Raakh Review: ’ராக்’ வெப்சீரிஸ் விமர்சனம்.. காதலர் தினம் நடிகையின் கதிகலங்க வைக்கும் சீரிஸ்!
சென்னை: காதலர் தினம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை சோனாலி பிந்த்ரே அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ராக்' (Raakh) வெப்சீரிஸ் அமேசான் பிரைமில் தமிழ் டப்பிங்கில் வெளியாகி ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளது.
1970களின் பிற்பகுதியில் டெல்லியை உலுக்கிய இரண்டு பதின்ம வயது சகோதரர்களின் கொடூரமான கொலையையும், நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பில்லா - ரங்காவின் தூக்குத்தண்டனையையும் மையமாக வைத்து உருவாகியுள்ள இணையத் தொடர் தான் 'ராக்' (Raakh). எட்டு எபிசோடுகள் கொண்ட இத்தொடர், ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அதை அதே காலகட்ட பின்னணியில் புனைகதை வடிவில் தர முயன்றுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான 'பிளாக் வாரண்ட்' ஆவணப்படத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான பெயர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், அனுஷா நந்தகுமார் மற்றும் சந்தீப் சாகேத் எழுதி, புரோசித் ராய் இயக்கியுள்ள இந்தத் தொடரில் கதாபாத்திரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டது ஏன் என்ற கேள்வி படம் முழுக்க எழுகிறது.
1978ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த இந்தக் கொடூரச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட 'ரிட்ஜ்' பகுதிக்குப் போகவே மக்கள் அஞ்சினர். தற்செயலாக காரில் ஏறிய அந்த அண்ணன்-தங்கைக்கு நேர்ந்த விபரீதம் பார்ப்பவர்களைப் பதற வைக்கிறது. இதில் பலியான சுமன் (திவ்யா சர்மா), சாஹில் (விஹான் சர்மா) கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் கச்சிதமாகப் பொருந்துகிறார்கள். இவர்களின் பெற்றோர் கதாபாத்திரங்களில் நடித்த அமீர் பஷீரின் நடிப்பு, சோனாலி பிந்த்ரேவை விட மிகச் சிறந்த முறையில் சோகத்தைக் கடத்துகிறது. காதலர் தினம் படத்தில் பார்த்தவரா இப்படி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் என எண்ணத் தோன்றுகிறது.
இந்தத் தொடரின் பெரும் பலமாகத் திகழ்வது, புலனாய்வு அதிகாரியாக வரும் அலி ஃபசல் (ஜெய்பிரகாஷ் ஜாதவ்) தான். சாதிய மற்றும் அதிகார வர்க்க சவால்களை எதிர்கொண்டு, தனது முதல் பெரிய வழக்கைக் கையாளும் அவரது நேர்த்தியான நடிப்பு அபாரம்.

மேலும், குற்றவாளிகளாக வரும் பாபு (ஆகாஷ் மகிஜா) மற்றும் ரஜ்ஜோ (ரமன்தீப் யாதவ்) ஆகிய இருவரின் மனநிலை, வன்முறைப் போக்கு மற்றும் அவர்களுக்குள் இருக்கும் விசித்திரமான பிணைப்பு ஆகியவற்றை இயக்குநர் மிக ஆழமாகக் காட்டியுள்ளார். எந்த ஒரு காரணமும் இன்றி இயல்பாகவே வன்முறை குணம் கொண்ட ஒருவனாக பாபுவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் டப்பிங்கில் இருந்தால் அதிகளவு ஆபாச வசனங்கள் இவர்கள் இருவரையும் காட்டும் போதெல்லாம் வருவதால், குழந்தைகளுடன் இந்த சீரிஸை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள்.
ஓய்வு பெற்ற எளிய காவல்துறை அதிகாரியாக வரும் ராகேஷ் பேடியின் நடிப்பு நெஞ்சைத் தொடுகிறது. சாதி மற்றும் வர்க்க அடையாளங்களால் முடக்கப்பட்ட அவரது வேதனை, அலி ஃபசலுடனான காட்சிகளில் சிறப்பாக வெளிப்படுகிறது. பார் நடனக் கலைஞராக வரும் முகுந்த் பாலின் கதாபாத்திரம், ஏழைகளின் வாழ்வாதாரப் போராட்டத்தைக் காட்டுகிறது.
எனினும், புலனாய்வு பத்திரிகையாளராக வரும் அன்ஷுல் சவுகானின் கதாபாத்திரம் கதைக்கு எந்தப் பங்களிப்பையும் தரவில்லை. அத்துடன், கதையை இழுப்பதற்காக வைக்கப்பட்டுள்ள தேவையற்ற வன்முறைக் காட்சிகளும், கெட்ட வார்த்தைகளும் பார்ப்பவர்களின் பொறுமையைச் சோதிக்கின்றன. ஒரு உண்மைச் சம்பவத்தின் தீவிரத்தைக் குறைத்து, வெறும் பரபரப்பிற்காக மட்டுமே இத்தகைய வன்முறைகள் திணிக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்வியோடு இந்த சீரிஸ் முடிகிறது.
குழந்தைகளை வைத்திருப்பவர்களை கண்டிப்பாக இந்த வெப்சீரிஸ் பயமுறுத்தி விடும். இப்படியெல்லாமா? கொடூரமாக கொலை செய்வார்கள் என்றும் நம் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் வைக்க வேண்டும் என்கிற அக்கறையையும் இந்த வெப்சீரிஸ் உணர்த்துகிறது. ஆனால், சமூகம் எந்தளவுக்கு கெட்டுப் போயுள்ளது என்பதை தோலுரித்துக் காட்டியிருப்பது பதைபதைக்க வைக்கிறது.


Click it and Unblock the Notifications