Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
நடிகர்கள்: பிருத்விராஜ், அமலா பால், ஜிம்மி ஜீன் லூயிஸ்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
இயக்கம்: பிளெஸ்ஸி
நேரம்: 2 மணி நேரம் 52 நிமிடங்கள்
சென்னை: 90களின் தொடக்கத்தில் சவுதி அரேபியாவுக்கு கேரளாவில் இருந்து ஆசை ஆசையாக தனது மனைவி மற்றும் அம்மாவை விட்டு விட்டு வேலைக்கு செல்லும் நஜீப் எப்படி சவுதி அரேபியாவின் பாலை வனத்தில் ஆடு மேய்க்கும் வேலைக்கு கொத்தடிமையாக மாற்றப்பட்டு சித்திரவதை அனுபவிக்கிறார் என்றும் அங்கிருந்து அவர் எப்படி தப்பித்தார் என்கிற நிஜக் கதையை மையமாக வைத்து எழுதப்பட்ட மலையாள நாவலான ஆடுஜீவிதம் நாவலை தழுவி இயக்குநர் பிளெஸ்ஸி சுமார் 16 ஆண்டுகள் கடுமையாக உழைத்து உருவாக்கி உள்ள 'ஆடு ஜீவிதம்' படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
பிருத்விராஜ், அமலா பால், ஜிம்மி ஜீன் லூயிஸ், வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் புழுதிப் புயல் நடுவே சிக்கித் தவிக்கும் பிருத்விராஜின் வலிகளை தனது இசை மூலம் நமக்கு கடத்துகிறார். மரியான் படத்திற்கும் ஏ.ஆர். ரஹ்மான் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவின் பாலை வனத்தில் சிக்கித்தவித்த நஜீப் அங்கிருந்து உயிருக்குப் போராடி தப்பித்து வந்த நிலையில், எழுத்தாளர் பென்யாமினிடம் தனது கஷ்டங்களை சொல்ல அவர் 43 சேப்டர்களாக எழுதிய நாவலை கிட்டத்தட்ட 3 மணி நீள படமாக சுருக்கி கொடுத்துள்ளனர். மலையாள ரசிகர்களின் பிரபல நாவலான ஆடுஜீவிதம் அதே ஜீவனுடன் படமாகப்பட்டிருக்கிறதா? அதன் பிளஸ், மைனஸ் என்ன என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
ஆடுஜீவிதம் கதை: கேரளாவிலிருந்து வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்று லட்சம் லட்சமாக சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி விடலாம் என்கிற கனவுடன் கர்ப்பிணி மனைவியை விட்டு விட்டு விமானத்தில் சவுதிக்கு செல்கிறார் ஹீரோ. அங்கிருந்து அவரை ஒரு இடத்துக்கு வண்டியில் கூட்டிச் செல்கின்றனர். கொஞ்ச தூரம் சென்றதும் வீடுகள், மரங்கள் எதுவுமே இல்லாத ஒரு இடத்தில் ஆடு மேய்க்கும் வேலைக்கு அமர்த்தப்படுகிறார். இதுதான் தனக்கான வேலை என்பது கூட தெரியாமல், தான் இங்கே அடிமையாக வந்திருக்கிறேன் என்பதை எல்லாம் போக போகத்தான் புரிந்துக் கொள்கிறார். ஆடுகளை மேய்ப்பதும், அவற்றின் பாலை கறந்து கொடுப்பதும் வேலையாக கொடுக்கப்படுகிறது. பால் கறக்கத் தெரியவில்லை என அடி வாங்குகிறார். சரியான உணவு இல்லை, குடிக்கத் தண்ணீர் கூட இல்லை. அப்படியொரு இடத்தில் இருந்து வீட்டுக்கு போய் விட வேண்டும் என நினைக்கும் போது அவரை போக விடாமல் துன்புறுத்த ஆரம்பிக்கின்றனர்.

