சிங்கையில் குருஷேத்திரம் - விமர்சனம்

பிஆர்ஓ: எஸ் செல்வரகு
இசை: ரஃபீ
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இணை தயாரிப்பு - டிடி தவமணி
தயாரிப்பு: மெட்ரோ பிலிம்ஸ், சிங்கப்பூர் பிலிம் கமிஷன் மற்றும் புளூ ரிவர் பிக்ஸர்ஸ்
முழுக்க முழுக்க சிங்கப்பூர் கலைஞர்களை வைத்து, ஒளிவெள்ளம் பாயும் சிங்கப்பூரின் இருண்ட பக்கத்தைக் காட்ட முயற்சித்திருக்கிறார்கள்.
மன்னிக்க முடியாத மரண தண்டனைக் குற்றம் என்று தெரிந்தும், போதை மருந்துத் தொழிலில் ஈடுபடும் சிங்கப்பூரின் நிழல் மனிதர்களைப் பற்றிய கதை.
முதல் காட்சியே படு வித்தியாசமாக ஆரம்பிக்கிறது. எடுத்த எடுப்பில் சிங்கப்பூர் சிறையில் ஒரு தாய்க்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அவளது கணவன் காணாமல் போகிறான். அவர்களின் இரண்டு குழந்தைகளும் தாய்மாமன் பொறுப்பில் வளர ஆரம்பிக்கிறார்கள். குழந்தைகளில் இளையவனுக்கு பிறப்பிலேயே மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதால், அண்ணனே அவனுக்கு சகலமுமாக இருக்கிறான். போதை மருந்தை லாவகமாகக் கடத்தவும் தம்பியை பழக்கப்படுத்துகிறான்.
தன் தாய் இறந்ததற்கு காரணம் யார் என்பதை சிறு வயதிலேயே அறிந்து வைத்திருக்கும் அண்ணன், தனக்கான தருணம் வரும்வரை காத்திருக்கிறான். அந்த தருணம் வரும்போது நிகழ்வது இன்னொரு குருஷேத்திரமாக முடிகிறது!
நிஜமாகவே இது ஒரு வித்தியாசமான முயற்சிதான். இன்னும் திறமையாகக் கையாண்டிருந்தால், தமிழகத்துக்கு வெளியே உள்ள தமிழர்களின் வாழ்நிலை பற்றிய அழுத்தமான பதிவாக இருந்திருக்கும்.
ஆனால் எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத ஒரு வெறுமை படத்தில் இருப்பதைச் சொல்லியாக வேண்டும். தொழில்நுட்ப ரீதியாகவும் சொல்ல ஒன்றுமில்லாததால், இந்த முயற்சி உரிய கவனம் பெற முடியாமல் போகும் ஆபத்துள்ளது.
நடிகர்கள் அனைவருமே சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள்தான். சினிமாவுக்குப் புதியவர்கள் என்றாலும் அவர்களில் சிலரது நடிப்பு தொழில்முறை நடிகர்களுக்கு இணையாகவே உள்ளது ஆச்சர்யம்.
குறிப்பாக போதைத் தடுப்பு பிரிவு போலீஸாக வரும் மதியழகன் அருமையாகச் செய்துள்ளார். அண்ணன் வேடத்தில் நடித்துள்ள விஷ்ணு மற்றும் அவரது மனநிலை பாதித்த தம்பியாக வரும் சுப்ரா (பிரகாஷ் அரசு) இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக பிரகாஷ் அரசு. நிஜமாகவே மனநிலை பிறழ்ந்த ஒரு பையனைக் கண்முன் நிறுத்துகிறார்.
சிங்கப்பூரில் ஸ்விட்ஸர்லாந்தின் பனிப் பொழிவை தம்பிக்குக் காட்டும் விஷ்ணுவின் பாசம் மனதைத் தொடுகிறது. கதைப்படி, வழக்கமாக அண்ணன் தோற்றுவிட்டதாக சொன்னபிறகுதான் மறைந்திருக்கும் இடத்தைவிட்ட தம்பி வெளியில் வருவான். ஆனால் க்ளைமாக்ஸில் வேறு ஒரு பெண் அதைச் சொல்ல, மறைவிடத்திலிருந்து வெளியில் வரும் சுப்ரா, அண்ணனும் மாமாவும் அடித்துக் கொண்டதை அவளிடம் கூறுவது ஒரு சின்ன முரண்.
போதை மருத்து கடத்தல் கும்பல் தலைவனாக வரும் வினோத் கொஞ்சமும் மிகையில்லாத, கச்சிதமான நடிப்பைத் தந்துள்ளார்.
ரஃபியின் இசை பரவாயில்லை. ஒளிப்பதிவும் சுமார்தான்.
சொல்ல நினைத்த கதையை தெளிவாக சொன்ன விதத்தில் இயக்குநர் தவமணி தேறிவிட்டார். தொழில்நுட்ப விஷயங்களிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்!
ஒரு வித்யாசமான முயற்சி என்ற வகையில் இந்த புதியவர்களுக்கு கை கொடுக்கலாம்!


Click it and Unblock the Notifications











