ராஜமெளலி சாபம்.. 3 ஆண்டுகளாக வெற்றிக்குப் போராடும் ராம் சரண்.. Peddi ஓடிடி பிசினஸ் எப்படி?
சென்னை: தெலுங்கு திரையுலகில் சமீப காலமாகவே முன்னணி நடிகர்களுக்கு ராஜமெளலி சாபம் ரொம்பவே குடைச்சலை கொடுத்து வருகிறது. ராஜமெளலி இயக்கத்தில் நடித்து உலகளவில் பிரபலமாகும் நடிகர்கள் அதன் பின்னர், பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்க முயல்வதும், ஆனால், ராஜமெளலி படம் அளவுக்கு வொர்த்தாக படம் இல்லாத நிலையில், அந்த ஹீரோக்களின் படங்கள் படுதோல்வியை சந்திப்பதும் தெலுங்கு திரையுலகில் பெரிய சாபக்கேடாகவே மாறியுள்ளது என்கின்றனர்.
பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸ் இந்த பிரச்னையை ரொம்பவே சந்தித்தார். அவரை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இதை சமீப காலமாக சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராம் சரணின் அடுத்த படமான பெத்தி (Peddi) திரைப்படத்தின் ஓடிடி விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகி டோலிவுட் திரையுலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிரஞ்சீவி மகன்: நடிகர் ராம் சரண் யார் என்பதற்கு பெரிதாக அறிமுகம் ஒன்றும் தேவையில்லை. டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்திய சினிமாவில் பாலிவுட்டை தொடர்ந்து அதிகப்படியான வாரிசு நடிகர்கள் டோலிவுட்டில் தான் கொடி கட்டி பறந்து வருகின்றனர். 2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சிறுத்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராம் சரண் அடுத்த ஆண்டே ராஜமெளலி இயக்கத்தில் மகதீரா படத்தில் நடித்தார்.
ராஜமெளலி இயக்கம் முதல் ஆஸ்கர் வரை: மகதீரா திரைப்படம் ராம் சரணுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் பான் இந்தியா அளவில் அங்கீகாரத்தையும் அளித்தது. அதன் பின்னர் ராம் சரண் நடித்த படங்களில் அவருக்கு பெரிதாக கை கொடுத்த படம் என்றால் தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கான துருவா மற்றும் சுகுமார் இயக்கத்தில் வெளியான ரங்கஸ்தலம். ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து ராம் சரண் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் வரை சென்று அங்கீகாரம் பெற்றது. நாட்டுக்கூத்து பாடல் ஆஸ்கர் விருதையும் வென்றது.

ராஜமெளலி Curse: ராஜமெளலி சாபம் என டோலிவுட்டில் புதிய வார்த்தையையே உருவாக்கி வைத்துள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் பிரமாண்ட படங்களில் நடித்து விட்டு, அதன் பின்னர், மற்ற இயக்குநர்கள் படங்களில் நடிக்கும் போது அவருக்கு ஏற்பட்ட சிக்கல் போல, ராஜமெளலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தை முடித்து விட்டு ராம் சரண் தனது தந்தையுடன் இணைந்து நடித்த ஆச்சார்யா, ஷங்கர் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்கள் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டும் அந்த படங்கள் படுதோல்வியை சந்தித்தன.
பெத்தி ஓடிடி பிசினஸ்: ராஜமெளலி போல ஷங்கரும் தனக்கு பெரிய பிளாக்பஸ்டர் படத்தை கொடுப்பார் என எதிர்பார்த்த ராம் சரண், கேம் சேஞ்சர் படத்தின் தோல்வியால் ரொம்பவே மனமுடைந்து விட்டார். அடுத்ததாக அவர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடித்து வரும் பெத்தி படம் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி வெளியாகும் என இப்போதே கர்ச்சிப் போட்டு வைத்துள்ள நிலையில், சமீபத்தில், அந்த படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகபட்சமாக 110 கோடி ரூபாய் கொடுத்து வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேம் சேஞ்சர் தோல்விக்குப் பிறகும் ராம்சரண் மவுசும் மார்க்கெட்டும் குறையவில்லையே என தெலுங்கு சினிமா உலகமே வியப்பில் இருப்பதாக கூறுகின்றனர். பெத்தி படத்தின் பட்ஜெட்டும் 300 கோடி ரூபாயாம்.


Click it and Unblock the Notifications











