ஜூலை 3 ரெடியா மக்களே.. ஓடிடியில் வரப்போகுது ‘பிரிதம் அண்ட் பெட்ரோ’.. தமிழ் டப்பிங்கும் இருக்கு!
மும்பை: பார்வையாளர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்குப் பிறகு, ஜியோஹாட்ஸ்டார் இன்று 'பிரிதம் & பெட்ரோ' தொடரின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நகைச்சுவை, மர்மம், குழப்பம் மற்றும் எதிர்பாராத கூட்டணிகளுடன் கூடிய இந்தத் தொடர், விறுவிறுப்பான அனுபவத்தை வழங்கத் தயாராக உள்ளது.
கோவாவின் வண்ணமயமான பின்னணியில் உருவாகியுள்ள 'பிரிதம் & பெட்ரோ' தொடர், முற்றிலும் மாறுபட்ட இருவேறு மனிதர்கள் விசித்திரமான சூழ்நிலைகளின் காரணமாக இணைவதைச் சித்திரிக்கிறது. கதையின் நாயகர்களான பெட்ரோ, தனது உள்ளுணர்வை மட்டுமே நம்பிச் செயல்படும் ஒரு பழைய பாணி காவலர்; பிரிதம், நவீன தொழில்நுட்ப அறிவுகொண்ட ஒரு கூர்மையான இளைஞர். இவர்கள் இருவரும் தங்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட, கணிக்க முடியாத ஒரு பெரிய மர்மத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். இவர்களின் பயணம் தொடரும்போது ரகசியங்கள் ஆழமாவதுடன், பரஸ்பர நம்பிக்கையும் சோதிக்கப்படுகிறது.

ராஜ்குமார் ஹிரானி உருவாக்கியுள்ள இந்தத் தொடரை, பிரபல திரைப்பட இயக்குநர் அவிநாஷ் அருண் இயக்கியுள்ளார். அர்ஷத் வார்சி, விக்ராந்த் மாஸ்சி, விர் ஹிரானி, மோனா சிங் மற்றும் போமன் இரானி ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் தொடர் ராஜ்குமார் ஹிரானியின் தனித்துவமான மனிதநேயம், நகைச்சுவை, மர்மம் மற்றும் சமகாலக் கருத்துக்களை உள்ளடக்கி, ஸ்ட்ரீமிங் தளப் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய கதையாடல் அனுபவத்தை வழங்குகிறது.
ஆலோக் ஜெயின், தலைவர் பேசும்போது:
"சிறந்த கதைகள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமேயானதாக இருக்கக் கூடாது; அது அனைவரையும் சென்றடைய வேண்டும். அதை நோக்கியே எங்களது செயல்பாடுகள் அமைந்துள்ளன. ஒட்டுமொத்த நாடும் பொழுதுபோக்குக் கருத்துக்களை நுகரும் விதத்தையே நாங்கள் மாற்றி வருகிறோம். இது தினசரி பயணம், மாலை நேர ஓய்வு மற்றும் குடும்பத்தினர் ஒன்றுகூடும் தருணங்கள் என மக்களின் அன்றாட வாழ்க்கையோடு கலந்த ஒன்றாக மாறி வருகிறது. சிறந்த கதாபாத்திரங்கள் திரை மறைந்த பிறகும் நம் நினைவில் வாழும். 'பிரிதம் & பெட்ரோ' தொடரில் பார்வையாளர்கள் அத்தகைய மறக்க முடியாத இரு கதாபாத்திரங்களைக் காண்பார்கள். பல்வேறு தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்த ராஜ்குமார் ஹிரானியை ஸ்ட்ரீமிங் உலகிற்கு அழைத்து வருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இன்றைய பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ற வகையிலான கதையம்சத்தைக் கொண்டுள்ள 'பிரிதம் & பெட்ரோ' தொடர், ஜியோஹாட்ஸ்டாரின் தரத்திற்கு மிகச் சிறந்த சான்றாகும்."
