தியேட்டருக்கு ரசிகர்கள் வருவதில்லை... ஓடிடி ரிலீஸுக்கு கண்டிஷன் போடும் திருப்பூர் சுப்ரமணியம்..?
சென்னை: 2024 ஆரம்பம் முதல் இப்போது வரை தமிழில் வெளியான எந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர், அயலான், இந்த மாதம் ரிலீஸான ரஜினியின் லால் சலாம் உட்பட பல படங்கள் இதில் அடங்கும். இந்நிலையில் தியேட்டரில் ரசிகர்கள் அதிகம் வருவதில்லை எனவும், அதற்கு காரணம் ஓடிடி தான் என்றும் திருப்பூர் சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
ஓடிடி ரிலீஸுக்கு கண்டிஷன்
கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் தியேட்டர்களின் நிலை மோசமாகிவிடும் என சொல்லப்பட்டன. அதற்கான முதல் காரணம் ஓடிடி தளங்களின் வருகையும் அதற்கு இந்திய சினிமா ரசிகர்களிடம் இருந்த வரவேற்பும் தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ், சோனி லிவ், டிஸ்னி ப்ளஸ் என பல ஓடிடி தளங்கள் இந்தியாவில் அசுர வளர்ச்சிப் பெற்றன.

தியேட்டரில் டிக்கெட் விலை அதிகம், பார்க்கிங் கட்டணம் போன்றவை காரணமாகவும் தியேட்டரை விட ஓடிடியில் படம் பார்ப்பதை ரசிகர்கள் அதிகம் விரும்பினர். அதேபோல் தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என இந்திய மொழிகளில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள். ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன் என சர்வதேச அளவில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்களும் ஓடிடியில் காண கிடைத்தன.
இதனால் தியேட்டர்களுக்கு செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவதாக சொல்லப்பட்டது. ஆனால், விஜய்யின் மாஸ்டர், சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படங்கள் கொரோனா லாக்டவுன் முடிந்ததும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து கமலின் விக்ரம், ரஜினியின் ஜெயிலர் உட்பட லட் டுடே போன்ற பல சின்ன பட்ஜெட் படங்களும் தியேட்டரில் வசூலை வாரி குவித்தன. இதன் மூலம் நல்ல படங்களை ரசிகர்கள் திரையரங்குகளுக்கு சென்று பார்ப்பதை தவிர்க்கவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், ஓடிடியில் வெளியாகும் படங்கள் பற்றி திருப்பூர் சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் சுப்ரமணியம், அனைத்து படங்களும் தியேட்டரில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பின்னர் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த 4 மாதங்களாக தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும், பெரும்பாலான படங்கள் நான்கே வாரங்களில் ஓடிடியில் வெளியிடுவதும் தான் காரணம் எனக் கூறியுள்ளார். இதனால் 8 வாரங்களுக்குப் பின்னர் தான் ஓடிடியில் படங்களை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்தி படங்கள் 8 வாரங்களுக்குப் பின்னர் தான் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய திருப்பூர் சுப்ரமணியம், உள்ளூர் பொழுதுபோக்கு வரியை 8% நீக்க வேண்டும் என்றும் கூறினார். அதேபோல் தியேட்டர் பரமாரிப்பு கட்டணத்தை உயர்த்திகொடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து விரைவில் தமிழ்ப் படங்களுக்கும் ஓடிடி ரிலீஸில் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் நல்ல படமாக இருந்தால் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு சென்று ஆதரவு தருவார்கள் என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











