The Kerala Story: “முழுக்க வன்மம்.. கன்றாவியான மூவி” தி கேரளா ஸ்டோரியை கழுவி ஊற்றிய ஓடிடி ரசிகர்கள்
சென்னை: இந்தியில் உருவாகியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்தாண்டு மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சுதிப்தோ சென் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு தமிழ்நாடு, கேரளா உட்பட பல இடங்களில் எதிர்ப்பு காணப்பட்டது. இந்நிலையில் பல மாதங்களுக்குப் பின்னர் ஹாட்ஸ்டாரில் வெளியான தி கேரளா ஸ்டோரியை ஓடிடி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
தி கேரளா ஸ்டோரி சரியான கிரிஞ்ச் மூவி: இந்தியில் சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்தாண்டு மே 5ம் தேதி வெளியானது. இந்தியா முழுவதும் ரிலீஸான இந்தப் படத்துக்கு தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் கடும் எதிர்ப்பு காணப்பட்டது. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் ரிலீஸ் செய்யப்பட்டது. குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு எதிரான படமாக இது வெளியாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

ஆதா ஷர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்திருந்த தி கேரளா ஸ்டோரி, இஸ்லாமிய மதத்துக்கு எதிரான கருத்துகளுடன் உருவாகியுள்ளதாக சொல்லப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த 32000 இந்து பெண்கள் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டு, முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. மேலும், அவர்களை ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும் காட்டப்பட்டது.
அதேபோல், மதமாற்றம் செய்யப்பட்ட பெண்கள் தீவிரவாதிகளின் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவதாகவும் தி கேரளா ஸ்டோரி படத்தில் காட்சிகள் இருந்தன. தீவிரவாதத்துக்கு எதிரான படம் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக உருவாகியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர். முக்கியமாக இது அனைத்தும் உண்மையை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குநர் கூறியிருந்தார்.
இதனால் இந்தப் படம் ஓடிடியில் வெளியாவதில் பல பிரச்சினைகளை சந்தித்தது. இந்நிலையில் பல மாதங்களுக்குப் பின்னர் தி கேரளா ஸ்டோரி இன்று ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ஓடிடி ரசிகர்கள் அதிகளவில் பார்க்கத் தொடங்கினர். இதனையடுத்து தற்போது ஓடிடி ரசிகர்களும் தி கேரளா ஸ்டோரி படத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது முழுக்க முழுக்க வன்மம் நிறைந்த படம் என ட்ரோல் செய்துள்ளனர்.
நெட்டிசன் ஒருவர், "இந்த மாதிரி ஒரு கன்றாவியான படத்தை என் வாழ்க்கையில் இப்போதான் பாக்குறேன்... இதுல Based on True Story னு காது குத்த பாக்குறான் டைரக்டர்... Politics, Communism பேச தெரிஞ்ச இயக்குநருக்கு அது எப்படி பேசணும் சொல்லி தரல யா - CRAP MOVIE.." என மிக காட்டமாக விமர்சித்துள்ளார். இதற்கு ரசிகர்களும் ஆதரவாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

அதேபோல், தி கேரளா ஸ்டோரி மூவி கிரிஞ்ச் ஸ்டோரி என பிரபல சோஷியல் மீடியா சினிமா ட்ராக்கர் கிறிஸ்டோபர் விமர்சித்துள்ளார். "நடிப்பு, திரைக்கதை எல்லாமே பரிதாபமாக உள்ளன. சீரியல் மாதிரியான டெம்ப்ளேட்டை வைத்து படம் இயக்கியுள்ளார். தி கேரளா ஸ்டோரி படத்தின் ஒரே நோக்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது வெறுப்பை உருவாக்குவது மட்டுமே என்பது போல் தெரிகிறது. அத்தகைய முதிர்ச்சியற்ற தயாரிப்பு" என விமர்சித்துள்ளார்.
தி கேரளா ஸ்டோரி படத்துக்கு திரையரங்குகளைக் கடந்து ஓடிடி ரசிகர்களிடமும் மரண அடி கிடைத்துள்ளது. இதனால் ஓடிடியிலும் தோல்வியை தழுவியுள்ளது தி கேரளா ஸ்டோரி.


Click it and Unblock the Notifications











