தாலியை அறுக்கும் கொலைகாரன்.. தொடரும் மர்ம கொலைகள்.. தடயம் வெப் தொடர் விமர்சனம்!
சென்னை: நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில் அஜய் கிருஷ்ணா தயாரித்து இருக்கும் இணையத் தொடர் 'தடயம்'. இத்தொடர் தொடர் ஜீ 5 (Zee5) ஓடிடி தளத்தில் பிப்ரவரி 27ந் தேதி வெளியானது. சமுத்திரக்கனி, ஷிவதா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருக்கும் இத்தொடர் மொத்தம் 6 எபிசோடுகளை கொண்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு, ஆந்திரா எல்லைக்குள் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமத்தில், தொடர்ந்து மர்மமான முறையில் கணவன், மனைவி கொல்லப்படுவதன் மர்மத்தை கண்டுபிடிக்கும் திகிலூட்டும் வெப்தொடராக இத்தொடர் உள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் இருக்கும் பொதட்டூர்பேட்டை காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக சமுத்திரகனி அதியமான் என்கிற கதாபாத்திரத்திலும், ஷிவதா இன்ஸ்பெக்டர் லட்சுமி என்ற ரோலில் நடித்துள்ளனர். சப் இன்ஸ்பெக்டர் அதியமான் திறமையானவராக இருந்தாலும், டிஎஸ்பிக்கும் இவருக்கும் பழைய பகை இருப்பதால் இவரை தொடர்ந்து அலட்சியம் செய்து வருகிறார். இந்த நேரத்தில் தான் பொதட்டூர்பேட்டை காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவன் மனைவி இருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றனர். வீட்டில் நகை, பணம் திருடுபோகாமல் இருக்க கொலை ஏன் நடந்தது என்று தெரியாமல் போலீசார் திணறிக்கொண்டு இருக்கின்றனர்.

தடயம் வெப் தொடர்: அடுத்த சில நாட்களில் அதேபாணியில் மீண்டும் கணவன், மனைவி கொடூரமாக மர்மமானமுறையில் கொல்லப்படுகின்றனர். இந்த வழக்கை விசாரிப்பதற்காக சப் இன்ஸ்பெக்டராக அதியமான், இன்ஸ்பெக்டர் ஷிவதா இருவரும் இணைகின்றனர். இந்த கொலையில் கிடைக்கும் துப்பில் மனைவியின் தாலியும், கணவரின் அரைஞாண் கயிற்றை மட்டும் கொலையாளி அறுத்து செல்வதால், கொலை ஒரு சைக்கோ என்றும், இந்த கொலைகளை செய்வது ஒருவர் இல்லை இரண்டு பேர் என்பதை சமுத்திரக்கனி கண்டுபிடிக்கிறார். சைக்கோ கொலைகள் குறித்து விசாரணை சென்று கொண்டு இருக்க, மீண்டும் கணவன் மனைவி அடித்து கொல்லப்படுகின்றனர்.
மர்ம கொலைகள்: இதைத்தொடர்ந்து விசாரணை சூடுபிடிக்க, சமுத்திரக்கனி பக்கத்து மாநிலமான ஆந்திராவிலும் இதேபோல கொலை நடந்து இருக்கா என்பது குறித்து விசாரிக்க செல்கிறார். அங்கேயும் கணவன் மற்றும் மனைவி இதேபோல அடித்து கொன்றுவிட்டு தாலி மற்றும் அரைஞாண் கயிற்றை அறுத்து செல்லும் வகையில் கிட்டத்தட்ட 76 பேர் கொல்லப்பட்டு இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். 76 கொலை நடந்தும் ஒரு துப்புக்கூட கிடைக்காமல் போலீசார் திணறுகின்றனர். அந்த கொலையாளி யார்? கணவன், மனைவியை மட்டும் கொலை செய்வது ஏன்? தாலியை எடுத்து செல்வது ஏன் என்கிற பரபரப்பான திருப்படங்களுடன் 'தடயம்' வெப் தொடரின் கதை நகர்கிறது.



Click it and Unblock the Notifications











