அகத்தியா பேண்டஸி படமா? ஹாரர் படமா பாஸ்..மார்வெல் ரேஞ்சுக்கு மிரட்டிட்டாரு பா.விஜய்..சொதப்பிய யுவன்!
சென்னை: பா. விஜய் இயக்கத்தில் ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜூன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் அகத்தியா. தமிழ் சினிமாவில் நடந்து முடிந்து புதைந்த அமானுஷ்யம் நிறைந்த சம்பவங்களை தேடி அலைவது போன்ற பேண்டசி திரைப்படங்கள் ஏராளம் வந்துள்ளன. அதே பாணியில் உருவாகியுள்ள அகத்தியா திரைப்படம் ரசிகர்களை ஈர்த்ததா? சோதித்ததா என்பதை காண்போம்.
கதைக்களம்: கலை இயக்குநராக இருக்கும் ஜீவா பாண்டிச்சேரியில் உள்ள பாழடைந்த பங்களாவில் படப்பிடிப்புக்காக செட் அமைக்கிறார். அங்கு நடக்கும் சில பிரச்னையால் படப்பிடிப்பு நடக்காமல் போகிறது. இதில் வருத்தமடையும் ஜீவாவிற்கு அந்த பங்களாவில் ஸ்கேரி ஹவுஸ் (Scary House) நடத்தி பணம் சம்பாதிக்க நடிகை ராஷி கண்ணா ஐடியா தருகிறார். மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் அந்த ஸ்கேரி ஹவுஸில் கவுன்சிலர் மகன் மர்மமான முறையில் காணாமல் பாேகிறார். பின்பு ஸ்கேரி ஹவுஸை மூடுகிறார்கள்.

ஸ்கேரி ஹவுஸில் அங்கு பல அமானுஷிய விஷயங்கள் நடக்கிறது. அப்போது ஜீவாவிற்கு ஒரு பழைய ரீல் கிடைக்க, அதில் அர்ஜுன் ஒரு சித்த மருத்துவராக வருகிறார். 1940 களுக்கு கதை நகர்கிறது. அங்கு அர்ஜூன் யார்? அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவருக்கும் இந்த அரண்மனைக்கும் உள்ள தொடர்பு என்ன.? தனது தாயின் உயிரை ஜீவா காப்பாற்றினாரா? சித்த மருத்துவத்தின் மகிமையை எப்படியெல்லாம் திரைப்படுத்தியிருக்கிறார்கள்?? என்பதற்கெல்லாம் விடையாக இரண்டாம் பாதியை கொடுத்திருக்கிறார் இயக்குநர் பா விஜய்.
ஜெய்ஹிந்த் அர்ஜூன்: படம் தொடங்கும்போது இது ஜீவா படமாக இருந்தாலும், கதை நகர நகர இது அர்ஜூன் படமாக மாறிவிடுகிறது. அர்ஜூன் இப்படத்தை தனது தோளில் சுமந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார். நாட்டுப்பற்றை பற்றி அர்ஜூனுக்கு சொல்லி கொடுக்க வேண்டுமா. சித்தார்த்தனாக வரும் அர்ஜூன் தமிழ் பற்று கொண்ட மருத்துவராகவும், இந்தியன் என்ற பெருமையை தோளில் சுமக்கிறார். அவரது கேரக்டரின் வலுவை நன்றாக புரிந்துகொண்டு அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஜாக்லினாக நடித்தவருக்குமான காதல் கெமிஸ்ட்ரி சிறிதளவு வொர்க் அவுட் ஆகியுள்ளது. மூலக்கதையை அர்ஜூன் சுமந்து சென்றதால், இவரே கதையின் நாயகனாக படத்தில் தெரிகிறார் என்பது சற்று ரசிகர்களுக்கு வருத்தம் தான்.
