Operation Raavan Review : திருமண கோலத்தில் காணாமல் போகும் பெண்கள்.. பல மர்மங்கள் நிறைந்த திகில் படம்!
சென்னை: வெங்கடா சத்யா எழுதி இயக்கிய ஒரு கிரைம் தெலுங்கு திரைப்படம் தான் ஆபரேஷன் ராவன். இப்படத்தில் ரக்ஷித் அட்லூரி, சங்கீர்த்தன விபின், ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் 26 ஜூலை தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
ஒரு சிறிய கிராமத்தில் திருமண கோலத்தில் இருக்கும் பெண்கள் அடுத்தடுத்து காணாமல் போகிறார்கள். அவர்கள் அனைவரும் மாஸ்க் போட்டு இருக்கும் ஒரு மர்ம மனிதனால் கொல்லப்படுகின்றனர். அந்த மர்ம மனிதர் யாரு? எதற்காக இந்த பெண்களை கடத்தி கொலை செய்கிறான் என்பது தான் இந்த திரைப்படத்தின் கதை.

படத்தின் கதை : ஆப்ரேஷன் ராவன் படத்தின் கதை ஆரம்பிக்கும் போது ராதிகாவின் மகள் பிந்துவிற்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. விடிந்தால் திருமணம் நடக்க இருக்கும் நிலையில், மணப்பெண் காணாமல் போய்விடுகிறாள். அந்த பெண், மாஸ் அணிந்த ஒரு மர்ம நபர் முன், கால்கள் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்து இருக்க, அந்த மர்ம நபர், பிந்து என்ற பெண்ணை செஸ் விளையாட சொல்கிறான். இந்த விளையாட்டில் நீ ஜெயிச்சா நான் உன்ன விட்டுடுவேன். தோற்றுவிட்டால் நான் உன்னை கொன்னுடுவேன் என்று சொல்லி மிரட்டுகிறான். இந்த விளையாட்டில், பிந்து தோற்றுவிட அவன் அவளை கொன்றுவிடுகிறான்.
அடுத்தடுத்து கொலை: பிந்து கொலையைத் தொடர்ந்து, 9 பெண்கள் திருமண நேரத்தில் கடத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வர ஒட்டுமொத்த மீடியாவின் பார்வையும் இந்த கேஸ் பக்கம் திரும்பியதால், அப்பாவி ஒருவனை கைது செய்து, அவன் தான் சைக்கோ கொலைகாரன் என்று கூறி வழக்கை போலீசார் முடித்துவிடுகின்றனர். ஆனால், மீண்டும் அந்த கிராமத்தில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில், அந்த பெண் காணாமல் போய், பிணமாக கிடைக்க மொத்த போலீசாரும் திக்குமுக்காடி மீண்டும் அந்த சைக்கோ கொலைகாரனை தேடுகின்றனர்.

காணாமல் போன பிந்து: அந்த தொடர் கொலை குறித்து விசாரிக்க செய்தி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் அம்மணி மற்றும் ஆனந்தும் முயற்சி எடுத்து, முதன் முதலில் கொலை செய்யப்பட்ட பிந்துவின் வீட்டுக்கு வந்து ராதிகாவிடம், மகள் பிந்து குறித்து விசாரிக்கின்றனர். அப்போது ராதிகா, பிந்து ஒருவரை காதலித்து வந்தாள். அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினாள். நானும் அந்த திருமணத்துக்கு சம்மதம் சொல்லியதால் திருமணத்திற்கான எற்பாடுகள் நடந்தது. ஆனால், விடிந்தால் திருமணம் நடக்க இருந்த நிலையில் அவள் காணாமல் போய்விட்டதாக சொல்கிறாள். அந்த நேரத்தில் ராதிகாவின் வீட்டில் பிந்துவின் மாமா பூஜை ஒன்று செய்து கொண்டிருந்ததைப் பார்த்து ஆனந்த், இவர் யார் என்று விசாரிக்கிறான்.
சைக்கோ கொலைகாரன் யார்: இப்படி மர்ம மரணம் குறித்து விசாரணை ஒருபக்கம் சென்று கொண்டு இருக்க, அம்மணி மற்றும் ஆனந்தும் காதலித்து வருவதால், பெற்றோரிடம் சொல்லி இருவருக்கும் திருமண முடிவு எடுக்கின்றனர். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்க, விடிந்தால், திருமணம் என்று இருக்கும் நிலையில், அந்த மாஸ்க் போட்ட மர்ம ஆசாமி, அம்மணியை கடத்திவிடுகிறான். அம்மணியை காணாமல் ஆனந்த், பல இடத்தில் தேட, அம்மணி தன்னை யாரோ கடத்தி கார் டிக்கியில் வைத்து இருப்பதாக கூற, ஆனந்த் போலீஸ் துணையோடு அங்கு செல்கிறான். அப்போது, அந்த மாஸ்க் போட்ட மர்ம நபர் யார் என்ற ட்விஸ்ட் உடைகிறது.

ஒரு தலை காதல்: இந்த சைக்கோ கொலைகாரன், ராதிகாவின் தம்பி என்பது தெரியவருகிறது. அவன் பிந்துவை சிறுவயதில் இருந்தே, ஒரு தலையாக காதலித்து வந்துள்ளான். ஆனால், பிந்து தனது கல்லூரியில் படிக்கும் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து இருந்ததால், அவளை திருமணத்தன்று கடத்தி கொலை செய்து இருக்கிறான். மேலும், பிந்துவை கொலை செய்த பிறகு சைக்கோவாக மாறிய அவன், திருமண கோலத்தில் யாரைப்பார்த்தாலும், அது பிந்து என நினைத்துக்கொண்டு அவர்களை கடத்தி கொலை செய்து மகிழ்ச்சி அடைகிறான் என்பது தெரியவருகிறது. இதையடுத்து போலீசார் அவனை கைது செய்கின்றனர். அடுத்தடுத்த கொலை, பல திருப்பங்களுடன் இந்த திரைப்படம் பார்ப்பதற்கு சுவாரசியமாகவே இருந்தது. இந்த திரைப்படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











