தீபாவளிக்கும் இல்லை.. தங்கலான் ஓடிடி ரிலீஸில் மீண்டும் சிக்கல்.. கங்குவா நிலைமை என்னாகுமோ?
சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை நவம்பர் 7ஆம் தேதி வரை வெளியிடப் போவதில்லை என ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல தங்கலான் திரைப்படத்தையும் ஓடிடியில் வெளியிடப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளது.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தியேட்டருக்குச் சென்று ரசிகர்கள் புதிய படங்களை பார்க்கும் வகையில் தமிழில் சிவகார்த்திகேயனின் அமரன், கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் மற்றும் ஜெயம் ரவியின் பிரதர் உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. கூடுதலாக லக்கி பாஸ்கர், இந்தி படமான பூல் புலாயா 3, சிங்கம் அகைன் உள்ளிட்ட படங்களும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகின்றன.

அதே போல ஓடிடியில் இந்த ஆண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த லப்பர் பந்து திரைப்படம் வெளியாகிறது. பிரசாந்த் நடித்து ஹிட் அடித்த அந்தகன் படமும் ஓடிடியில் வெளியாகிறது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் நாளையும் ஓடிடியில் வெளியாகாது என்றே தெரிகிறது.
சியான் விக்ரமின் உழைப்பு: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான தங்கலான் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இன்றி அதன் பின்னர் இந்தியில் வெளியாகியும் நல்ல வரவேற்பை பெற்றது. 100 கோடி வரை வசூலை வாரிக் குவித்தது. ஆனால், விக்ரமின் உழைப்புக்கு ஏற்றளவுக்கு பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை படம் பெறவில்லை. பா. ரஞ்சித்தின் அரசியல் மற்றும் ஆன்மிக சித்தாந்தம் உள்ளிட்டவை பலருக்கும் பிடிக்கவில்லை என விமர்சனங்கள் கிளம்பின.
ஞானவேல் ராஜா வழக்கு: திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தனது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், டெடி- 2, எக்ஸ் மீட்ஸ் ஓய், தங்கலான் பட தயாரிப்பு பணிக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 99 கோடியே 22 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இதில் 45 கோடி திருப்பி செலுத்திய ஞானவேல் ராஜா மீதமுள்ள 55 கோடி ரூபாயை வழங்காமல் ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கங்குவா ரிலீஸ் தாமதத்திற்கான காரணம்: இந்தத் தொகையை திருப்பித் தராமல் நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், தங்கலான் படத்தை ஓ டி டி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேட்டையன் படத்திற்காக கங்குவா ரிலீஸ் தள்ளிப் போகவில்லை என்றும் இதுதான் ரியல் பிரச்சனை என்றும் கூறுகின்றனர்.
தீபாவளிக்கு தங்கலான் ஓடிடியில் வராது: இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்த போது, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில், நவம்பர் 7ஆம் தேதி வரை கங்குவா திரைப்படம் வெளியிடப்பட மாட்டாது என்றும் தங்கலான் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட மாட்டாது என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த தீபாவளிக்கு தங்கலான் வெளியாகாது. மேலும், நவம்பர் 7ம் தேதிக்குப் பிறகு தான் கங்குவா படத்தின் ரிலீஸ் பிரச்சனையும் சரியாகும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











