Phir Aayi Haseen Dillruba Review: கணவருடன் சேர இன்னொரு திருமணம் செய்யும் டாப்ஸி.. கடைசியில் ட்விஸ்ட்
சென்னை: டாப்ஸி, விக்ராந்த் மசாய் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான ஹசீன் தில்ருபா படத்தின் 2ம் பாகமாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் 'பிர் ஆயி ஹசீன் தில்ருபா' (Phir Aayi Haseen Dillruba) திரைப்படம் வெளியானது. ஜெய்பிரத் தேசாய் இயக்கத்தில் வெளியான இந்த படம் நெட்பிளிக்ஸில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் இந்த வார பட்டியலில் இந்தியளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
மகாராஜா படத்திற்கு பிறகு இந்தியன் 2 அந்த இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ட்ரோல்கள் காரணமாக அந்த படம் சரிவை சந்தித்து அந்த இடத்தை டாப்ஸியின் படம் பிடித்திருக்கிறது.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஆகஸ்ட் 9ம் தேதி நேரடியாக வெளியான ஹசீன் தில்ருபா படத்தின் 2ம் பாகமான பிர் ஆயி ஹசின் தில்ருபா படத்தை பார்க்கலாமா? வேண்டாமா? முதல் பாகத்தை விட சிறப்பாக உள்ளதா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..
ஹசீன் தில்ருபா கதை: அம்பி மாதிரி இருக்கும் ரிஷுவை (விக்ராந்த் மசாய்) திருமணம் செய்துக் கொள்ளும் ராணி காஷ்யப் (டாப்ஸி) தனது கணவரின் உறவினருடன் காதல் கொள்ள இருவரும் உறவு கொள்கின்றனர். ஆனால், ஒரு கட்டத்தில் அதுவே டாப்ஸிக்கு சிக்கலாக மாற தனது கையை வெட்டிக் கொண்டு அந்த நபரை கொன்று விட்டு தான் இறந்து விட்டதாக காட்டி முதல் பாகத்தின் கதையை முடித்திருந்தனர்.
2ம் பாகத்தின் கதை: அதே கதையில் இருந்து அப்படியே இரண்டாம் பாகம் தொடர்கிறது. அழகான ஆக்ரா நகரத்திற்கு ராணி இடம்பெயர்ந்த நிலையில், இன்னொரு பெயரில் ரிஷு வாழ்ந்து வருகிறார். இருவரும் ரகசியமாக சந்தித்துக் கொள்கின்றனர். தாய்லாந்துக்கு தப்பித்துச் செல்ல பாஸ்போர்ட் உள்ளிட்ட விஷயங்களை ரிஷு ஏற்பாடு செய்கிறார். அப்போது, முதல் பாதியில் கொல்லப்பட்ட நீலின் மாமாவாக போலீஸ் அதிகாரி மோன்டி மாமா கதையில் வந்து மீண்டும் பழைய வழக்கை கிளறுகிறார். மேலும், கம்பவுண்டர் அபிமன்யூ (சன்னி கவுஷல்) டாப்ஸியை காதலித்து வரும் நிலையில், அவரை திருமணம் செய்துக் கொண்டால், மோண்டி மாமா சந்தேகப்பட மாட்டார் என்றும் அவர் சென்று விட்டால் ஈஸியாக தப்பித்து விடலாம் என பிளான் போடுகிறார் டாப்ஸி. அதன் பின்னர் என்ன நேர்ந்தது என்பது தான் 2ம் பாகத்தின் கதை.
காதலும் காமமும்: முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் அடல்ட் கன்டென்ட்டை எதிர்பார்த்து பார்க்கும் நெட்பிளிக்ஸ் ரசிகர்களுக்காக விக்ராந்த் மசாய் உடன் தாராளமாக லிப் லாக் அடித்து நடித்துள்ளார் டாப்ஸி. போதாக் குறைக்கு அந்த கம்பவுண்டருடனும் கனவு சீன் என சொல்லி கட்டில் சீனிலும் தாராளம் காட்டி நடித்துள்ளார். இன்னொரு பக்கம் விக்ராந்த் மசாயுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என அடம்பிடிக்கும் மாற்றுத் திறனாளி ஹவுஸ் ஓனர் பெண்ணுடனும் லிப் லாக் காட்சிகள் எல்லை மீறுகின்றன.

கிளைமேக்ஸ் ட்விஸ்ட்: முதல் பாகத்தை போலவே இந்த படத்திலும் முதல் சீனிலேயே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து தனது கணவர் தன்னை கொல்லப் போகிறார் என டாப்ஸி சொல்லும் இடத்தில் இருந்து படம் சூடு பிடிக்கிறது. அப்பாவி கம்பவுண்டராக காட்டப்படும் சன்னி கவுஷலின் மறுபக்கம் தெரியவரும் காட்சிகளும், அந்த பிங்க் தாஜ்மகால் வசனமும் செம. கிளைமேக்ஸில் புதிய கணவரை போலீஸில் கோர்த்து விட்டு மலையில் இருந்து டாப்ஸி குதித்து விடும் இடங்கள் எல்லாம் பதை பதைக்க வைக்கிறது.
பார்க்கலாமா? வேண்டாமா?: ஹசீன் தில்ருபாவின் முதல் பாகத்தை பார்த்து பிடித்த ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த பாகமும் பிடிக்கும். முதல் பாகமே பிடிக்கவில்லை என்கிற ரசிகர்களுக்கு சுத்தமாக இந்த பாகம் பிடிக்காது. அடுத்தடுத்து கதையில் ட்விஸ்ட் இருப்பதை போல காட்சிப் படுத்த முயற்சித்தாலும், அடுத்து இந்த சீன் தான் நடக்கும் என்றும் இந்த பாகத்தில் அம்பியாக இருக்கும் அந்த கம்பவுண்டரும் அந்நியனாக மாறுவான் என எதிர்பார்க்கப்பட்டதை போலவே மாறும் இடமெல்லாம் சுமாரான ரைட்டப் தான். விக்ராந்த் மசாய்க்கு இந்த படத்தில் நடிக்க பெரிதாக ஸ்கோர் இல்லை. டாப்ஸி கிடைத்த இடத்தில் எல்லாம் கிடா வெட்டுவதை போல கிளாமர் தூக்கலாக நடித்துள்ளார். ஆனால், அந்த படத்தை விட இந்த படத்தில் முகம் ரொம்பவே முதிர்ச்சியாகி விட்டது தெளிவாக தெரிகிறது. ஓடிடியில் ஒரு லவ், டிராமா, துரோகம் கலந்த படத்தை பார்க்க வேண்டுமென்றால் தாராளமாக இந்த படத்தை பார்க்கலாம். கிளைமேக்ஸில் அந்த தினேஷ் பண்டித்தின் மகனையே ரிவீல் செய்யும் காட்சியும் ஹைலைட்.


Click it and Unblock the Notifications











