ஃ (அக்கு) - பட விமர்சனம்!!

ஏற்கனவே ஆய்த எழுத்து என்ற பெயரில் படம் வந்து விட்டதால், அதன் எழுத்து வடிவத்தை படத் தலைப்பாக்கி விட்டார்கள்.
அக்கு ஒரு சோதனை ரீதியிலான திரில்லர் படம். படத்தின் நீளம் மொத்தமே 90 நிமிடங்கள்தான். படத்தில் பாடல்கள் இல்லை, சண்டை இல்லை, காமெடியும் இல்லை. ஆனால் படத்தில் உயிர் இருக்கிறது. அனுபவித்து பார்க்கும் வகையில் அழகாகக் கொடுத்திருக்கிறார்கள்.
படத்தில் நிறைய திருப்பங்கள், புதிர்கள். அத்தனையும் நம்மை சீட் நுனிக்குக் கொண்டு வர வைக்கிறது.
ஸ்பீட் போன்ற ஏகப்பட்ட திரில்லர் படங்களைப் பார்த்திருப்பார் போல இயக்குநர் மாமணி. படு நேர்த்தியாக திரைக்கதையை வடித்து படத்தை நீட் ஆக கொடுத்துள்ளார்.
சிவா (அஜய்) ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். யாருமற்ற அனாதையான அவர், பானுவைக் (ஸ்ரீஜி) காதலிக்கிறார். அவருடைய சகோதரர் ரக்சய், ஒரு தீவிரவாதி. சென்னையில் குண்டு வைத்து பெரும் நாசம் ஏற்படுத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.
ஒரு நாள் சிவாவும், பானுவும் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். ஆநால் பானுவின் சகோதரர் ரக்சயிடம் சிக்கிக் கொள்கின்றனர். தங்கையை இழுத்துக் கொண்டு ஓடிய சிவாவையும், சென்னையையும் ஒரே குண்டில் கொல்ல தீர்மானிக்கிறார் ரக்சய்.
இதையடுத்து ஷூவில் ஒரு குண்டை வைத்து அதை சிவா காலில் அணிவிக்கிறார். பின்னர் சென்னையின் மையப் பகுதியில் உள்ள சிட்டி சென்டருக்கு அவரைக் கூட்டி வருகிறார். அங்கிருந்து அவரை ஓடச் சொல்கிறார். மேட்டர் என்னவென்றால், சிவா நிற்காமல் ஓட வேண்டும். நின்றாலோ அல்லது வேகத்தைக் குறைத்தாலோ ஷூவில் உள்ள குண்டுவெடித்து விடும்.
இப்படிப்பட்ட நிலையில் சிவா ஓடத் தொடங்குகிறார். இந்த வெடிகுண்டு மேட்டர் போலீஸுக்குத் தெரிய வருகிறது. உதவி கமிஷனர் ரியாஸ் கானும், வெடிகுண்டு நிபுணர் அனு ஹாசனும் விரைந்து வருகிறார்கள்.
குண்டு அகற்றப்பட்டதா, சிவாவும், சென்னையும் தப்பினார்களா என்பதுதான் படத்தின் மீதக் கதை.
ஹாலிவுட் திரில்லர் படத்ைதப் பார்ப்பது போல கலக்கலாக இருக்கிறது அக்கு. முதல் படத்திலேயே பெரிய ரிஸ்க் எடுத்திருக்கும் மாமணி நிச்சயம் 'கலை மாமணி'தான்.
இந்த இடத்தில் காமெடி வேண்டும், இங்கு பைட் இருக்க வேண்டும், இங்கு குத்தாட்டம் இடம்பெற வேண்டும் என்று எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தைப் பார்க்கப் போனால் நிச்சயம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் இந்த அக்கு.
புதுமுகம் அஜய் சிறப்பாக நடித்துள்ளார். முதல் படத்தில் நடித்தது போலவே அவரது நடிப்பு இல்லை. படு கச்சிதமாக வேடத்தில் பொருந்தியுள்ளார். ரக்சயும் சிறப்பாக நடித்துள்ளார். தமிழில் அவருக்கு பிரகாசமான ப்யூச்சர் உள்ளது.
நாயகி ஸ்ரீஜி அழகாக இருக்கிறார், அமெரிக்கையாக நடித்துள்ளார். அர்த்தப்பூர்வமானதாக இவரது ரோலைச செதுக்கியுள்ளனர்.
படத்தில் இன்னொரு ஹீரோவும் இருக்கிறார். அவர்தான் கேமராமேன் சிட்டிபாபு. சென்னை சிட்டியை படு அழகாக காட்டியிருக்கிறார் இந்த சிட்டி. மேலும் திரில்லர் படம் என்பதை நமக்கு நிரூபிக்கும் வகையில் காட்சிகளிலும், கோணங்களிலும் விளையாடியிருக்கிறார் சிட்டி.
ஆய்த எழுத்தை கையில் எடுத்து அழகாக பிள்ளையார் சுழி போட்டுள்ள மாமணி, மகா மனிதர் என்ற பெயரை நிச்சயம் எதிர்காலத்தில் வாங்குவார்.
அக்கு - மக்கு இல்லை!


Click it and Unblock the Notifications











