விவாகரத்து ஆனவரை அடம்பிடித்து திருமணம் செய்துக் கொண்ட ராஜமெளலி.. ரமா ராஜமெளலியின் கல்யாண கதை!
ஹைதராபாத்: இந்திய சினிமாவின் நம்பர் ஒன் இயக்குநர் என்றால் இப்போதைக்கு ராஜமெளலி தான் என யாரைக் கேட்டாலும் சொல்லி விடுவார்கள். ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூனே ராஜமெளலி பாராட்டி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள Modern Masters எனும் டாக்குமென்ட்ரி படத்தில் பேசியுள்ளார்.
ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் கோல்டன் குளோப், ஆஸ்கர் விருதுகளையே அள்ளிக் குவித்த ராஜமெளலியின் வாழ்க்கைப் பற்றியும் அவரது படங்கள் குறித்தும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மாடர்ன் மாஸ்டர்ஸ் எனும் டாக்கு டிராமா வெளியாகி உள்ளது.

அதில், ராஜமெளலியின் மனைவி ரமா ராஜமெளலி பற்றியும் அவரது முதல் திருமணம் குறித்த தகவல்களும் கார்த்திகேயா ராஜமெளலியின் தத்துப்பிள்ளை என்கிற தகவல்களையும் விளக்கி சொல்லியிருக்கிறது.
பிரம்மாண்ட இயக்குநர்: தமிழ் சினிமாவில் இருந்து ஷங்கர் பிரம்மாண்ட இயக்குநராக பல வருடங்களுக்கு முன்பே உருவாகி பல வெற்றிப் படங்களை கொடுத்து அசத்தினார். ஹாலிவுட் தரத்திலான ரோபோ படங்களை எந்திரன், 2.0 என வழங்கினார். ஆனால், மகதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்கள் மூலம் உலகளவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி தெலுங்கு திரையுலகின் மார்க்கெட்டையும் விண்ணுக்கு உயர்த்தி பிரம்மாண்ட இயக்குநராக ராஜமெளலி தனது பெயருக்கு ஏற்றவாறே ராஜாவாக கிங் மேக்கராக மாறியுள்ளார்.

விவாகரத்தானவர் மீது காதல்: ராஜமெளலி கடந்த 2001ம் ஆண்டு ரமா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆரம்பத்தில், ராஜமெளலியின் புரொபோஸலை ரமா ஏற்றுக்கொள்ளவில்லையாம். அதற்கு காரணம் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தும் ஆகியிருந்தது. கூடவே ஒரு மகனும் அவருக்கு இருந்தார். காஸ்ட்யூம் டிசைனராக தீயாக வேலை செய்யும் ரமாவின் ஆற்றலை கண்டு வியந்துப்போன ராஜமெளலிக்கு அவர்மீது காதல் வந்த நிலையில், அவரைத்தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என தீவிரமாக தொடர்ந்து ரமாவிடம் காதல் அம்புகளை வீசித்தான் ராஜமெளலி திருமணம் செய்துக் கொண்டுள்ளார் என அந்த ஆவணப்படத்தில் ராஜமெளலி மற்றும் ரமா ராஜமெளலி தங்களின் திருமணம் எப்படி நடைபெற்றது என்பது குறித்து கூறியுள்ளனர்.
குழந்தைகள் தத்தெடுப்பு: ரமாவுக்கும் அவரது முன்னாள் கணவருக்கும் பிறந்த மகன் தான் கார்த்திகேயா. ராஜமெளலி தனது சொந்த மகனாகவே அவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். சிறு வயதில் இருந்தே ராஜமெளலியின் படங்களில் பணியாற்றி வரும் கார்த்திகேயா லைன் புரொட்யூசராக உள்ளார். மேலும், ராஜமெளலி மற்றும் ரமா மயூகா எனும் மகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். கார்த்திகேயா நடிகர் ஜகபதி பாபுவின் உறவினர் பெண்ணான பூஜா பிரசாத் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

மைத்துனர் கீரவாணி: ராஜமெளலியின் மைத்துனர் தான் இசையமைப்பாளர் கீரவாணி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆர்ஆர்ஆர் படத்துக்கு "நாட்டு நாட்டு" பாடலை இசையமைத்து கோல்டன் குளோப் விருதுகளையும் ஆஸ்கர் விருதுகளையும் வென்றவர் கீரவாணி தான். ராஜமெளலியின் ஒட்டுமொத்த குடும்பமே அவரது படங்களில் பணியாற்றி வருகின்றனர்.
கடவுள் நம்பிக்கை இல்லை: கடவுள் கதாபாத்திரங்களை மையமாக வைத்து தனது படங்களின் ஹீரோக்களை உருவாக்கி வரும் ராஜமெளலிக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றும் ராமரை விட தனக்கு ராவணன் தான் பிடிக்கும் என ராஜமெளலி கூறியுள்ளார். ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து ராஜமெளலி இயக்கவுள்ள பிரம்மாண்ட படத்திற்கு 'கோல்ட்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.



Click it and Unblock the Notifications











