Angikaaram Review: அங்கீகாரம் விமர்சனம்.. தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில்.. சீற்றம் ஜெயித்ததா?
சென்னை: "தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில்.. இந்த ஜெகத்தினை அழித்துவிடுவோம்" என்றான் பாரதி. ஒரு தகுதி வாய்ந்த விளையாட்டு வீரனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை திமிர் பிடித்த சில உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் செய்யும் அலட்சியத்தால் காமன் வெல்த் கேமையே தடை செய்ய வேண்டும் என சட்டப் போராட்டத்தை எடுக்கும் ஹீரோ வெற்றிப் பெற்றாரா? இல்லையா? என்பது தான் இந்த அங்கீகாரத்தின் கதை.
எஸ். கே. பிரசாந்த், அஜித் பாஸ்கர், அருண் முருகன் தயாரிப்பில் தென்பாதியான் இயக்கத்தில் கேஜேஆர் நடிப்பில் ஜூன் 26ம் தேதி வெளியாகவுள்ள படம் தான் 'அங்கீகாரம்'.

சமீபத்தில் ராம் சரண் நடிப்பில் 350 கோடி பட்ஜெட்டில் வெளியாகி 400 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டிய பெத்தி படத்தில் சொல்லப்பட்ட கதையை ரத்தமும் சதையுமாக உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சொல்லி உள்ளனர். இந்த படத்தின் கதை, பிளஸ், மைனஸ் உள்ளிட்டவற்றை விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..
அங்கீகாரம் கதை: ஏழ்மையின் விளிம்பில் இருந்தாலும் எப்படியாவது ஓடி தங்கம் வென்று விட்டால் தனது வீட்டின் நிலைமை மாற்றிவிடலாம் என கிரவுண்டே கதியென கிடக்கும் ஆதிரன் (கேஜேஆர்) எப்படியாவது காமன் வெல்த் கேம்ஸில் விளையாட வேண்டும் என நேஷ்னல் லெவலில் ரெக்கார்டு வைத்தாலும், அவரை தேர்வு செய்யாமல் தடுக்கும் உயரதிகாரிகளுக்கு எதிராக விளையாட்டுத் துறை அமைச்சர் வரை சென்று பார்த்து முறையிட்டாலும் எதுவும் எடுபடவில்லை.
இதனால், கோபமடையும் ஆதிரன் வழக்கு தொடர அதை யாருமே பெரிதாக கண்டுக் கொள்ளவே இல்லை. தூய்மை பணியாளராக கணவனை இழந்து விட்டு மகன் மற்றும் மகளுக்காக வேலை செய்யும் பானுமதி (ரமா) மற்றும் டாய்லெட் போக கூட வசதியில்லாத வீட்டில் வாழும் தனது தங்கையின் நிலைமையை அறிந்து எப்படியாவது தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை அடைந்தே தீர வேண்டும் என கோர்ட் படியேறும் ஹீரோ காமன் வெல்த் கேம்ஸையே நிறுத்த வழக்கு தொடர அதன் பின்னர் என்ன ஆனது? அவர் எதிர்பார்த்த மாதிரி காமன் வெல்த் கேம்ஸில் ஓடி தங்கம் வென்றாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: கிட்டத்தட்ட ராம் சரணின் பெத்தி படத்தை போலத்தான் இந்த படமும். சாமானியர்களை விளையாட விடாமல் மெடல் மட்டும் வேண்டும் என அரசாங்கம் நினைப்பதும், விளையாட்டுத் துறையில் புரையோடிக் கிடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தும் விதமாக ஹீரோ சட்டத்தை நாடி அங்கே தன்னுடைய வாதங்களை வைக்கும் காட்சிகள் எல்லாம் அப்ளாஸ் அள்ளுகிறது.
அறம், ஹீரோ, டாக்டர், அயலான் உள்ளிட்ட படங்களை தயாரித்த கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் இந்த படத்தின் மூலம் ஹீரோவாக மாறியுள்ளார். ஓட்டப் பந்தய வீரருக்கான உடல் மொழியை அருமையாக கொண்டு வந்துள்ள விதம் சிறப்பு.
ஏழ்மையான வீட்டில் இருந்தாலும், ஸ்போர்ட்ஸ் கண்டிப்பாக தங்களுடைய நிலையை மாற்றிவிடும் என்பதை நினைத்து விளையாட்டை பல இளைஞர்கள் கையிலெடுத்து இருப்பதை அருமையாக காட்சிப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் ஸ்போர்ட்ஸ் துறையில் நடக்கும் சில கேடுகெட்ட அரசியல் தான் நம் நாட்டுக்கு பல பதக்கங்களை பெற்றுத் தர முடியாமல் உள்ளது என்பதையும் சென்னையில் உள்ள தனக்கே இவ்வளவு பிரச்னை என்றால் பிற மாவட்ட இளைஞர்களின் நிலை என பேசும் வசனமெல்லாம் கைதட்டல்களை பெறுகிறது.
காமன் வெல்த் கேம்ஸில் நடைபெற்ற ஊழல் சம்பவங்கள், நிஜமாகவே பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களின் காட்சிகள் என கிளைமேக்ஸில் காட்டிய விதமும் அருமை. கோச் ருத்ராவாக நடித்துள்ள வசுந்தரா, விளையாட்டுத்துறை அமைச்சராக வரும் மன்சூர் அலி கான். பாலியல் சீண்டலுக்கு ஆளாகி ஸ்போர்ட்ஸை கைவிடும் சத்யாவாக நடித்துள்ள சிந்தூரி, வழக்கறிஞர் ஆண்டாள் கதாபாத்திரத்தில் மிரட்டும் விஜி வெங்கடேஷ் என அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்துள்ளனர்.

