வேலுபிரபாகரனின் காதல் கதை - விமர்சனம்

இசை: இளையராஜா
இயக்கம்: வேலு பிரபாகரன்
தயாரிப்பு: ஜேஎஸ்கே பிலிம்ஸ்
"அய்யோ செக்ஸை வியாபாரமாக்குகிறார்களே... அது எவ்வளவு புனிதமானது, செக்ஸ் பற்றி விழிப்புணர்வு இல்லாத சமூகமாக இருக்கிறதே...", என்று கூவிக் கொண்டே, செக்ஸை விற்பது ஒரு கலை. அது வேலுபிரபாகரனுக்கும் நன்றாகவே கை வந்துள்ளது.
மூன்று அழகான பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் அல்லது சூழ்நிலை காரணமாக தங்கள் கற்பை இழக்கிறார்கள். இந்த மாதிரி குற்றங்கள் பெருகக் காரணம் செக்ஸ் பற்றிய மக்களின் அறியாமையே, என்பது மையக் கரு.
இந்திய ஆண்களுக்கு நிர்வாணம் ஒரு கவர்ச்சி பொருளாக இருக்கும் எண்ணம் மாற வேண்டும் என்கிறார் இயக்குநர். இடையில் தன்னைப் பெரியாரிஸ்டாகக் காட்டிக் கொள்ள சாதிப் பிரச்சினையை வேறு கையிலெடுத்துக் 'கொல்கிறார்' மனிதர்.
இப்படி ஒரு சப்ஜெக்டை எடுத்துக் கொண்ட பிறகு சும்மா இருப்பாரா மனிதர்... ஷெர்லியை முடிந்த வரை துகிலுரிந்து, செக்ஸின் மகத்துவத்தைக் காக்கும் மனிதராக தன்னைக் காட்டிக் கொண்டுள்ளார் வேலு.
எந்த நிமிடம் கதாநாயகிகளின் ஆடைகள் முற்றாக அகற்றப்படும்... எந்த நேரத்தில் லிப்பாலஜி சமாச்சாரம் வரும் என்றெல்லாம் யாராலும் கணிக்க முடியாத அளவு திரைக்கதை. இந்தப் படத்துக்கு சென்ஸார் 'ஏ' சான்றிதழ் கொடுத்ததற்கு பதில், எக்ஸ் என்று ஒரு பிரிவு இருந்தால் அல்லது அப்படி ஒன்றைப் புதிதாக உருவாக்கி சான்றிதழ் கொடுத்திருக்கலாம்.
தான் செய்வதும் செக்ஸ் வியாபாரம்தான் என்ற குறைந்த பட்ச குற்ற உணர்வு கூட இல்லாமல், வேலு வாதாடுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
செக்ஸ் என்பதைப் பொதுவில் வைத்தாலும் ஆபத்துதான், பொத்திப் பொத்தி வைத்தாலும் ஆபத்துதான். இயற்கை தன் முடிவை யாரைக் கேட்டும் தீர்மானிப்பதில்லை. செக்ஸ் உணர்வு என்பது இயல்பானது. அந்தந்த சமூகச் சூழலுக்கேற்ப செக்ஸுக்கான வடிகால் அமையும். அதற்காக, எங்கேயோ அவிழ்த்துப் போட்டுத் திரிகிறார்கள் என்பதற்காக நெய்க்காரப்பட்டியிலும் அதே கலாச்சாரம் வேண்டும் என்று கொடிபிடிப்பது முட்டாள்தனம் என்ற சிம்பிள் லாஜிக் கூட புரியாதவரா இயக்குநர் வேலு...?
இல்லை... அவருக்கு இதெல்லாம் நன்றாகப் புரியும். இந்தப் படத்தால் இந்த சமூகத்தை தான் ஒன்றும் கடப்பாரை கொண்டு நெம்பித் தள்ளிவிட முடியாது என்பதும் அவருக்குப் புரியும். ஆனால், ஒரு சினிமா வியாபாரியாக, தனக்குக் கிடைத்த சந்தரப்பத்தைப் பயன்படுத்தி, காமத்தை வைத்து கல்லா கட்டியிருக்கிறார்.
இந்தப் படத்துக்கெல்லாம் இளையராஜா எப்படி இசையமைக்க ஒப்புக் கொண்டாரோ தெரியவில்லை!


Click it and Unblock the Notifications











