Rocket Driver Blue Sattai Maran Review: ராக்கெட் டிரைவர் தேறுமா? தேறாதா? ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!
சென்னை: இயக்குநர் ஸ்ரீராம் ஆனந்தசங்கர் இயக்கத்தில், சுனைனா, நாகா விஷால், காத்தாடி ராமமூர்த்தி,விஷ்வத், ஜெகன் ராமசந்திரன் துரைராஜ் உள்ளிட்ட பலர் நடித்து இன்று அதாவது அக்டோபர் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் ராக்கெட் ட்ரைவர். இப்படம் வித்தியாசமான கதைக்களைத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை என்பது, 1948இல் இருந்து அப்துல் கலாம் டைம் டிராவல் செய்து கொண்டு நிகழ்காலத்திற்கு வருகின்றார் என்றால், என்னவெல்லாம் நடக்கின்றது என்ற ஃபேண்டஸி கதைதான். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “ படத்தின் ஆரம்பத்தில் ஹீரோ ஒரு ஆட்டோ டிரைவராக உள்ளார். அவருடைய லட்சியம் என்னவென்றால், அப்துல்கலாம் போல் பெரிய ஆராய்ச்சியாளர் ஆகவேண்டும். ஆனால் அவரது அப்பா, ஆட்டோ வாங்கிக் கொடுத்து ஆட்டோ ஓட்டிப் பிழைத்துக் கொள் எனக் கூறியிருப்பார். இதனாலேயே அவரது அப்பா மீது அவருக்கு கோபம் இருக்கும்.

இருந்தாலும் அவருக்குள் சைண்டிஸ்ட் ஆகிவிடவேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. தனது ஆட்டோவில் கூட அப்துல்கலாம் புகைப்படத்தைத்தான் ஒட்டிவைத்திருப்பார். ஒருநாள் இவர் ஆட்டோ ஓட்டிக் கொண்டு இருக்கும்போது ஒரு சவாரி வரும். ஒரு பதினைந்து வயதுடைய பையன் கையில் அந்த காலத்து தகரப் பெட்டியை வைத்திருக்கின்றான். ஆட்டோவில் ஏறும் அந்தப் பையன் நான் ஊருக்குப் புதுசு அண்ணா. எனக்கு உதவி செய்யுங்க எனக் கூறுகின்றார். உடனே ஹீரோ அந்தப் பையனைப் பார்த்து எங்கே போகனும் எனக் கேட்க, அவன் மெட்ராஸ் யுனிவர்சிட்டி போகனும் எனக் கூறுகின்றான்.
அப்துல் கலாம்: அங்கு போகும் வழியில் இருவருக்கும் இடையிலான பேச்சு வார்த்தை நடக்கின்றது. இதில் ஆட்டோ டிரைவர் குழம்பி போகின்றார். காரணம் அந்தப் பையன் அந்தக்காலத்து ஆள் மாதிரி பேசிக்கொண்டு உள்ளார். அங்கு போனபின்னர் அவரது பெயர் என்னவெனக் கேட்க, ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எனக் கூறுகின்றார். அப்போதுதான் ஆட்டோ டிரைவருக்கு புரிகின்றது, அப்துல் கலாம் டைம் டிராவல் செய்து வந்துள்ளார் என்பது. அதன் பின்னர் இவர் என்ன காரணத்திற்காக வந்துள்ளார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றார்கள் என்பதுதான் கதை.

நடிப்பு: 1948இல் இருந்து நிகழ்காலத்திற்கு அப்துல் கலாம் வந்தால் என்ன நடக்கும், என்ன காரணத்திற்காக வந்திருப்பார் என்ற கற்பனைக் கதையை மிக நேர்த்தியாகவே படமாக்கியுள்ளனர். படத்தில் அப்துல்கலாம் கதாபாத்திரம் வந்ததும் படம் சுவாரஸ்யமாகச் செல்கின்றது. படத்தின் இரண்டாம் பாதியில் காத்தாடி ராமமூர்த்தியின் கதாபாத்திரம் ஒன்று வரும். அது வந்த பின்னர் படம் மிகவும் சுவாரஸ்யமாகவே சென்றது. காத்தாடி ராம மூர்த்தி மற்றும் அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் நடித்த சின்ன பையனும் சிறப்பாக நடித்திருந்தார்கள்.
எப்படி இருக்கு: மொத்தத்தில் படம், வித்தியாசமான கதையை எடுத்துக் கொண்டு, அதில் முடிந்த அளவிற்கு சுவாரஸ்யப்படுத்தியுள்ளார்கள். அங்கங்கு சில தொய்வு இருக்கத்தான் செய்கின்றது. அந்த தொய்வு இல்லாமல் இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இந்தப் படம் பார்க்கும்போது ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்க்கும் எண்ணத்தைத்தான் ஏற்படுத்துகின்றது. இந்தப் படத்தை பார்க்கும்போது ஒரு ஷார்ட் ஃபிலிமை பெரிய திரையில் பார்க்கின்றீர்கள் என்ற எண்ணத்தோடு பார்த்தால் படம் ஓ.கே. ரகமான படமாகத்தான் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











