Maaman OTT: சூரியை உறவுகளின் நாயகனாக மாற்றிய மாமன்.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு!
சென்னை: இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த பிளாக்பஸ்டர் 'மாமன்' திரைப்படம். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் படத்தின் வசூல் நகர்புறத்திற்கு இணையாக இருந்தது. வணிக ரீதியாக சூரிக்கு இது அடுத்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. இந்த படம் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான 'மாமன்' ஆகஸ்ட் 8, 2025 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகவுள்ளதை அறிவித்துள்ளது. உணர்ச்சிப்பூர்வமான கதை மற்றும் அற்புதமான நடிப்பு என பார்வையாளர்களைக் கவர்ந்த இந்தத் திரைப்படம், டிஜிட்டல் ப்ரீமியர் மூலம், உலகம் முழுக்க உள்ள பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் தமிழ் ஸ்ட்ரீமிங்கில் கிடைக்கும்.
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள 'மாமன்' திரைப்படம், மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் நடிகர் ராஜ்கிரண் இணைந்து நடித்துள்ள இந்தப் படம், அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அனைத்து வயதினரையும் ஈர்க்கும் என்பது உறுதி.
மாமன்: ZEE5 இன் தமிழ் மற்றும் மலையாள வணிகத் தலைவரும், தென்னக மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவருமான லாயிட் C சேவியர் கூறியதாவது, "எங்கள் ZEE5 சந்தாதாரர்களுக்கு 'மாமன்' திரைப்படத்தைப் பிரத்தியேகமாக கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படம் குடும்ப உறவுகளின் பாசம் அன்பு மற்றும் சிக்கலான உணர்வுகளின் கலவையாக, பார்வையாளர்கள் விரும்பும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இதன் பிளாக்பஸ்டர் திரையரங்க வெற்றியே அதற்குச் சான்றாகும். ZEE5 தளத்தில் இப்படம் உற்சாகமான வரவேற்பைப் பெறும், நாடு முழுவதும் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்." எனக் கூறியுள்ளார்.

பாண்டியராஜ்: OTT வெளியீடு குறித்து இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாவது, "மாமன்" என் மனதுக்கு நெருக்கமான படம், இப்படம் குடும்ப உறவுகளின் ஆழத்தையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் அற்புதமான கதை. இப்படத்தை மிகச் சரியான முறையில் உருவாக்கியதில் முழு பங்களித்த எங்கள் குழுவை நினைத்து பெருமைப்படுகிறேன், மேலும் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ஆழத்தைக் கொண்டு வந்த சூரி அண்ணாவின் அற்புதமான நடிப்புக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். ZEE5 மூலம் இப்படம் பரந்த அளவில், உலகம் முழுக்க உள்ள பார்வையாளர்களை சென்றடையும், மேலும் மனித இதயங்களைத் தொடும் மற்றும் குடும்ப பிணைப்புகள் பற்றிய உரையாடல்களைத் தூண்டும் என்று நம்புகிறேன்." எனவும் கூறியுள்ளார்.
சூரி: தனது நுட்பமான நடிப்பிற்காக பெரும் பாராட்டுக்களை பெற்ற நடிகர் சூரி பகிர்ந்து கொண்டதாவது, "உண்மையான வெற்றி என்பது, உறவுகள் மற்றும் உணர்ச்சிகளை நேர்மையாகப் பாராட்டுவதில் உள்ளது, மேலும் 'மாமன்' திரைப்படம் அந்த அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்தப் படம் உண்மையில் நடந்த சம்பவங்களின் உணர்ச்சிப்பூர்வமான பயணம், மேலும் இது எத்தனை பேரின் மனங்களைத் தொட்டுள்ளது என்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த உணர்வுகளை ஒரு துடிப்பான படமாகத் திறமையாக உருவாக்கிய இயக்குநர் பிரசாந்திற்கு எனது மனமார்ந்த நன்றி. 'மாமன்' ZEE5 இல் ஸ்ட்ரீமாவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், இதனால் அதிகமான குடும்பங்கள் இந்தக் கதையைப் பார்த்து அனுபவிக்கவும், தங்கள் சொந்த பிணைப்புகளைப் போற்றவும் முடியும்." என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











