Movie Review :ஈழத் தமிழர்களின் துயரங்களை சொல்லும் "ஆறாம் நிலம்"...எப்படி இருக்கு ?
சென்னை : தமிழ் சினிமாவில் இலங்கை சம்பந்தப்பட்ட இலங்கை மக்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பல படங்கள் வந்துள்ளது. கமர்சியல் படங்கள் நடுவே இலங்கையின் துயரங்களை சொன்ன படங்களும் நிறையவே உள்ளது. இலங்கையில் நடந்த போர் மற்றும் போரின் பின் நடந்த சோகங்கள் பல டாக்குமென்ட்ரி வடிவங்களாக பதிவு செய்யப்பட்டு வந்தது.கமர்சியல், டாக்குமென்ட்ரி என்று எப்படி பிரித்து பார்த்தாலும் உண்மையை உரக்க சொன்ன படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் .
அப்படி சமீபத்தில் ஐபிசி தமிழின் தயாரிப்பில், அவர்கள் நடத்திய குறுந்திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்ற இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கிய முழுநீளத் திரைப்படமிது. ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் முகமாக ஆறாம் நிலம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஈழம் சார்ந்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் அல்லது ஈழத்தில் உருவான படங்களிலோ இதுவரை சொல்லப்படாத ஒரு விஷயம் இதில் பேசப்பட்டுள்ளது. போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் போருக்குப் பின் பத்தாண்டுகளின் பின்னும்கூட முற்றிலும் அகற்றப்படாத சூழல் நிலவுகின்றது.
அந்நாட்டில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட நிலம், காணாமல் போனவர்களை தேடும் மனஉளைச்சல் , முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை ஆகியவற்றைச் சுற்றி கதை நகர்கிறது.
எதார்த்தமான முகத்தோடு
நவயுகா மற்றும் மன்மதன் பாஸ்கி ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கிறார்கள்.கணவனைத் தேடும் பெண்ணாக, பெண் குழந்தைக்கு தாயாக, போருக்குப் பின்னான வாழ்வின் அத்தனை கஷ்டங்களுக்கும் , மனப்போராட்டங்களுக்கும் மிக எதார்த்தமான முகத்தோடு ,இயல்பான பெண்ணாக மிகத் தேர்ந்த நடிப்பின் மூலம் அந்தப் பாத்திரத்திற்கு உயிர்கொடுத்து உள்ளார் நவயுகா.
தொழில்நுட்ப நுணுக்கங்களுடன்
கண்ணிவெடி அகற்றும் குழுவின் பொறுப்பாளனாக பாஸ்கியினுடைய நடிப்பு இயல்புத் தன்மையுடன் அசத்தி உள்ளார் . மற்ற பாத்திரங்களும் அவர்களது பங்கினைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.கண்ணிவெடி அகற்றும் பணிக்குரிய அந்த நிலம், அதற்குரிய தொழில்நுட்ப நுணுக்கங்களுடன் படமாக்கப்பட்ட விதம் மிகவும் சிறப்பு. அந்தப் பணி இடம், அதற்கான ஒருங்கிணைப்பு, நடை ,உடை,பேச்சு போன்ற பல விஷயங்கள் பக்காவாக திரையில் கொண்டு வந்து உள்ளார்கள் .
அப்பாவை பிரிந்து
படத்தின் மிக முக்கியமான ஒரு காட்சியாக ஒரு பெண் குழந்தை தன் அப்பாவை காணாமல் ஏங்கி ஏங்கி தவிப்பது, சாலையில் பார்க்கும் விளம்பரங்களைப் பார்த்து தன் அப்பாவின் நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு முகத்தில் வெளிப்படுத்திய விதம்- பலர் மனதையும் கலங்க வைக்கும். அப்பாவை பிரிந்து வாழும் மற்றும் வாழ்ந்த பிள்ளைகளுக்கு தான் அந்த வலியும் வேதனையும் மிகவும் ஆழமாக புரியும்.
காம்ப்ரமைஸ் செய்யமால்
கதையின் முடிச்சுகளுக்கு கடைசியில் முடிவு சொல்லாமல் விட்டதால் யதார்த்தம் உச்சத்தை தொடுகிறது .
எந்த விதமான காம்ப்ரமைஸ் செய்யமால் இயக்குனர் மனதில் பட்ட அந்தக் கதைக்களம் எதனைக் நேரடியாக நெத்தியடியாக சுட்டிக் காட்ட நினைத்தாரோ அதை மிகவும் மெனக்கெட்டு அதற்குரிய பொறுப்போடு உருவாக்கப்பட்டுள்ள 'ஆறாம் நிலம்' திரைப்படம் ஐபிசி யூ டியூப் சேனலில் ரிலீஸ் ஆகி உள்ளது.கண்டிப்பாக உணர்ச்சிபூர்வமான இந்த படத்தை மிகவும் பொறுமையுடன் பார்த்தால் இலங்கையில் நடந்த பல பிரச்சனைகள் மிக எளிதில் புரியும். தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் பல நாட்டில் வாழும் தமிழ் இனம், இலங்கையில் நடந்த பல உண்மை சம்பங்களை புரிந்து உள்ள இந்த படம் கண்டிப்பாக உதவும் என்பதில் சந்தேகம் எதுவம் இல்லை.


Click it and Unblock the Notifications











