twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சரோஜா - பட விமர்சனம்

    By Staff
    |

    Saroja
    நடிப்பு: எஸ்பிபி சரண், பிரேம்ஜி, சிவா, வைபவ், பிரகாஷ்ராஜ், ஜெயராம், நிகிதா, வேகா

    இசை: யுவன் சங்கர் ராஜா

    ஒளிப்பதிவு: சரவணன்

    இயக்கம்: வெங்கட் பிரபு

    தயாரிப்பு: டி.சிவா

    தமிழ் சினிமாவில் சத்தமில்லாமல் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் கங்கை அமரனின் புதல்வர்கள் இயக்குநர் வெங்கட் பிரபுவும், பிரேம்ஜி அமரனும்.

    அழுத்தமான கதை எதுவும் தேவையில்லை. ஒரு சின்ன முடிச்சை வைத்துக் கொண்டு, கலகல விறுவிறு சம்பவங்களுடன் படத்தை நகர்த்திச் செயல்வதுதான் அந்தப் பாணி.

    இந்த ஸ்டைலில் கதை சொல்லி முதல் படமான சென்னை -28-ல் ஜெயித்த இயக்குநர் வெங்கட் பிரபு, தனது இரண்டாவது படமான சரோஜாவையும் அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளும் விதத்தில் தந்துள்ளார்.

    திரைக்கதையில் ஆங்காங்கே சில ஓட்டைகள் இருந்தாலும் யுவனின் அசத்தல் இசையும், பிரேம்ஜியின் அதிரடி காமெடியும் அவற்றைச் சரிகட்டி விடுகின்றன.

    'நேற்று முன்தினம்' என்ற கார்டுடன் கதை துவங்குகிறது!

    டிவி நடிகர் அஜய்குமார் (சிவா), படுஜாலி பேர்வழி கணேஷ் (பிரேம்ஜி), இரண்டு தெலுங்கு சகோதரர்கள் ஜகபதிபாபு (எஸ்பிபி சரண்), ராம்பாபு (வைபவ்) ஆகிய நால்வரும் நெருங்கிய நண்பர்கள். வார இறுதி நாட்களை ஜாலியாக தண்ணியடித்துக் கொண்டாடும் சராசரி இளைஞர்கள்.

    ஒருநாள் ஐதராபாத்தில் நடக்கும் கிரிக்கெட் மாட்ச் பார்க்க சென்னையிலிருந்து ஒரு ஓட்டை கேரவனில் கிளம்புகிறார்கள்.

    இங்கே கட் பண்ணி... அப்படியே ஐதராபாத்துக்குத் தாவுகிறது திரைக்கதை. பணக்கார விஸ்வநாத்தின் (பிரகாஷ் ராஜ்) ஒரே மகள் சரோஜா (வேகா) பணத்துக்காக சிலர் கடத்திப் போய்விட அவரைத் தேடி களத்தில் குதிக்கிறது ஜெயராம் தலைமையிலான போலீஸ் படை.

    வழியில் ஒரு மிகப் பெரிய விபத்து காரணமாக செம டிராபிக் ஜாம். எனவே மாற்று வழியில் புறப்படுகிறார்கள் பிரேம்ஜி குழுவினர். அப்போதுதான் அவர்களே எதிர்பாராத வேறு ஒரு சதிவலைக்குள் மாட்டுகிறார்கள்.

    இந்த இரு தரப்பும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். அது எப்படி என்பதை படு சுறுசுறு காட்சிகளுடன் சொல்லி சபாஷ் பெறுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

    யார் ஹீரோ... யார் ஹீரோயின் என்பதையெல்லாம் யோசிக்க விடாமல் படத்தில் எக்கச்சக்கமாக ஸ்கோர் பண்ணுபவர் பிரேம்ஜி அமரன். அவர் வருகிற ஒவ்வொரு காட்சியிலும் சிரிப்பு அலையலையாய் பரவுகிறது திரையரங்கில். இந்தப் படத்தைப் பொறுத்தவரை, சந்தேகமில்லாமல் ஹீரோ பிரேம்ஜிதான்!

    எஸ்பிபி சரண், புதுமுகம் வைபவ், மிர்ச்சி சிவா எல்லாருமே, தனித் தனி நடிகர்களாகத் தெரியாமல், நம் நண்பர்களில் சிலராகவே தெரிவதுதான் வெங்கட் பிரபுவின் இயக்கத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி.

    அதிலும் அந்த பாழடைந்த பேக்டரியில் இருட்டு மூலையில் உள்ள ஓட்டை வழியே தனது கனத்த உடம்போடு சரண் நுழைய முயல, சரியாக அந்த நேரம் பார்த்து வந்துவிடும் வில்லன் கோஷ்டி அவரை துப்பாக்கியால் பின்னால் குத்த, உள்ளே போகவும் முடியாமல், வெளி வரவும் பயந்து போய் அவர் முகத்தில் தெரியும் உயிர் பயம் இருக்கிறதே... கிளாஸ் நடிப்பு.

    சம்பத்ராஜ், ஜெயராம் இருவரும் இந்தப் படத்தில் வில்லன்கள். வழக்கமான வில்லத்தனம் காட்டாமல் புதிய அனுபவத்தைத் தருகிறார்கள். பிரகாஷ் ராஜுக்குப் பெரகிதாக வேலையில்லை. இருந்தாலும் கொடுத்த பாத்திரத்தை நிறைவாகச் செய்திருக்கிறார்.

    ஜில்லென்ற குல்பி ஐஸ்க்ரீம் மாதிரி கவர்ச்சியில் கிறங்கடிக்கிறார் நிகிதா. சரோஜாவாக வரும் வேகா நல்ல அறிமுகம்.

    எல்லாம் சரிதான்... இந்த பிள்ளைக் கடத்தல், பணம் பறிப்பை மையப்படுத்தி ஏற்கெனவே அஞ்சாதே படம் வந்துவிட்டதே. அட்லீஸ்ட் அந்த மாதிரி காட்சிகள் (பாட்டு கூட...) வராமலாவது பார்த்துக் கொண்டிருக்கலாமே...

    ஐதராபாத்தில் நடக்கும் கிரிக்கெட் மாட்ச் பார்க்க கிட்டத்தட்ட 1000 கிலோ மீட்டர் அதுவும் ஒரு டப்பா வேனிலா போவார்கள்?

    அதேபோல ஏதோ ஒரு புதிர் பூங்காவில் (Maze) மாட்டிக் கொண்டு சுற்றிச் சுற்றி வருவதைப் போல, பேக்டரிக்குள்ளேயே ரொம்ப நேரம் கதை சுற்றிக் கொண்டிருக்கிறது.

    இதையெல்லாம் தாண்டி படத்தை ரசிக்க வைப்பது வெங்கட் பிரபு, பிரேம்ஜி மற்றும் யுவன் ஆகிய மூன்று சகோதரர்களின் பிரமிக்க வைக்கும் உழைப்பு.

    சரவணனின் கேமரா காட்சியின் தன்மைக்கேற்ப நிறம் மாறிக்கொண்டே இருப்பது புதுமையான அனுபவம்.

    தோஸ்த்து படா தோஸ்து... இனி நண்பர்கள் உலகின் தேசிய கீதமாகலாம். கோடானு கோடி பாடலில் நிகிதா மனதை அள்ளுகிறார்.

    சரோஜா... புத்தம் புது ரோஜா!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X