ராஜ்குமார் ஹிரானி பேசும்போது:
"இந்தக் கதையில் என்னை மிகவும் கவர்ந்தது அதன் மையக் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுதான். பிரிதமும் பெட்ரோவும் முற்றிலும் வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்தவர்கள்; வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதத்திலும் மாறுபட்டவர்கள். ஆனால், அவர்கள் இருவரும் இணைந்து ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மனிதர்களிடையே உள்ள முரண்பாடுகள், பலவீனங்கள் மற்றும் அவர்கள் உருவாக்கிக் கொள்ளும் எதிர்பாராத உறவுகள் எப்போதும் என்னை ஈர்க்கக்கூடியவை. இத்தொடர் அவற்றையெல்லாம் விரிவாக ஆராய எனக்கு வாய்ப்பளித்தது. இத்தொடரை பார்வையாளர்கள் ஜியோஹாட்ஸ்டாரில் கண்டு ரசிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்."
அவிநாஷ் அருண் பேசும்போது:
"'பிரிதம் & பெட்ரோ' கதை என்னை ஈர்த்ததற்குக் காரணம், அது பார்வையாளர்களைத் தொடர்ந்து ஆச்சரியப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பதால் தான். நகைச்சுவை மற்றும் குழப்பங்கள் நிறைந்திருந்தாலும், மனித உறவுகளின் ஆழத்தைப் பேசும் கதையாக இது அமைந்துள்ளது. பார்வையாளர்களைத் தங்களுக்குள் இழுத்துக்கொள்ளும் அதே வேளையில், சிறந்த பொழுதுபோக்கையும் உணர்வுப்பூர்வமான தாக்கத்தையும் தரும் உலகை உருவாக்க நாங்கள் முயன்றிருக்கிறோம். சிறந்த திறமை வாய்ந்த நடிகர்களுடன் இணைந்து இந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தது திருப்திகரமான அனுபவமாக இருந்தது."
அர்ஷத் வார்சி பேசும்போது:
"பெட்ரோ என்பவன் எதையும் அதிகம் யோசிக்காத ஒரு நபர். தனது உள்ளுணர்வு மற்றும் மனதிற்குப் பட்டதைச் செய்துவிட்டு, தேவையில்லாத பல சிக்கல்களில் மாட்டிக்கொள்வதுதான் அவனது குணம். இந்தக் கதையில் உள்ள குழப்பம், நகைச்சுவை மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. பார்வையாளர்கள் இந்தத் தொடரை மிகவும் ரசித்துப் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்."
விக்ராந்த் மாஸ்சி பேசும்போது:
"பல அடுக்குகள் கொண்ட கதையாக இருந்தாலும், மிகவும் சுவாரசியமான பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டுள்ளதே இத்தொடரில் நான் நடிக்க முக்கியக் காரணம். இதில் நகைச்சுவை, மர்மம், உணர்ச்சி மற்றும் எதிர்பாராத பல திருப்பங்கள் நிறைந்துள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு தனித்துவமான பின்னணியும் பயணமும் இருப்பது இக்கதையை மேலும் உயிரோட்டமுள்ளதாக மாற்றுகிறது. இத்தகைய தனித்துவமான கதையில் நடித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது."
விர் ஹிரானி பேசும்போது:
"இத்துறை சார்ந்த சிறந்த நடிகர்கள் மற்றும் கதையாசிரியர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதற்குக் கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பாகவே இந்தப் பயணத்தைக் கருதுகிறேன். படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அர்ஷத் சாரின் இயல்பான நகைச்சுவை உணர்வு, விக்ராந்தின் துல்லியமான கவனம், மோனா மேடத்தின் அன்பான குணம் மற்றும் இயக்குநர் அவிநாஷ் சாரின் வழிகாட்டுதல் என அனைத்தும் சிறந்த பாடங்களாக அமைந்தன. ஒரு நடிகனாக என்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள இதைவிட ஒரு சிறந்த களம் கிடைத்திருக்க முடியாது. 'பிரிதம் & பெட்ரோ' உலகைப் பார்வையாளர்கள் திரையில் காணும் தருணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்."
நகைச்சுவை, மர்மம், உணர்ச்சி மற்றும் சாகசங்களை உள்ளடக்கிய 'பிரிதம் & பெட்ரோ' தொடர், ஒட்டுமொத்தப் பார்வையாளர்களுக்கும் சிறந்ததொரு பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது. ஜூலை 3 முதல், ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் மட்டும் 'பிரிதம் & பெட்ரோ' தொடரைக் கண்டு மகிழுங்கள்.


Click it and Unblock the Notifications