’ஷியாம் சிங்கா ராய்’ மூவி ரிவ்யூ....ஓடிடியில் கலக்கும் நானியின் புதிய படம் தமிழில்
நடிகர் நானி நடிப்பில் தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்டு ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் 'ஷியாம் சிங்கா ராய்' . கமல்ஹாசன் நடித்த எனக்குள் ஒருவன் போன்ற கதையமைப்பு கொண்ட படம் என்றாலும் படம் எடுக்கப்பட்ட விதம், இரண்டாம் பாதியில் வரும் காதல் மனதை நெருட வைக்கிறது.
Recommended Video

நானி எனும் நாயகன்
நடிகர் நானி தனது வித்தியாசமான நடிப்பால் தெலுங்கு ரசிகர்களைத்தாண்டி தமிழ் பட ரசிகர்களையும் கவர்ந்துள்ள நடிகர். அவரது நடிப்பில் வெளிவந்துள்ள படம் 'ஷியாம் சிங்கா ராய்' . கடந்த மாதம் திரையரங்கில் வெளியான படம் நேற்றுமுதல் ஓடிடி தளத்தில் நெட் ஃபிளிக்ஸில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தின் கதை இதுதான்
படத்தின் கதை பெரிதாக ஒன்றுமில்லை. 1980 களில் கமல்ஹாசன், ஷோபனா, ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன் போன்ற கதை அமைப்புத்தான். அதில் முற்பகுதியில் கமல் பாடகராகவும், பிற்பாதியில் மார்ஷியல் ஆர்டிஸ்டாகவும் வருவார். இந்தப்படத்தில் நானி சினிமா இயக்குநராகவும், பிற்பாதியில் புரட்சிகர எழுத்தாளராகவும் வருகிறார். ஆனால் படம் எடுக்கப்பட்ட விதம் வசனங்கள், கேமரா, காட்சிப்படுத்திய விதம் ஷியாம் சிங்கா ராய் ரசிகர்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

நகைச்சுவையான முற்பகுதி
முற்பகுதியில் சினிமா இயக்குநராக வரும் நானி தான் எடுக்கப்போகும் குறும்படத்திற்கு கதாநாயகியை தேடுவதும், அதற்கான ஆடிஷன் காட்சிகளும் நகைச்சுவையாக உள்ளது. கதாநாயகியை கண்டுபிடித்தவுடன் அவரிடம் சம்மதம் கேட்டு கெஞ்சுவதும், எதற்கும் ஒப்புக்கொள்ளாத கதாநாயகியை கடைசியில் சிகரெட் பிடிப்பதை உங்க அப்பாகிட்ட சொல்லிடுவேன் என மிரட்டி நடிக்க வைப்பதும் சுவாரஸ்யமான காட்சி.

காதல் மலரும் தருணம்
குறும்படம் எடுக்கும்போதே நானியின் ஈடுபாட்டைப்பார்த்து கதாநாயகி க்ரித்தி ஷெட்டி அவர் மீது காதல் கொள்வதும், குறும்படம் வெற்றிகரமாக வந்ததால் புதுப்பட வாய்ப்பு கிடைப்பதும், அதற்கான ஸ்க்ரிப்டை இரவு முழுவதும் போராடி நானி எழுதி அதை பட தயாரிப்பாளர் அங்கிகரிப்பதும் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் இந்தக்காட்சி என்று நினைக்கும்போது அதுதான் படத்தின் பிரதான விஷயமாக பின்னர் மாறுகிறது.

