செங்களம் வெப் சீரிஸ்.. உள்ளே ஏகப்பட்ட உள்குத்து.. இதையெல்லாம் நோட் பண்ணீங்களா?
சென்னை: செங்களம் வெப் சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. அந்த வெப் சீரிஸுக்குள் ஏகப்பட்ட உள்குத்து இருக்கிறது.
சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரன் செங்களம் என்ற வெப் சீரிஸை இயக்கியிருக்கிறார். இதில் கலையரசன், வாணி போஜன், டேனியல் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

வரவேற்பை பெற்ற செங்களம் வெப் சீரிஸ்
மொத்தம் 9 எபிசோடுகளை கொண்டிருக்கும் இந்த வெப் சீரிஸை விருதுநகர் மாவட்டத்தில் நடக்கும் அரசியல் சதுரங்கத்தை வைத்து உருவாக்கியிருக்கின்றனர். மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு குடும்பம்தான் ஆட்சி செய்யும் என்ற விதியை உடைக்கும் இரண்டு பெண்களின் ராஜதந்திரம்தான் செங்களம். மேலோட்டமாக பார்த்தால் ஒரு மாவட்டத்துக்குள் நடக்கும் அரசியல், அதை கட்டுப்படுத்தும் ஒரு குடும்பம், குடும்பத்துக்கு நடக்கும் அதிகார சண்டை என்பது போல் தெரியும். ஆனால் உள்ளே நிறைய உள்குத்துக்கள் இருக்கின்றன.

பரம்பரை பரம்பரையாக கட்டுப்பாட்டில் அரசியல்
முதலில் சத்தியமூர்த்தி விருதுநகர் சேர்மேன், அடுத்தது அவரது மகன் சிவஞானம், அடுத்தது அவரது பேரன் ராஜமாணிக்கம். இப்படி விருதுநகர் மாவட்ட அரசியலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் பரம்பரை பரம்பரையாக வைத்திருப்பது சத்தியமூர்த்தியின் குடும்பம். இதில் சிவஞானத்திற்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள். அதில் ஒரு மகன் சேர்மேனாக இருக்க அவர் விபத்தில் இறந்துவிட அவரது மனைவிக்கு சேர்மேனாகும் வாய்ப்பு உருவாகிறது.

சத்தியமூர்த்தி பவனத்தில் கோஷ்டி அரசியல்
அந்த நேரத்தில் சிவஞானத்தின் மகனும், மகளும் அதற்கு முட்டுக்கட்டை போட்டு நமது ரத்தத்திலிருந்து யாரேனும் ஒருவர்தான் சேர்மேனாக வேண்டும் என சிவஞானத்தின் மகள் மரகதமும், மற்றொரு மகனும் கூறினாலும் தனித்தனியாக அவர்களுக்குள் அதிகாரத்தை பிடித்தே ஆக வேண்டும் என்ற குணம் இழையோடிக்கொண்டிருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நமது ரத்தத்திலிருந்து ஒருவர் சேர்மேன் ஆக வேண்டும் என ஒவ்வொருவர் கூறினாலும் அவர்கள் மனதுக்குள்ளும், சத்தியமூர்த்தியின் வீட்டுக்குள்ளும் ஒரு கோஷ்டி மனப்பான்மை இருந்துகொண்டிருக்கும். அதற்கு உதாரணம், அரசியலில் ஈடுபாடு இல்லை என கூறும் சிவஞானத்தின் இளைய மகனை சேர்மேன் வேட்பாளராக அறிவிக்கப்படும் நேரத்தில் அவருக்குள் அப்படி ஒரு ஆனந்தம் கொப்பளிக்கும்.

