நயன்தாரா படத்தால் 50 கோடி ரூபாய் நஷ்டம்?..தலையில் கை வைத்த ஓடிடி நிறுவனம்?..பிரபலம் இப்படி சொல்றாரே?
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக 20 வருடங்களுக்கும் மேல் இருப்பவர் நயன்தாரா. இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணமாகி, குழந்தைகள் பெற்ற பிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார். அதில் அவருடன் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள். நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
ஐயா படத்தில் தனது தமிழ் திரையுலக பயணத்தை ஆரம்பித்த நயன்தாரா தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக குறுகிய காலத்திலேயே வந்துவிட்டார். அப்படிப்பட்ட நிலைமையில்தான் அவருக்கு இரண்டு காதல் தோல்விகள் ஏற்பட்டன. அந்தத் தோல்விகள் அவரை கொஞ்ச காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்க செய்தது. அதனையடுத்து மீண்டும் திரையுலகுக்கு வந்த அவர் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளையும், ரோல்களையும் தேர்ந்தெடுத்து நடித்தார்.
விக்னேஷ் சிவனுடன் காதல்: அப்படி நானும் ரௌடிதான் திரைப்படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும், நயனுக்கும் காதல் மலர்ந்தது. அந்தக் காதலோடு சில வருடங்கள் இரண்டு பேரும் லிவிங் டூ கெதரில் இருந்தார்கள். பிறகு மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்த அவர் வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களை பெற்றார். மேலும் ஹிந்தியிலும் ஜவான் திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியிருக்கிறார். மேலும் சில ஹிந்தி படங்களிலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நயனை சுற்றி பிரச்னைகள்: திருமணத்துக்கு பிறகு நடித்துவரும் அவரை சுற்றி சில பிரச்னைகளும் எழுந்திருக்கின்றன. அவற்றில் முதன்மையானது அவருக்கும் தனுஷுக்கும் இடையே நடந்த பிரச்னை. நயன்தாரா பற்றிய ஆவண படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் சில க்ளிப்பிங்குகளை பயன்படுத்தும் விஷயம் தொடர்பாக இரண்டு பேருக்கும் முட்டிக்கொண்டது. தனுஷ் அனுமதி தராவிட்டாலும் சில நொடி காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் கடுப்பான தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமில்லை: தனுஷுடனான பிரச்னை மட்டுமின்றி அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய விஷயமும் பூதாகரமானது. அவருக்கு பலரும் தங்களது கண்டனத்தை எழுப்பினர். மேலும் அதே பேட்டியில் சந்திரமுகி படத்தில் தான் நடித்தபோது ரஜினிகாந்த் பெரிய சூப்பர் ஸ்டார் என்று தனக்கு தெரியாது என சொல்லி அடுத்த சர்ச்சையை கிளப்பினார். இப்படி கடந்த சில காலமாகவே அவருக்கு பிரச்னை மேல் பிரச்னை வந்துகொண்டிருக்கிறது.
மூக்குத்தி அம்மன் 2: சூழல் இப்படி இருக்க சுந்தர். சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். படத்தின் பூஜையில் மீனாவை அவமானப்படுத்திவிட்டார் என்பதில் தொடங்கி; ஷூட்டிங்கின்போது நயனுக்கும் சுந்தர்.சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுவிட்டதாகவும் தொடர்ந்து பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுந்தர். சியும் இதுதொடர்பாக பேசுவதற்கு மறுத்துவிட்டார்.
நெட்ஃப்ளிக்ஸுக்கு நஷ்டமா?: இந்நிலையில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "நயன்தாரா நடித்திருந்த டெஸ்ட் திரைப்படத்தை 55 கோடி ரூபாய் கொடுத்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியது. ஆனால் படத்துக்கு ரசிகர்களிடம் போதிய வரவேற்பு இல்லை. அதன் காரணமாக 50 கோடி ரூபாய்வரை அந்த நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











