Inspector Avinash S2 Review: இன்ஸ்பெக்டர் அவினாஷ் சீசன் 2 விமர்சனம்.. ஓடிடியில் ஒர்த்தான சம்பவம்!
மும்பை: ரன்தீப் ஹூடா, ஊர்வசி ரவுடேலா நடிப்பில் உருவான 'இன்ஸ்பெக்டர் அவினாஷ் சீசன் 2' தற்போது ஓடிடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கிரைம் த்ரில்லர் மற்றும் அரசியல் கதையம்சம் கொண்ட பரபரப்பான இந்த வெப்சீரிஸில் பலரது எதிர்பார்ப்புகளையும் கடந்து, ஊர்வசி ரவுடேலா தனது நடிப்பின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இது சீசன் 2-வின் மிகப் பெரிய ஹைலைட்டாக மாறியுள்ளது. நீரஜ் பதாக் இயக்கத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ள இன்ஸ்பெக்டர் அவினாஷ் சீசன் 2 தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு சரியான வீக்கெண்ட் பிங்கோ வாட்ச்சாக அமைந்துள்ளது.
ரன்தீப் ஹூடா, அபிமன்யூ சிங், ஊர்வசி ரவுடேலா, அமித் சியால், ஷாலின் பானோட், ஃப்ரெடி தாருவாலா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தத் தொடரை நீரஜ் பதக் இயக்கியுள்ளார். ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியான 'இன்ஸ்பெக்டர் அவினாஷ் சீசன் 2', 45 நிமிடங்கள் கொண்ட 10 எபிசோட்களுடன் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. போலீஸ் கதாபாத்திரத்தில் ரன்தீப் ஹூடா முதல் சீனில் இருந்து கடைசியில் மெயின் வில்லன் என நினைத்து அரசியல்வாதியை கொன்று விட்ட பின்னரும் தனது உயர் அதிகாரியை கொன்றது யார்? அப்போ இவனை விட பெரிய வில்லன் இருக்கிறாரானா? என அடுத்த சீசனுக்கு லீடு கொடுக்கும் இடமெல்லாம் அட்டகாசம்.

ஒரு நடிகை கவர்ச்சியாக இருந்தால் அவரிடம் நடிப்புத் திறமை இருக்காது என்றோ, ஆன்லைனில் மீம் ஆனதால் அவரது திறமையை குறைத்து எடைபோடக் கூடாது என்றோ இத்தொடர் கூறுகிறது. பல ஆண்டுகளாகத் திரையில் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட நடிகைகளுக்கு, வெறும் தோற்றத்திற்கு அப்பால் கலைத் திறமை இல்லை என ரசிகர்கள் கருதுகின்றனர். இந்த எண்ணத்தைப் பொய்ப்பிக்கும் வகையில் 'இன்ஸ்பெக்டர் அவினாஷ் சீசன் 2' அமைந்துள்ளது. ஊர்வசி ரவுட்டேலாவின் நடிப்பு அந்தளவுக்கு ரசிகர்களை கவர்கிறது.
சலசலப்பு, சண்டை, அதிரடி, அநியாயத்தை எதிர்க்கும் ஒரு உறுதியான போலீஸ் அதிகாரி ஆகியவற்றைத் தனது பார்வையாளர்கள் விரும்புவார்கள் என்பதை இத்தொடர் உணர்ந்து அதே பாணியில் கதையை நகர்த்துகிறது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிஜவாழ்வு இன்ஸ்பெக்டர் அவினாஷின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இத்தொடர், முதல் சீசனுக்கு இணையான பரபரப்பைத் தக்கவைத்துள்ளது.

இந்த முறை கதை வெறும் குற்றங்களைத் தீர்ப்பதை விடவும் விரிவடைகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்குப் பின்னாலுள்ள அரசியல் மற்றும் குடும்ப கடமைக்கு இடையே ஒரு போலீஸ் அதிகாரியின் போராட்டம் என தொடர் ஆழமாகப் பயணிக்கிறது. அவினாஷுக்கு இப்போது அதிக மனப் போராட்டங்கள் உள்ளன, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை எல்லாம் வழங்கப்படும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் ஷாக் ஆகிவிடுகின்றனர்.
ரன்தீப் ஹூடா, இன்ஸ்பெக்டர் அவினாஷாகத் திரும்பி வந்துள்ளார். சிதைந்த மனிதர்களாக, அசாத்தியமான சூழ்நிலைகளில் போராடும் கதாபாத்திரங்களில் ஹூடா நிகழ்த்தும் நடிப்பு நம்ப முடியாத அளவுக்கு உண்மையெனத் தோன்றுகிறது. அவர் மற்ற முன்னணி நட்சத்திரங்களைப் போல புத்திசாலித்தனமாக ஒரு ஹீரோயிசத்தை வெளிப்படுத்தாமல், அதை உள்வாங்கிக்கொண்டு வெளிப்படுத்துகிறார். இது உண்மையிலேயே ஈர்க்கிறது.
திருநங்கையாக நடித்துள்ள வில்லன் நடிகர் அபிமன்யூ சிங் தனது நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்க்கிறார். அபிமன்யூ சிங்கிடம் தனது சீக்ரெட் ஏஜென்ட்டை திருநங்கையாக அனுப்பி வைத்து ரன்தீப் ஹூடா அவர் போடும் சதித் திட்டங்களை முறியடிக்கிறார். ஒரு கட்டத்தில் அபிமன்யூ சிங்கிற்கு அந்த விவகாரம் தெரிய வந்து அந்த நபரை கொடூரமாக கொல்வதும், கிளைமேக்ஸில் வரும் மகாபாரத் அத்தியாயத்தில் ரன்தீப் ஹூடாவின் டீமையே காலி செய்ய லாக்கப்பிற்குள் இறங்கும் இடமெல்லாம் வில்லத்தினத்தில் மிரட்டுகிறார். அடுத்த சீசனுக்கும் சூப்பரான லீடு கொடுத்து முடித்துள்ள நிலையில், கண்டிப்பாக இந்த வெப்சீரிஸ் ரசிகர்களை கவரும்.


Click it and Unblock the Notifications