எப்படியாவது இங்கிருந்து தப்பித்துச் சென்று விட வேண்டும் என பல மைல்கள் உள்ள பாலை வனத்தில் தான் அடைப்பட்டுக் கிடந்த இடத்தில் இருந்து தப்பித்துச் செல்லும் நாயகன் அந்த பாலை வனத்தை வெற்றிகரமாக கடந்தாரா? எப்படி மீண்டும் வீட்டுக்குச் சென்றார் என்பது தான் கதை.
படம் எப்படி இருக்கு?: சமீபத்தில் உலகம் முழுவதும் சர்வைவர் த்ரில்லர்கள் நிறைய வருகின்றன. கடந்த ஆண்டு வெளியான சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ படத்தின் கதையும் கிட்டத்தட்ட இதே கதை தான். பனி மலையில் விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்து விட அங்கிருக்கும் சிலர் எப்படி தப்பித்து வருகின்றனர் என்பது தான் கதை. அதே போல இந்த கதையும் ரத்தமும் சதையுமாக ஒவ்வொரு காட்சிகளிலும் உயிர்ப்புடனும் வலியுடனும் ரசிகர்களை தவிக்க வைத்து விடுகிறது.
பிளஸ்: இயக்குநர் பிளெஸ்ஸி அந்த நாவலில் நஜீப் கஷ்டப்பட்டதை விட பிருத்விராஜை கஷ்டப்படுத்தி எடுத்திருப்பார் என்று தான் தெரிகிறது. அதுதான் படத்தின் பலமாகவும் உள்ளது. வாட்டசாட்டமான நஜீப்பாக சவுதிக்கும் செல்லும் பிருத்விராஜ் உணவு, தண்ணீர் இல்லாமல் வாடத் தொடங்குவதும் குடிக்கவே தண்ணீர் இல்லாத பாலை வனத்தில் குளிப்பது எப்படி என்கிற நிலையில், தனது உடல் தோற்றம் முற்றிலும் மாறிவிடுகிறது. தலைமுடி கோரமாக வளர ஆரம்பிக்க, பற்கள் கரைபடிந்து காணப்பட ஆட்டுப் பாலை பருகி உயிர் பிழைக்கும் காட்சிகள் எல்லாம் கண்களை குளமாக்கி விடுகின்றன. ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை படத்துக்கு பெரும் பலம். ஒளிப்பதிவாளர் சுனி. கே.எஸ் வைக்கும் ஒவ்வொரு ஃபிரேமும் பிரம்மாண்டத்தின் உச்சம். உலகத்தரம் என்று தான் சொல்ல வேண்டும்.

மைனஸ்: பிருத்விராஜுக்கு ஜோடியாக இதில் அமலா பால் நடித்துள்ளார். நாவலில் அவரது கதாபாத்திரம் கதை நெடுகிலும் அவனது நினைவுகளாக வரும். ஆனால், இங்கே வலியும் வேதனையையும் மட்டுமே காட்ட வேண்டும் என்கிற நோக்கத்துடன் அமலா பாலின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் 2 இடங்களில் மட்டுமே வருவது நாவல் படித்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தைக் கொடுக்கும். ஆனால், படமாக பார்க்கும் போது திரையில் அது பெரிய குறையாக இருக்காது. அடிமையாக மனிதர்களை நடத்துவது தவறு என்பதை தெரிந்தே அடிமைப்படுத்தி சித்ரவதை செய்யும் மனிதர்களும் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றனர். கடைசியாக இயக்குநர் வைத்துள்ள கிளைமேக்ஸ் காட்சி ரசிகர்களை நிறைவான சினிமாவை பார்த்த அனுபவத்துடன் வெளியே அனுப்புகிறது. நிச்சயம் இந்த படத்தில் நடித்ததற்காக பிருத்விராஜுக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியொரு படைப்பை சினிமா ரசிகர்கள் தியேட்டர்களில் மிஸ் செய்து விட வேண்டாம்.


Click it and Unblock the Notifications











