The Six Triple Eight: ரத்தமும், கத்தியும் இல்லாத கருப்பின பெண்களின் கதை.. மிஸ் பண்ணாதீங்க!
லாஸ் ஏஞ்சல்ஸ்: அன்றும் சரி இன்றைய காலத்திலும் சரி நிறத்தை வைத்து ஒருவரை நிராகரிக்கும் போக்கு, அவருக்கான வாய்ப்பை தட்டி பறிப்பது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கண்டங்கள் தாண்டி ஒவ்வொரு நாட்டிலும் சாதி, மதத்தையும் தாண்டி நிறத்தை வைத்து திறமையை மதிப்பிடுபவர்களும் உள்ளனர். குறிப்பாக நிற பாகுபாட்டில் ஆண்களை விட பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அத்தகைய பாகுபாட்டில் இருந்து சாதித்தவர்களின் கதையத்தான் இந்த தொகுப்பில் காண இருக்கிறோம்.
தி சிக்ஸ் டிரிபிள் எய்ட்: இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க கருப்பின பெண்கள் அடங்கிய ராணுவக் குழுவின் கவனம் பெறாத சாதனையைப் பற்றி பேசுகிறது இந்த தி சிக்ஸ் டிரிபிள் எய்ட் (The Six Triple Eight) திரைப்படம். உலகப் போரில் போர் வீரர்களையும் குடும்பத்தினரையும் இணைப்பது கடிதங்கள்தான். அந்தக் கடிதங்கள் சரிவர கிடைக்காமல் லட்சக்கணக்கில் தேக்கமடைகின்றன. அமெரிக்க ராணுவத்தில் இருக்கும் வெள்ளை அதிகாரிகள் போருக்கு பயிற்சி பெற்ற கருப்பின பெண்களை புறக்கணிக்கின்றனர். அதனோடு மட்டும் இல்லாமல் போருக்காக பயிற்சி பெறும் கருப்பின பெண்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை புகைப்படமாக எடுத்து கருப்பின பெண்களுக்கு செலவிடும் பணம் தேவையற்றது என வெள்ளை அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து திட்டமிடுகின்றனர்.

கடிதங்கள்: உலக போரின் நிலை உக்கிரமடைந்து வருகிறது. இந்த சூழலில் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குடும்பத்தினர் பரிதவிக்கின்றனர். ராணுவ வீரர்கள் உயிருடன் இருக்கின்றனரா இறந்துவிட்டனரா, கால் போனதா, கை போனதா என்பதை கூட தெரிந்து கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. கடித போக்குவரத்தும் இல்லை. இந்த நிலையில்,அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் ஆலோசனைப்படி, தேங்கிய கடிதங்களை சேர்க்கும் பொறுப்பு கருப்பின பெண்கள் ராணுவப் படையான தி சிக்ஸ் டிரிபிள் எய்ட் பட்டாலியனிடம் ஒப்படைக்கப்படுகிறது.
மலை போல் கிடக்கும் கடிதங்கள்: போரில் துப்பாக்கி ஏந்தி சண்டை போட செல்வதாக நினைக்கும் அந்த பட்டாலியன் குழுவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. மலைபோல் குவிந்து கிடக்கும் கடிதங்களை பிரித்து அனுப்பும் பணிக்கு அனுப்பப்படுகின்றனர். ஒரு சிறிய பெட்டாலியன் ஆக நுழையும் இந்த கருப்பினப் பெண்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருக்கும் அந்தக் கடிதங்களைப் பிரித்து இராணுவ வீரர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் முறையாக அனுப்பி வைக்கிறார்கள்.

பாராட்டு: வெள்ளை இன வீரருக்கும் கருப்பின பெண்ணுக்கும் வரும் காதல் ரசிக்க வைக்கிறது. ராணுவத்திற்கு சென்ற காதலன் இறந்து போகும் செய்தியறிந்து கருப்பின பெண்ணும் ராணுவத்தில் சேர முனைகிறார். போருக்கான பயிற்சியின் போது நிறத்தால் வெள்ளை நிற அதிகாரிகள் செய்யும் கொடுமை, அவமானம் என அனைத்தும் அப்படியே உலகப்போரை நேரில் பார்த்தது போல் காட்சிப்படுத்திருப்பார் இயக்குநர் டைலர் பெர்ரி. இப்படத்தில் கெர்ரி வாஷிங்டன், ஓப்ரா வின்ஃப்ரே, சாரா, எபானி ஓப்ஸ்டியன், உள்ளிட்ட பலர் கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர்.
ஆனந்த கண்ணீர்: கடிதம் குவிந்து கிடக்கும் குடோன்களில் திடீரென வந்து வெள்ளை நிற அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். அப்போது, ஒரே பெயரிலுள்ள கடிதங்கள், முகவரி முழுமையாக இல்லாத கடிதங்கள், அரித்து போன கடிதங்கள், போர் முனையை அடையாளம் காணமுடியாதவை என பார்ப்பவரை மலைக்க வைக்கின்றனர். பின்னர், கடிதங்கள் இல்லாத உலகம் இரண்டாம் உலகப்போர் மட்டுமல்ல சாதாரண மனிதர்கள் கூட வாழ்ந்திருக்க முடியாது என்பதை இப்படம் உணர்த்தியுள்ளது.

வெள்ளை அதிகாரிகள் முன்பு கொடுத்த சவாலை முடித்த பின்பு கருப்பின பெண்கள் தலைநிமிர்ந்து வீறுநடை போட்டு செல்லும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. கடந்தாண்டு வெளியான இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காண கிடைக்கிறது. ரத்தமும், கத்தியும் இல்லாமல் கடிதங்கள் மூலம் ஒரு போர் முனை வெற்றி குறித்த படத்தை கண்டு ரசித்திடுங்கள்


Click it and Unblock the Notifications











