Agavan Review: ஒரு கோயிலும் சில மர்மங்களும்... அவசியமானதை சொல்லும் அகவன்! விமர்சனம்
அவசியமான கருத்தை, திரில்லர் கதை மூலம் விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்கிறது அகவன் திரைப்படம்.
Recommended Video

சென்னை: இன்றைய காலகட்டத்திற்கு தேவையான கருத்தை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்கிறது அகவன் திரைப்படம்.
நாயகன் கிஷோர் ஒரு கோவிலில் தங்கி அங்கேயே பணியாற்றி வருகிறார். அந்த கோவிலில் ஏதோ சில மர்மமான விஷயங்கள் நடைபெறுகின்றன. அந்த மர்மமான சம்பவங்களுக்கு பேய் தான் காரணம் என நம்பப்படுகிறது. மர்மமான சம்பவங்களில் கிஷோரே சிக்கி கொள்ள அதில் இருந்து அவர் வெளிப்பட்டாரா? மர்மங்களுக்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? என்பதே கதை.

ரூபாய் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்த கிஷோருக்கு நாயகனாக இது முதல் படம். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, மிக யதார்த்தமாக நடித்துள்ளார். மிகவும் சாந்தமாக பக்கத்து வீட்டு பையன் போல இயல்பாக தெரிகிறார். மர்மங்களை தேடிச்செல்லும்போது தன்னுடைய பதற்றத்தையும் ஆர்வத்தையும் நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

சித்ரா ஷெட்டி, நித்யாஸ்ரீ என இரண்டு கதாநாயகிகள். கிஷோரை காதலிப்பது மட்டும்தான் வேலையோ என்று நினைத்தால் இரண்டாம் பாதியில் கதையின் முக்கிய திருப்பங்களுக்கு உதவுகிறார்கள்.
தம்பி ராமய்யா படத்தை கலகலப்பாக நகர்த்துகிறார். அவருக்கு 'எங்கே இருந்தோ' வரும் கவுண்டர் வசனங்கள் சிரிக்க வைக்கின்றன. இன்னொரு ஜோடி நரேன், பிரியங்காவும் சிறப்பான அறிமுகங்கள்.

சி.சத்யாவின் இசையும் பால பழனியப்பன் ஒளிப்பதிவும் படத்துக்கு வேகம் கூட்டுகின்றன. எல்விகே.தாஸ், ஆர்.நிர்மல் இருவரும் கச்சிதமான படத்தொகுப்பால் விறுவிறுப்பாக்கி உள்ளனர்.

பேய் படம் போல தொடங்கி திரில்லராக மாறி, கடைசியில் மிக அவசியமான ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர். கடைசி 30 நிமிட காட்சிகள் ரசிகர்களை பரவசப்படுத்துகின்றன. கோவில்கள் கட்டியதற்கான அடிப்படை காரணங்களை விளக்கும் இடங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

இன்றைய காலகட்டத்திற்கு தேவையான கருத்தை விறுவிறுப்பாக சொல்கிறான் இந்த அகவன்.


Click it and Unblock the Notifications