காப்பிரைட்ஸில் கைதாகும் நானி
படவாய்ப்பு கிடைத்து காதலியும் கிடைத்தால் எப்படி இருக்கும், சந்தோஷத்தின் உச்சத்தில் குதிக்கிறார் நானி. காதலியுடன் தனிமையில் இருக்கும்போது ரோசி என பெயர் சொல்ல காதலி க்ரித்தி ஷெட்டி கோபடைந்து பிரிந்துச் செல்கிறார். படம் நன்றாக ஓடுகிறது, வெற்றிபெற்ற படத்தை இந்தியில் எடுக்க இந்திப்பட நிறுவனம் நானியை அணுகுகிறது. கூடுதல் சந்தோஷத்துடன் காதலியின் பரிசான சட்டையை அணிந்து மும்பையில் படநிறுவனத்துடன் கலந்துக்கொள்ளும் நானியை விழாவில் புகுந்து கைது செய்கிறது மும்பை போலீஸ் (காப்பி ரைட்ஸுக்கு கைது எல்லாம் செய்வார்களா?).
அதன் பின்னர் படம் வேகமெடுக்கிறது. படத்தின் இடையிடையே நானி மனதுக்குள் ஒலிக்கும் குரல் என்ன? படத்தின் கதையை வரிக்கு வரி காப்பி அடித்ததாக மும்பையின் பிரபல நிறுவனம் 10 கோடி ரூபாய் கேட்டு வழக்குப்போடுவதும், அது தன்னுடைய கதைதான் என நானி கூறுவதும் படத்தில் விறுவிறுப்பை கூட்டுகிறது.

ட்விஸ்டே இங்குதான்
அதன் பின்னர் நானி ஹிப்நாடிச சிகிச்சையில் முன் ஜென்மத்தில் நடந்ததாக பல திடுக்கிடும் உண்மையை சொல்கிறார் இதில் பல மர்மங்கள் விலகுகிறது. முன் ஜென்ம கதைதான் என்றாலும் அதில் இழையோடும் காதல் கதை நெஞ்சை வருடுகிறது. பிற்பாதியில் கொல்கொத்தாவில் புரட்சிகர எழுத்தாளராக வரும் நானியின் வாழ்க்கையில் நடந்தது என்ன? அவருக்கும் இயக்குநர் நானிக்கும் என்ன சம்பந்தம், நானி வழக்கிலிருந்து விடுபட்டாரா? என்பதுதான் மீதி கதை.

புரட்சிகர நாயகன் நானி
புரட்சிகர எழுத்தராக 1969 ஆம் ஆண்டு என அறிமுக காட்சியில் சந்திர சேகர் ஆசாத் போன்று முறுக்கு மீசை, எண்ணெய்போட்டு வாரிய தலைமுடி, மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டை, ராஜ் தூத் மோட்டார் சைக்கிள் என வருகிறார் நானி. காட்சி அமைப்புகளில் அந்த காலத்துக்கே அழைத்துச் செல்கிறார் கலை இயக்குநர். அறிமுக காட்சியில் தண்ணீருக்காக நிற்கும் தலித் மக்களுக்காக மேல்ஜாதிக்காரர்களை முறைக்கிறார் நானி.

கூர்மையான வசனங்கள்
ஒரு கட்டத்தில் தண்ணீர் எடுக்க விடாத கிணற்றுக்குள்ளே தலித் இளைஞரை தூக்கி போட்டு இப்ப தண்ணிக்குள் தாழ்த்தப்பட்டவன் விழுந்ததால் தண்ணீர் தீட்டுப்பட்டு விட்டது, தண்ணீரை குடிப்பது என்றால் குடியுங்கள் அல்லது சாகுங்கள் என சவால் விடுவதும், அவன் தீண்டத்தகாதவன் என்றால் அவன் சுவாசிக்கும் காற்றை நீங்கள் ஏன் சுவாசிக்கிறீர்கள் எனக்கேட்கிறார்.
பல இடங்களில் வசன வரிகள் கூராக உள்ளது. ஒரு தோட்டா ஒருத்தருக்குத்தான் வேலை செய்யும், ஒரு வார்த்தை லட்சம் பேருக்கு வேலை செய்யும் என ஆயுதப்போராட்டம் நடத்தும் நக்சலைட் ஒருவருக்கு ஜனநாயக போராட்டத்தின் வீரியத்தை வலியுறுத்தும் காட்சிகளில் வசனம் சிறப்பாக உள்ளது. இதுபோல் பல இடங்களில் வசனங்கள் புரட்சிகர எழுத்தாளராக காட்டுவதற்காக ஆங்காங்கே தூவப்பட்டுள்ளது.

