System Review: முதலுக்கே மோசம்.. ஜோதிகாவின் ‘சிஸ்டம்‘ படம் எப்படி இருக்கு? கசமுசா சீனால் படம் ஓடுமா?
சென்னை: 'சிஸ்டம்' திரைப்படம் வழக்கமான நீதிமன்ற படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக உள்ளது. பல ஆண்டுகளாக இந்திய சினிமாவில், நீதிக்காக ஆண் வழக்கறிஞர்கள் மட்டும் தான் வாதாடி வந்ததை நாம் படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தப் படத்தில் பெண்களே கதையின் மையமாக இருப்பது பெரிய மாற்றமாக தெரிகிறது. சட்ட நுணுக்கங்களோ, அதிரடி திருப்பங்களோ இல்லாமல், மனித உணர்வுகளை மிகவும் மென்மையாக சொல்லப்பட்டு இருப்பதே இந்த படத்தின் பலம்.
அஸ்வினி திவாரி இயக்கி இருக்கும் இந்த படத்தில் ஜோதிகா, சோனாக்ஷி சின்ஹா, அஷுதோஷ் கோவாரிகர், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே,சயந்தீப் குப்தா உள்ளிட்டோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். மே 22ந் தேதியான நேற்று ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

சிஸ்டம் விமர்சனம்: படத்தின் கதை ஆரம்பிக்கும் போதே, 'நெப்போட்டிசம்' பற்றிய சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர். சோனாக்ஷி சின்ஹா நேஹா என்ற வழக்கறிஞராக இருக்கிறார். இவரின் அப்பா (அஷுதோஷ் கோவாரிகர்) பிரபல வழக்கறிஞர், இவர் வாதாடிய எந்த வழக்கிலும் தோன்றதே இல்லை அந்த அளவிற்கு திறமையான வழக்கறிஞராக இருக்கிறார். பிரபல வழக்கறிஞரின் மகளாக இருந்தாலும் பத்து வழக்கில் வாதாடி ஜெயித்தால் தான், தனக்கு ஜூனியராக முடியும் என்பதால் நேஹா தனது திறமையை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நேஹா. பொது வழக்கறிஞராக தனித்து நின்று நேர்மையுடன் போராட முயற்சிக்கிறார். ஆனால் நீதிமன்ற உலகில் நேர்மை மட்டும் போதாது என்பதை விரைவிலேயே உணர்கிறார் நேஹா. சோனாக்ஷி இந்த கதாபாத்திரத்தை மிக இயல்பாக நடித்திருக்கிறார். தேவையற்ற மேக்கப், கவர்ச்சி காட்சிகள் எதுவும் இல்லாமல், சாதாரண பெண்ணாகவே திரையில் தோன்றி உள்ளார்.
படத்தின் கதை: இதே நீதிமன்றத்தில் ஸ்டெனோகிராஃபராக வரும் சரிகா கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார். சரிகாவின் கணவர் ஒரு விபத்தில் காலை இழந்துவிட ஒட்டுமொத்த குடும்ப பாரத்தையும் சரிகா தன் தோளில் சுமந்து வருகிறார். படிப்பில் திறமையாக இருக்கும் மகள் குஷ்மாவை வளர்க்க போராடி வருகிறாள். வழக்கறிஞர் நேஹா தொடர்ந்து 9 வழக்குகளில் வாதாடி ஜெயித்துவிட பத்தாவது வழக்கில் ஆஜராகிறார். அந்த வழக்கில் எதிர் வழக்கறிஞராக வருவது நேஹாவின் அப்பா (அஷுதோஷ் கோவாரிகர்). அப்பாவை எதிர்த்து நேஹா வாதாடி ஜெயித்தாரா? இல்லையா? என்பது தான் சிஸ்டம் படத்தின் கதை.

பிளஸ்: இந்த வழக்கில் நேஹா வெற்றி பெற சரிகா உறுதுணையாக நின்றபதால் இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்படுகிறது. படத்திற்கு பலமாக இருப்பது ஜோதிகாவின் நடிப்பு. தனது அமைதியான நடிப்பில் சோர்வு, வலி, புத்திசாலித்தனம், தியாகம் அனைத்தும் மிக அழகாக வெளிப்படுத்தி உள்ளார். தனியாக மகளை வளர்த்து, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கணவரையும் கவனிக்கும் பெண்ணாக அவர் மனதை உருக்கும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு சட்ட அறிவு இருந்தும், சரியான வாய்ப்பு வராததால், ஸ்டெனோகிராஃபராக இருக்கிறார். குறிப்பாக வறுமை பற்றி சரிகா பேசிய ஒரு வசனம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானதாக இருந்தது. "பணம் இல்லாதவர்கள், இறுதியில் தங்களையே கொஞ்சம் கொஞ்சமாக தியாகம் செய்ய ஆரம்பிக்கிறார்கள்" என்ற கருத்து மனதை மிகவும் கனக்க வைத்தது.
மைனஸ்: குடும்பத்திற்கான அனைத்தையும் தியாகம் செய்யும் சரிகா, திருமணமான ஒருவருடன் தகாத உறவில் இருப்பது போல ஒரு காட்சி வருகிறது. அந்த காட்சியும் தேவை இல்லை, அந்த கதாபாத்திரமும் தேவையில்லாததாக வருகிறது. அதே போல நீதிமன்றத்தில் தொடர்ந்து வாதாடிக்கொண்டே இருப்பதும், அதை காட்சியில் விளக்காமல் பேசிக்கொண்டே இருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், 'சிஸ்டம்' படம் முதலுக்கே மோசம் இல்லாத படம், ஓடிடியில் வெளியாகி இருப்பதால் டைம் பாஸாக படத்தை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications