துரந்தர் ஓடிடி உரிமம்.. ரஜினி, ஷாருக் படத்தை எல்லாம் ஓரங்கட்டி சாதனை.. இத்தனை கோடி விலையா?
மும்பை: ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி வெளியான துரந்தர் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. இதுவரை 870 கோடி ரூபாய்வரை அப்படம் வசூலித்திருப்பதாகவும், விரைவில் 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிடும் என்றும் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் துரந்தர் படத்தின் ஓடிடி உரிமம் பல நூறு கோடி ரூபாய்க்கு விலைக்கு போயிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், நடிகை தீபிகா படுகோனேவின் கணவருமான ரன்வீர் சிங் நடித்திருக்கும் படம் துரந்தர். ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரன்வீருடன் மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இப்படமானது கடந்த ஐந்தாம் தேதி வெளியான இப்படத்துக்கு வட மாநிலங்களில் ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது. இப்படத்தில் சாரா ஹீரோயினாக நடித்திருந்தார்.
பலரும் ஆச்சரியம்: தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்த தெய்வ திருமகள் படத்தில் அவருக்கு மகளாக நடித்த சாராதான் இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். சின்ன குழந்தையாக பார்த்த சாராவை இப்படத்தில் ஹீரோயினாகவும்; ரன்வீருடன் நெருக்கமாகவும் நடித்ததை பார்த்து ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் ஆச்சரியத்தில்தான் மூழ்கியது. நடிப்பிலும் தன்னை சாரா நிரூபித்ததால் இன்னும் பல வருடங்களுக்கு சக்சஸ்ஃபுல் ஹீரோயினாக வலம் வருவார் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

எப்படி இருக்கு படம்: இந்தியா மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த தாக்குதலை ரன்வீர் சிங் எப்படி முறியடிக்கிறார்; பாகிஸ்தானில் இந்திய உளவு அமைப்பான ரா செய்யும் விஷயங்களை ஒன்லைனை கொண்டு இப்படத்தை உருவாக்கியிருந்தார் இயக்குநர். பொதுவாக தேச பக்தி படங்களுக்கு வட மாநிலங்களில் ரெஸ்பான்ஸ் அதிக அளவு கிடைக்கும். அதேபோல் இந்தப் படத்துக்கும் கிடைத்த ரெஸ்பான்ஸ் காரணமாக படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
வசூல் வேட்டை: விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டது. படம் வெளியாகி 20 நாட்களை கடந்திருக்கும் சூழலில் இதுவரை மொத்தம் 870 கோடி ரூபாய்வரை உலக அளவில் படம் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. விரைவில் 1000 கோடி ரூபாய் வசூலையும் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காந்தாரா சாப்டர் 1ன் வசூலையும் துரந்தர் அசால்ட்டாக முறியடித்துவிட்டது. இதனால் இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற சாதனையையும் பெருமையையும் துரந்தர் பெற்றிருக்கிறது.
ஓடிடி உரிமம்: தியேட்டரில் ரெஸ்பான்ஸ் உச்சபட்சமாக கிடைத்திருப்பதால் இதன் ஓடிடி உரிமமும் பிரமாண்ட விலைக்கு வியாபாரமாகியிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி துரந்தர் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 200 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாகவும்; இந்தியாவிலேயே அதிக விலைக்கு ஓடிடி உரிமம் விற்ற படம் என்ற பெருமையையும் துரந்தர் பெற்றிருக்கிறது. இது ரன்வீர் ரசிகர்களிடம் உச்சக்கட்ட உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