அசத்தும் கலை இயக்குநர்
படத்தில் சனு ஜான் வர்கீஷின் ஒளிப்பதிவு அசத்துகிறது. படத்தின் ஆரம்பத்தில் நானியை காட்டும் காட்சிகளும், குறும்படக்காட்சிகளும், பிற்பாதியில் ஷியாம் சிங்கா ராயாக வரும் நானியை காட்டும் காட்சிகளும் 100% வித்தியாசத்தை காட்டுகிறார். 1970 களை படமாக்கிய விதமும், 50 ஆண்டுகளுக்கு முந்தைய கொல்கொத்தாவை அழகாக காட்டும் காட்சிகளும், சாய் பல்லவி, நானி காதல் காட்சிகளை படமாக்கியிருக்கும் விதமும், சிறிய படகில் கோதாவரி நதியின் நடுவில் சாய் பல்லவியிடம் காதலைச்சொல்லும் காட்சியிலும் கேமரா விளையாடுகிறது.

அடடா கேமராமேன்
ரோஜா பூக்கள் தோட்டத்தின் நடுவே சாய் பல்லவிக்கு புதிய பெயர் வைக்கும் காட்சியும், சாய் பல்லவி நடனக்காட்சிகளும் கேமராமேனுக்கு தனி மார்க் கொடுக்கலாம். சனு ஜான் வர்கீஷ் அற்புதமாக தனது கேமரா வித்தையை காட்டியுள்ளார். மிக்கி ஜே.மெயரின் இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. 1970 கள் கொல்கொத்தாவை காட்டும்போதும், சாய் பல்லவியின் நடனக்காட்சிகளிலும் இசை கலக்கல். அதிலும் ஷியாம் சிங்கா ராய் பாடல் படம் முடிந்த பின்னரும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

உருக வைக்கும் சாய்பல்லவி-நானி காட்சிகள்
தேவதாசி ஒழிப்பு முறையை பின்புலமாக காட்டி அதற்காக ஹீரோ போராடுவதாக காட்டுவதும், சாய் பல்லவியை பிரிந்து செல்லும் காட்சியில் திரும்ப வருவேன் என்று சொல்லும் காட்சியிலும், தான் கொல்லப்படும் காட்சியில் அவகிட்ட திரும்ப வருவேன்னு சொன்னேன் என கண் கலங்குவதும் நானியின் நடிப்பில் சிறப்பு.

நம்பமுடியாத காட்சிகள் பல
படத்தில் சாய் பல்லவி, நானி காதல் காட்சிகள் அதிகம் உள்ளது, அதே நேரம் நானியை கொல்ல குடும்பத்தார் திட்டமிடுவதற்கான காரணம் வலுவாக சொல்லப்படவில்லை, கோர்ட் காட்சிகள் வலுவாக காட்டப்பட்டாலும், சாதாரணமாக கொலை செய்துவிட்டு நானி கொல்கொத்தாவின் வேறொரு பகுதியில் பெரிய எழுத்தாளராக உலா வருவதும், மிகப்பெரிய இயக்கத்தை கையிலெடுக்கும் நானி தனிமனிதராக இருப்பதாக கட்டுவதும், அவர் கொல்லப்பட்டப்பின் அந்தப்பிரச்சினை சப்பென்று முடிவதாக காட்டுவதும் நம்பும்படியாகவா இருக்கு. நம்பித்தான் ஆகவேண்டும்.
இயக்குநரின் சிறப்பு
இதுபோன்ற மைனஸ்களை விலக்கிவிட்டு பார்த்தால் கதையின் தேர்வும் திரைக்கதையின் வடிவமும் இப்படத்திற்கு கூடுதல் பலமே இயக்குநர் ராகுல் சங்கிருத்தியாயன் (வால்காவிலிருந்து கங்கை வரை வரலாற்று நாவலை எழுதிய மிகப்பெரிய அறிஞரின் பெயர்) தனது பணியை மிகவும் நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார். மொத்தத்தில் படம் தொய்வில்லாமல் நகர்வதால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 3.5 பாயிண்ட் கொடுக்கலாம்.


Click it and Unblock the Notifications