இயக்குநர் டச்: இயக்குநர் பா.விஜய் 1940ல் நடக்கும் கதையை வரலாற்றோடு தொடர்பு படுத்தி எடுத்திருப்பது பாராட்டக்குரியது. அதிலும், படத்தில் இடம்பெற்ற கதாப்பாத்திரங்களின் பெயர்கள் தமிழ் பற்றோடு தமிழ் இலக்கியத்தையும் தொடர்பு படுத்தியிருப்பது அற்புதம், ஜாக்குலின் பூவிழி, சித்தார்த்தன், அகத்தியா மீனா போன்ற பெயர்கள் கேட்க அருமையாக இருக்கிறது. மேலும், திருவண்ணாமலைக்கும் சித்த மருத்துவத்துக்கும் உள்ள கனெக்சன் என்ன என்பதை ஆழ்ந்த சிந்தனையை தருகிறது. கதையின் சாராம்சமான தமிழனின் சித்த மருத்துவ பெருமையை உலகறிய செய்ய இயக்குனர் பா விஜய் எடுத்த முயற்சியை வெகுவாகவே பாராட்டலாம். 1940களில் பாரதிதாசன், அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், முரசொலி போன்ற ரெபரன்ஸ் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
யுவன் மிஸ்ஸிங்: யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்களுக்கென பெரிதான ஒரு முயற்சியை இப்படத்தில் அவர் கொடுக்கவில்லை. பின்னணி இசையில் மட்டுமே தனக்கான யுனிக்கை ஒரு சில இடங்களில் மட்டுமே கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். லவ் டுடே படத்தில் பிரதீப் கூறுவது போல் எங்களுக்க பழைய யுவன் வேண்டும் என்றே கேட்க தோன்றுகிறது. என் இனிய பொன் நிலாவே பாடலை தவிர மற்ற பாடல்கள் அனைத்தம் சுமார் தான். யுவனுக்கு என்ன ஆச்சு என்பது போலத்தான் படம் பார்த்தவர்களுக்கு சோதனையை தந்திருக்கிறது.
நடிகவேள் ராதாரவி: கதை தொடங்கிய 15 நிமிடத்தில் ஸ்கேரி ஹவுஸை திறந்து வைக்கும் விடிவி கணேஷ், யோகி பாபு வரும் காட்சிகள் சிரிப்பு பஞ்சமில்லை. பேயாக வரும் ராதாரவி நல்ல நடிப்பு படத்திற்கு பலத்தை சேர்க்கிறது. சங்கிலி புங்கிலி கதவை திற படத்தில் இவரது கதாப்பாத்திரம் கவனத்தை ஈர்த்தது. அதேபோன்று இல்லாமல் வித்தியாசமான முறையில் படம் முழுக்க சிரிப்பலையை ஏற்படுத்துகிறார். காமெடி கலந்து நக்கலுடன் அரசியல் பேசும் காட்சிகள் நிறைவை தருகின்றன.
பலவீனம்: பல படங்களில் பார்த்த கதையை தான் பா.விஜய் இயக்கியிருக்கிறார். சில காட்சிகள் வாட்ஸ் அப் மெசேஜ்களை பார்த்து படித்தது போலவே இருந்தன. படம் பார்த்த ரசிகர்களுக்கு இது ஹாரர் படமா அல்லது பேண்டசி படமா நாம் தான் பார்த்த தெரிந்துகொள்ள வேண்டும். ஜீவா ஒரு கட்டத்தில் இங்கு என்ன நடக்கிறது என குழம்பி போவார் அதேபோன்று பார்ப்பவர்களையும் குழப்பம் அடைய வைக்கிறது. பிளாஷ்பேக்குக்குள் ஒரு பிளாஷ்பேக் போர் அடிக்க வைக்கிறது. சுவாரஸ்யமாக இருக்க வேண்டிய ஒரு கதைக்களத்தை மிகவும் சுமாராக தந்துள்ளார்.
நடிகர்கள்: ராஷி கண்ணா பேயாக வரும் ஒரு காட்சியை தவிற மற்றவை எல்லாம் வழக்கமாக ஒரு நடிகையை போன்று அழகாக வந்து செல்கிறார். அதை தவிற இப்படத்தில் அவருக்கு வேலை இல்லை. வில்லனாக நடித்த எட்வர்ட், அப்பாவாக நடித்த சார்லி, அம்மாவாக நடித்த ரோகிணி உள்ளிட்ட நட்சத்திரங்களும் படத்தில் பெரிதாகவே தங்களது கேரக்டர்களை பலமாக செய்திருக்கின்றனர். ஜீவா அம்மா என்று சொல்லும் உருகி தவிக்கிறார். அம்மா சென்டிமெண்டில் கரைந்து போகிறார்.
வைத்தீஸ்வரி: சித்த வைத்தியச்சியாக வரும் அபிராமியின் கதாப்பாத்திரம் ஒரு நிமிடம் வந்து செல்வதாக இருந்தாலும் கண்களுக்கு அம்மனை போன்று காட்சியளிக்கிறார். சாமி படங்களின் வரவு குறைந்துள்ள நிலையில், அவரை வைத்து ஒரு சாமி படம் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை. வைத்தீஸ்வரியின் காட்சிகள் பிரம்மிக்கை வைக்கின்றன.
சிறப்பு: படத்தில் வரும் கடைசி 20 நிமிட காட்சிகள் மார்வெல் படங்களுக்கு இணையாக இடம்பிடித்துள்ளன. விஎப்எக்எஸ் மூலம் பிரமாதப்படுத்தியுள்ளனர். க்ளைமாக்ஸில் இருந்த விறுவிறுப்பு படம் முழுக்க இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.


Click it and Unblock the Notifications











