3BHK Review: 3 பிஹெச்கே விமர்சனம்.. சொந்த வீடு தான் கெளரவம்.. சரத்குமார், சித்தார்த் படம் எப்படி இருக்கு?
சென்னை: கடந்த 2017ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்த இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் ஜூலை 4ம் தேதி வெளியாகவுள்ள 3பிஹெச்கே (3BHK) படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
8 தோட்டாக்கள் படத்தைத் தொடர்ந்து ஸ்ரீகணேஷ் இயக்கிய குருதி ஆட்டம் திரைப்படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. இந்நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை போல ஒரு தரமான ஃபீல் குட் படமாக கொடுக்கும் முயற்சியில் ஸ்ரீகணேஷ் கொடுத்துள்ள படம் தான் இந்த 3 பிஹெச்கே.

சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா, யோகி பாபு மற்றும் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். நாளை திரையரங்குகளில் வெளியாகும் படம் எந்தளவுக்கு ரசிகர்களை கவரும், இந்த படத்தில் உள்ள நிறை குறைகள் என்ன என்பது குறித்து விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
3பிஹெச்கே கதை: சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் கனவாகவும் லட்சியமாகவும் இருக்கும். பரம்பரை பணக்காரர்களுக்கு அது தரும் வலி மற்றும் சுகம் என எதுவும் தெரியாது. சாமானிய மக்கள் வாடகை வீடுகளில் தினம் தினம் படும் கஷ்டங்களை எப்படியாவது சொந்த வீடு ஒன்று வாங்கி விட்டால் சரியாகி விடும் என்கிற மனநிலையில், அதற்காக பணத்தை சேர்க்க அவர்கள் போராடும் கதையை அழகான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகணேஷ்.
வாடகை வீடே கிடைக்காமல் தவிக்கும் படமாக 'டுலெட்' திரைப்படம் வந்தது பலருக்கும் நினைவிருக்கும். இது அதற்கு அடுத்த வெர்ஷனாக வாடகை வீட்டில் வசிக்கும் வாசுதேவன் (சரத்குமார்) குடும்பம் எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என பல வருடங்களாக போராடும் கதையை ஆழமாகவும் அழுத்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியிருக்கிறது.
படம் எப்படி இருக்கு?: வாசுதேவன் தனது மனைவி சாந்தி (தேவயானி), மகன் பிரபு (சித்தார்த்), மகள் (மீதா ரகுநாத்) உடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில், ஆளுக்கொரு ரூம் தேவை என்பதால், 3 பெட்ரூம் கொண்ட ஒரு வீட்டை கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்பது தான் அவரது ஒரே கனவு. ஆனால், சாதாரண சம்பளத்தில் வேலை பார்க்கும் ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டும் வீடு வாங்க முடியாத சூழலில் அவரது மகன் மற்றும் மகள் நாங்க சம்பாதித்து வாங்கித் தரோம்ப்பா என முன் வருவதும், அதன் பின்னர், அவர்கள் படும் சிரமங்கள், சேர்த்து வைத்த பணத்தை திடீரென எதிர்பாராத ஒரு விஷயத்துக்காக செலவிடுவது என கடைசி வரை சொந்த வீடு வாங்குவார்களா? மாட்டார்களா? என்கிற துடிப்புடன் படம் பயணிப்பது ரசிகர்களை நிச்சயம் கனெக்ட் செய்து விடும். அந்த வகையில் இயக்குநர் நினைத்ததை சரியாக செய்து முடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

பிளஸ்: சரத்குமார், தேவயானிக்கு எல்லாம் நடிக்க சொல்லித் தர வேண்டுமா என்ன? முதல் சீனில் இருந்து கடைசி வரை தங்களது சீனியாரிட்டியால் நடிப்பில் வெளுத்து வாங்குகின்றனர். சூர்ய வம்சம் ஜோடி மீண்டும் இப்படியொரு படத்தில் இணைந்திருப்பதை பார்க்கவே க்யூட்டாக இருக்கிறது. ஒரே பாடலில் பல வீடுகளை கட்ட முடியவில்லையே என்பது தான் வருத்தம். நல்லா படிக்கும் மகளாக மீதா ரகுநாத் குட் நைட் படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் செமையா ஸ்கோர் செய்திருக்கிறார். படிச்சு பெரியாளாக மாறி அப்பா நினைத்த சொந்த வீடு கனவை நிறைவேற்ற நினைக்கும் பிரபுவுக்கு படிப்பு சரியாக வரவில்லை, அதனால் பெரிய வேலையும் கிடைக்கவில்லை. ஆனாலும், எப்படியாவது அப்பாவின் கனவை தான் நிறைவேற்ற வேண்டும் என போராடும் இடங்களில், 'சித்தா' சித்தார்த்தின் நடிப்பு பளிச்சிடுகிறது. அம்ரித் ராம்நாத் பின்னணி இசை, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு என அனைத்துமே படத்துக்கு பிளஸ் தான்.
மைனஸ்: சில இடங்களில் படம் சற்றே செயற்கைத்தனமாக தெரிவது மட்டுமே சிறு குறையாக தெரிகிறது. கஷ்டப்படும் குடும்பத்துக்கு மேலும், மேலும் கஷ்டம் மட்டுமே வருவது, அவர்களின் முகங்களில் சிரிப்பையே காட்டக் கூடாது என நினைப்பது எல்லாம் ரசிகர்களை சோர்வடைய செய்கிறது. ஆனால், கடைசியில் கிளைமேக்ஸில் படம் நிறைவடைந்த விதம் நிச்சயம் ரசிகர்களை கைதட்ட வைக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் பார்க்கிங், குட் நைட், டூரிஸ்ட் ஃபேமிலி, 3பிஹெச்கே என அன்றாடம் வாழ்வில் நடக்கும் கதைகளை படங்களாக மாற்றி வருவது தமிழ் சினிமாவை ஆரோக்கியமான பாதைக்கு கொண்டு செல்லும் என்றே தோன்றுகிறது. கத்தியும், ரத்தமும் அதிகம் இல்லாத வித்தியாசமான கதைகளே தமிழ் சினிமாவுக்கு தேவை.


Click it and Unblock the Notifications











