பிரிட்ஜர்டன் வெப்சீரிஸில் ரஜினி, கமல், விஜய், அஜித்தெல்லாம் நடிச்சா எப்படி இருக்கும்.. இதோ பாருங்க!
சென்னை: ஹாலிவுட் படமான பார்பி, கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப்சீரிஸ்களில் தமிழ் சினிமா நடிகர்கள் நடித்தால் எப்படி இருக்கும் என ஏற்கனவே ஏஐ எடிட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. அந்த வரிசையில் தற்போது நெட்பிளிக்ஸ் ரசிகர்களை அதிகம் கவர்ந்த பிரிட்ஜர்டன் (Bridgerton) ஓடிடி வெப்சீரிஸில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என்கிற ஏஐ எடிட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றன.

தியேட்டருக்கு சென்று படம் பார்த்த ரசிகர்கள் அதன் பின்னர் டிவியில் பண்டிகை நாட்களுக்கு போடப்படும் பெரிய படங்களை எக்கச்சக்க விளம்பரங்களுடன் சேர்ந்து பார்த்து வந்தனர். அதன் பின்னர் டெக், விசிடி என தொழில்நுட்ப வளர்ச்சியால் வீட்டிலேயே புதிய படங்களை போட்டு பார்க்க ஆரம்பித்தனர்.

அதன் அடுத்தகட்டமாக தற்போது ஓடிடி வந்து விட்ட நிலையில், உலக அளவில் பிரபலமான பல படங்களையும் வெப் தொடர்களையும் வீட்டில் இருந்தபடியே ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். ஸ்மார்ட் போன்களிலும் ஓடிடியில் படங்களை பார்க்க முடியும் என்பதால் எங்கே சென்றாலும் புதிய படங்களையும் 8 மணி நேரத்துக்கு மேல் ஓடக் கூடிய வெப்சீரிஸ்களையும் ஒரே மூச்சில் பார்த்து முடித்து விடுகின்றனர்.

பிரிட்ஜர்டன் வெப்சீரிஸ்: ஜூலியா குயின்ஸ் எழுதிய புகழ்பெற்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டதுதான் இந்த பிரிட்ஜர்டன் வெப் சீரிஸ். கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் இதுவரை 3 சீசன்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்தின் ராஜ குடும்பத்தினர் பற்றிய தொடராக இது பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. கிறிஸ் வேன் டூசன் இயக்கத்தில் உருவான இந்த வெப்சீரிஸை ஏகப்பட்ட ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமா நடிகர்கள்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சியான் விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மற்றும் கார்த்தி உள்ளிட்டோர்கள் பிரிட்ஜர்டன் வெப்சிரீஸின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையான ஏஐ எடிட்டுடன் வெளியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

ஏஐ எடிட்: சமீப காலமாக சினிமா பிரபலங்களை வைத்து ஏகப்பட்ட ஏஐ எடிட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அதில், பல விஷயங்கள் ரசிக்கும் படியாக உருவாக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நடிகர்களை பார்த்தாலும் வாவ் சொல்ல வைத்து விடுகிறது. ஆனால், அதே சமயம் சில ஏஐ எடிகள் நடிகைகளை வெகுவாக பாதித்து வருகின்றன.

டீப் ஃபேக் சர்ச்சை: நடிகை ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்ளிட்ட பிரபலங்கள் சமீப காலமாக டீப் ஃபேக் எடிட்களால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாலிவுட்டிலும் பல இளம் நடிகைகளின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு சர்ச்சைகளை கிளப்பி வருவதும் குற்ப்பிடத்தக்கது. தொழில்நுட்பம் ஒரு பக்கம் ஆக்கப்பூர்வமானதாக இருந்தாலும், இன்னொரு பக்கம் விஷமிகள் அதை வைத்து எப்படி மோசடி செய்யலாம் என்றும் மற்றவர்களை துன்புறுத்தலாம் என்றும் நினைத்து வருவது தவறான விஷயம் என்று கூறுகின்றனர். பிரிட்ஜர்டன் போன்ற வொர்த்தான சீரிஸ்களை நம்ம ஊரிலேயே தயாரிக்க பிரபலங்கள் முன் வரவேண்டும் எனக் கூறுகின்றனர். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ஹீராமண்டி அப்படியொரு கலை படைப்பாக பார்க்கப்பட்டது. அதே போல தமிழ்நாட்டில் உருவாக்கப்படுமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.






Click it and Unblock the Notifications











