Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Lifestyle கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- News 2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அறம் விமர்சனம் #Aramm
Recommended Video
-எஸ் ஷங்கர்
நடிகர்கள்: நயன்தாரா, ஈ ராமதாஸ், முத்துராமன், விக்னேஷ்
ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்
இசை: ஜிப்ரான்
தயாரிப்பு: ஜே ராஜேஷ்
எழுத்து - இயக்கம்: கோபி நயினார் மக்கள் பிரச்சினைகளை வைத்து படம் பண்ணும்போது மிகுந்த கவனம் தேவை. இல்லையென்றால் அந்தப் படம் மோசமான விமர்சனங்களைச் சந்திக்க வேண்டி வரும். அறம் படமும் மக்களின் முக்கியப் பிரச்சினையைத்தான் பேசுகிறது. கோபி நயினாரும் நயன்தாராவும் இந்தப் படத்தை எப்படிக் கொடுத்திருக்கிறார்கள்? தமிழகத்தின் வடக்கு எல்லையில் உள்ள காட்டூர் ஒரு பக்கா கிராமம். குடிக்கத் தண்ணீர் கூட இல்லாத அந்த கிராமத்தில் வாழ்க்கையோடு போராடுகிறது சுனு லட்சுமியின் குடும்பம். வேலைக்குப் போகும்போது கூடவே நான்கு வயது மகளையும் அழைத்துப் போகிறாள் சுனுலட்சுமி. அங்கு தோண்டப்பட்டிருக்கும் ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை விழுந்துவிட, குழந்தையை மீட்கும் பணிக்கு நேரடியாக மாவட்ட ஆட்சியரான நயன்தாராவே வந்துவிடுகிறார். பொதுமக்கள், சக அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள், மீடியா பரபரப்புகளைத் தாண்டி அவரால் குழந்தையைக் காப்பாற்ற முடிந்ததா என்பதுதான் மீதி. நீண்ட நாள்களுக்குப் பிறகு மக்கள் பிரச்சினைகளை வைத்து பளிச்சென்று எந்த வணிக சமரசமும் இல்லாமல் ஒரு படம் கொடுத்திருக்கிறார்கள். இயக்குநர் கோபி நயினார், அவருக்கு இப்படி ஒரு வாய்ப்புத் தந்த நயன்தாரா இருவருமே வாழ்த்துக்குரியவர்கள். மக்கள் எதிர்நோக்குகிற பிரச்சினைகள், ஏழ்மையை வைத்து மெல்ல ஆரம்பிக்கிறது படம். ஆனால் போகப் போக நம்மையுமறியாமல் அந்த காட்டூர் கிராமத்துக்கே நாம் போய்விடுகிறோம். குழந்தையை மீட்கும் அந்தத் தருணங்கள், அதில் நயன்தாரா காட்டும் இயல்பான, உண்மையான அர்ப்பணிப்பு நம்மை பரபரப்பின் உச்சிக்கே இட்டுச் செல்கிறது. ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழும் குழந்தைகளை மீட்பதில் உள்ள பிரச்சினைகளை மிக நுணுக்கமாக, உணர்வுப்பூர்வமாகக் காட்டியிருக்கிறார். படத்தின் பெரும் பலம் நயன்தாரா. இரண்டே உடைகள்தான் படம் முழுக்க. இவரைத் தவிர இன்னொரு நடிகையால் இப்படி ஒரு கதையைத் தாங்கியிருக்கவே முடியாது. நயன்தாராவின் தி பெஸ்ட் படம் என்று இதனைச் சொல்லலாம். இனி அவர் மரத்தைச் சுற்றி டூயட் பாட வேண்டியதில்லை. சுமதியாக வரும் சுனு லட்சுமி வெகு இயல்பாக நடித்திருக்கிறார். ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துவிடும் அந்தக் குழந்தையும் அருமை. ஈ ராமதாஸ், முத்துராமன், விக்னேஷ், தீயணைப்பு வீரர்களாக வருபவர்கள் என யாருமே நடிகர்களாக இல்லாமல், படத்தின் பாத்திரங்களாகவே தெரிகிறார்கள். படத்தில் நயன்தாராவுக்கு நிகரான முக்கியத்துவம் திரைக்கதை - வசனத்துக்கு. பல இடங்களில் கைத்தட்டல் பெறுகின்றன வசனங்கள். "விண்வெளிக்கு ராக்கெட் அனுப்ப முடியும் இந்தியாவால், ஏன் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியவில்லை... குழிக்குள் விழுந்த ஒரு குழந்தையைக் கூட காப்பாற்ற முடியவில்லையே," என்ற கேள்விக்கு பதிலில்லை. செய்திகளை சென்சேஷனலாக்கும் மீடியாவையும் ஒரு பிடி பிடித்திருக்கிறார் இயக்குநர். ஆனால் அதுவே கொஞ்சம் ஓவர் டோசாகவும் உள்ளது. சில இடங்களில் வேகம் தொய்வதும் அடுத்தடுத்த காட்சிகள் விறுவிறுப்பாக அமையுமாறும் எடிட்டிங் செய்துள்ளார் ரூபன். இந்த உத்தி நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷுக்கு டபுள் ட்யூட்டி. அதுவும் அந்த ஆழ்துளைக் கிணறு குழந்தை மீட்பை நிஜமாகவே பெரும் பள்ளம் தோண்டிப் படமாக்கியிருக்கிறார்கள். ஜிப்ரானின் இசை படத்தின் உணர்வைச் சிதைக்காத வகையில் அருமையாக உள்ளது. இயக்குனர் கோபி மிகுந்த சிரத்தையெடுத்து தகவல்களைத் திரட்டி அதை கதைவழியே மக்களுக்குச் சேர்த்துள்ளார். சில இடங்களில் கொஞ்சம் பிரச்சார வாடை அடித்தாலும், பாராட்டப்பட வேண்டிய வேலை இது. பார்க்க வேண்டிய படம் அறம்!