சத்தியமூர்த்தி பவன் டூ சத்தியமூர்த்தி பவனம்?
இதைப் பார்த்த ரசிகர்களில் ஒருதரப்பினர், காங்கிரஸில் நடக்கும் கோஷ்டி மோதல் போலத்தான் சிவஞானத்தின் வீட்டுக்குள்ளும் நடக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகம் பெயர் சத்தியமூர்த்தி பவன். எனவே அதை உணர்த்தும் விதமாகத்தான் சிவஞானத்தின் வீட்டுக்கும் சத்தியமூர்த்தி பவனம் என இயக்குநர் பெயர் வைத்திருக்கிறாரோ என தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக அதிகார மையமா சத்தியமூர்த்தி பவனம்
அதேபோல் சத்தியமூர்த்தியாக ஃபோட்டோவில் காண்பிக்கப்படுபவர் மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.எஸ்.ராஜேந்திரன். இவர் தனது அரசியல் வாழ்க்கையை திமுகவில் ஆரம்பித்தாலும் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த பிறகு அதிமுகவுக்கு வந்தார். 1980ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகவும் ஆனார். வரலாறு இப்படி இருக்க, எஸ்.ஆர்.பிரபாகரன் விருதுநகர் அரசியலை கட்டுப்படுத்தும் குடும்பத்தின் முதல் தலைமுறையாக எஸ்.எஸ்.ராஜேந்திரனை காட்டியிருப்பதன் மூலம் விருதுநகர் மாவட்ட அரசியலை அதிமுக கட்டுப்படுத்துகிறது என்பதை உணர்த்த வருகிறாரா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வெப் சீரிஸின் மைய கதாபாத்திரங்கள்
வெப் சீரிஸின் முக்கியமான கேரக்டர்கள் சூர்யகலாவும், (வாணி போஜன்), நாச்சியாரும் (ஷாலி நிவேகாஸ்). அரசியல் குடும்பத்திற்கு திருமணமாகி செல்லும் சூர்யகலா தனது கணவரை இழந்துவிட அவருக்கும் அதிகார ஆசை ஒட்டிக்கொள்கிறது. அதற்கு தனது தோழி நாச்சியாரை உடன் வைத்துக்கொள்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து சத்தியமூர்த்தி குடும்பத்தின் பிடியிலிருந்து அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் வெப் சீரிஸின் மையக்கரு.

வாணி போஜன் கதாபாத்திரம் ஜெயலலிதாவா?
சூர்யகலாவுக்கு முதல் முதலில் அதிகாரம் கிடைத்தவுடன் அவர் பால்கனியில் இருந்து தொண்டர்களை பார்த்து கை அசைப்பது, அவர் உடுத்தியிருக்கும் புடவை, அவரது உடல்மொழி, அவர் கையில் கட்டியிருக்கும் வாட்ச் என அனைத்துமே ஜெயலலிதாவை நினைவுப்படுத்துவதாகவே இருப்பதாகவும் ஒரு கருத்து ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக சூர்யகலாவை தொண்டர்கள் அனைவரும் தங்கத்தாரகை என அழைப்பது அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கிறது.

நாச்சியார் கதாபாத்திரம் சசிகலாவா?
அதேபோல் நாச்சியார் கதாபாத்திரம். சூர்யகலாவின் நிழலாகவே இருக்கிறது. மேலும் வெப் சீரிஸின் ஒரு இடத்தில் நாச்சியார் குறித்து பேசப்படுகையில், சூர்யகலாவும், நாச்சியாரும் உடன் பிறவா சகோதரிகள் என்று குறிப்பிடப்படும். உண்மையில் ஜெயலலிதா, சசிகலா குறித்து அவ்வாறே பெரும்பாலானோரால் பேசப்படுவது உண்டு. அதுமட்டுமின்றி, சூர்யகலா இறந்த பிறகு, நாச்சியார் சூர்யகலாவை அக்கா என்று குறிப்பிடுவதும்,, சூர்யகலாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சொல்வதும் என முழுவதும் அந்தக் கதாபாத்திரங்களை ஜெயலலிதா, சசிகலாவை மனதில் வைத்தே இயக்குநர் உருவாக்கியிருக்கிறாரோ எனவும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வெப் சீரிஸில் எதற்காக இந்த திரை மறைவு
ஒட்டுமொத்தமாக செங்களம் வெப் சீரிஸ் ஒரு மாவட்ட அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும் ஒரு மாநில அரசியலின் விஷயங்களையும், கட்சிகள் மற்றும் தலைவர்களின் குறியீடுகளையும் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் அதற்குள் லாவகமாக புகுத்தியிருக்கிறார். இதை ஏன் இவ்வளவு திரைமறைவாக வைத்திருக்க வேண்டும். இதனை ஓபனாகவே பேசியிருக்கலாமே என்ற கேள்வியும் பெரும்பாலான ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. இருந்தாலும் செங்களம் வெப் சீரிஸ் நிச்சயம் ரசிக்கும்படிதான் இருக்கும். எனவே அதை நம்பி பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