பிளஸ்: ஸ்போர்ட்ஸ் படம் என்பதால் காலில் நரம்புகள் தெரியும் அளவுக்கு உடலை கட்டுமஸ்த்தாக மாற்றும் அளவுக்கு டிரான்ஸ்ஃபர்மேஷன் கொடுத்து நடித்துள்ளார். விளையாட்டுத் துறையில் ஏழை வீட்டில் இருந்து வரும் திறமையானவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அங்கீகாரத்தை எப்படியெல்லாம் தடுக்கின்றனர் என்பதை நல்லாவே R and D செய்து காட்டிய விதம் அருமை. நீதிமன்றத்தில் தனி ஒரு மனிதனாக பெரிய வழக்கறிஞரை எதிர்த்து வாதாடும் காட்சிகளும் ஒவ்வொரு முறையும் பேச்சில் இயலாமையும், எப்படியாவது ஓட வேண்டும் என்கிற வெறியும் தெரியும் வண்ணம் எழுதப்பட்ட விஷயங்கள் சிறப்பு. ஜிப்ரான் இசையில் பானுமதியின் மரண பாடல் நெஞ்சை பிழிகிறது. ஏ. விஸ்வநாத்தின் ஒளிப்பதிவும் நீதிமன்ற செட் அமைத்த ராமு தங்கராஜின் கலை இயக்கமும் கைதட்டல்களை அள்ளுகிறது.
மைனஸ்: ஆரம்பத்தில் சில இடங்களில் ஏற்பட்ட டப்பிங் பிரச்சனை மற்றும் முதல் பாதியில் பெரிதாக எந்தவொரு சுவாரஸ்யமும் இன்றி படம் ரொம்பவே சுமாரான மீட்டரில் நகர்ந்தது மிகப்பெரிய மைனஸ் ஆக மாறி நிற்கிறது. இடைவேளைக்குப் பிறகு வரும் கோர்ட் ரூம் டிராமாவிலும் நாயகன் பக்கமே நீதிபதிகள் பேசுவதும், அரசு தரப்பில் பெரிய பில்டப்புகளுடன் ஆஜராகும் வழக்கறிஞர் ஆண்டாள் பெரிதாக ஹீரோவை வாதத்தால் அல்லது பொய் சாட்சிகளால் காலி செய்தது போல எந்த ஒரு விஷயமும் இல்லாதது ரொம்பவே ஃப்ளாட்டாக படத்தை மாற்றுகிறது. கன்டென்ட்டாக படம் நல்லா இருந்தாலும், கிராஃப்டாக பல இடங்களில் தடுமாறுகிறது. சில பல குறைகள் இருந்தாலு, பெத்தி படம் போல கிளாமர், குத்துப் பாட்டு என திசை மாறாமல் எடுத்துக் கொண்ட கதையை கடைசி வரை சரியாக சொன்ன விதம் கச்சிதம்.


Click it and Unblock the Notifications