்து விட்டதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டாலும், படம் பிரேக் ஈவனை எட்டவில்லை என்றும் ஃபிளாப் என்றும் போட்டுத் தாக்கி விட்டனர்.
ஓடிடி ரிலீஸ்: கடந்த ஜனவரி 12ம் தேதி வெளியான மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் ஹனுமான் படத்திற்கு முன் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் பிப்ரவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலீலாவின் அந்த குத்தாட்டத்திற்காக படத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் இந்த படம் ஓடிடியில் வெளியாக காத்திருக்கிறது.
இத்தனை கோடியா?: இந்தியாவிலேயே மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் வசூல் செய்யாத தொகையை நெட்பிளிக்ஸ் கொடுத்து இந்த படத்தை வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகபட்சமாக 120 கோடி ரூபாய் கொடுத்து நெட்பிளிக்ஸ் இந்த படத்தை வாங்கி உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீப காலமாக ரிலீஸ் ஆகும் படங்களை எல்லாம் காப்பாற்றுவதே டிஜிட்டல் ரைட்ஸ் தொகை தான் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











