அரண்மனை 4 விமர்சனம்: முதல் பாதி ப்ளஸ், காமெடி மிஸ்! படம் எப்படி இருக்கு?
சென்னை: காமெடி காட்சிகள், ஆங்காங்கே கவர்ச்சி தூரல்கள் இவை கலந்த கலாட்டா மசாலா படங்கள்தான் சுந்தர்.சி ட்ரேட் மார்க். இது மட்டும் போதாது என, சமீப காலமாக கூடுதலாக சேர்க்கப்பட்ட மசாலாதான் பேய் ஜானர். இந்த மூன்றும் சேர்ந்த கலவையாக வந்த, அரண்மனை 1, அரண்மனை 2 படங்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பை தந்த நிலையில் அரண்மனை 3 சறுக்கியது.
அசரவில்லை சுந்தர் சி. இந்த கோடை விடுமுறையை டார்கெட் செய்து அரண்மனை 4 படத்தை ரிலீஸ் செய்துவிட்டார். குஷ்பு தயாரிப்பில், ஹிப்ஹாப் ஆதி இசையில், தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து மே 3ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீசாகியுள்ளது அரண்மனை 4.

குழந்தைகள், குடும்பங்கள் கொண்டாடும் படமா அல்லது, எதிர்பார்ப்பை பொய்யாக்கியதா? இதோ விமர்சனம் (Aranmanai 4 Review in Tamil)
சரவணன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சுந்தர் சி வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார். அப்பா வழி அத்தையாக கோவை சரளா, சகோதரி கதாப்பாத்திரங்களில் தமன்னா நடித்துள்ளனர்.
காதலித்தவரோடு வேறு ஊருக்கு தமன்னா ஓடிப்போய் குடும்பம் நடத்த, 10 வருடங்கள் கழித்து திடீரென அவரது வாழ்க்கையில் பல சோகங்களை எதிர்கொள்கிறார். விஷயத்தை கேள்விப்பட்டு அத்தையோடு தங்கையின் ஊருக்கு போய் அவரது அரண்மனை மாதிரியான வீட்டுக்குள் தங்குகிறார் சுந்தர் சி.

அப்போது படிப்படியாக தங்கை வீட்டில் என்ன நடந்தது என்பது பற்றிய க்ளூ கிடைக்க ஆரம்பிக்கிறது. அதை நூல்பிடித்துச் செல்லும்போது பல அதிர்ச்சி பின்னணிகளை கண்டுபிடிக்கிறார் சரவணன். பிரச்சினைகளை தீர்த்து தங்கை "குடும்பத்தை" சரவணன் எப்படி காத்தார் என்பதை, கொஞ்சம் காமெடி, அப்பப்போ ஹாரர் என காட்டியுள்ளது இந்த அரண்மனை.
முதல் பாசிட்டிவ்: படத்தின் ஆரம்பம் முதல் இடைவேளை வரை திரைக்கதை வேகமாக பயணிக்கிறது. இந்த முதல் பாதியில் பல மர்மங்கள் நிகழ்கின்றன, அதற்கான க்ளூவும் காட்டப்படுகின்றன. இதனால் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் ஆர்வத்தோடு கதையோடு ஒன்றி பயணிக்க முடிகிறது. இடைவேளையின்போது பாப்கார்ன் வாங்கியதுமே, சீக்கிரம் சீட்டுக்கு வர வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு தோன்றுவது இதனால்தான். சமீப காலத்தில் நடித்த சில படங்களில் கோவை சரளா காமெடி என நினைத்து ஓவராக சத்தம் போட்டு பேசுவாரே, அப்படியெல்லாம் இதில் எரிச்சல் செய்யாமல், தனது ட்ரேட் மார்க் எதுகை மோனை பேச்சால் காமெடி செய்திருப்பது முதல் பாதிக்கு மற்றொரு பலமாக உள்ளது.

இரண்டாவது பாசிட்டிவ்: தமன்னாவின் நடிப்பு மற்றொரு பாசிட்டிவ். தமன்னாவிடம் கவர்ச்சியை எதிர்பார்த்து போன ரசிகர்களுக்கு ஏமாற்றம் கிடைத்திருக்கலாம், ஆனால் நடிப்பை எதிர்பார்த்து போனவர்களுக்கு அதை போதிய அளவுக்கு பரிமாறியுள்ளார். கல்லூரி, தர்மதுரை போன்ற படங்களில் பார்த்த ஹோம்லி நடிப்பு அவரிடம். நல்லவேளையாக, அவரும், ராஷி கண்ணாவும் போடும் கவர்ச்சி டான்சை படத்துக்கு நடுவே வைக்காமல் என்ட் கார்டு போட்ட பிறகு சேர்த்துள்ளார் சுந்தர் சி. க்ளைமேக்ஸ் அம்மன் பாடலில் சிம்ரன், குஷ்பு போடும் நளினமான ஆவேச ஆட்டம் அந்த காட்சிக்கு வலு சேர்க்கிறது.

அரண்மனை நெகட்டிவ்: சுட்டு போட்டாலும் நடிப்பு வரவில்லை சுந்தர் சிக்கு. மிகப்பெரிய அதிர்ச்சி செய்திகளை கேள்விப்படும்போது கூட, "அந்த டேபிளுக்கு ஒரு ஊத்தப்பம் போகல பாரு" என்று சர்வரை பார்த்து சொல்லும் ஹோட்டல் உரிமையாளரை போலவே முகத்தை வைத்து பேசிக்கொண்டுள்ளார். தங்கை மீது அதீத பாசமுள்ளவராக ஆரம்ப காட்சியில் காட்டப்பட்டாலும், தங்கையின் காதல் விவகாரத்தில் ஏதோ வேடிக்கை பார்க்க வந்த பக்கத்து வீட்டு பையன் மாதிரி செயல்படுவதாக கேரக்டர் எழுதப்பட்டிருந்தது பெரும் சொதப்பல். பக்கத்து வீட்டு நபர் மாதிரி இருப்பதும், இந்த கதைப்படி, அடிக்கடி முகத்தில் நடிப்பை காட்ட தேவையில்லாததும் சுந்தர் சியை மன்னித்து ஏற்றுக்கொள்ள வைத்துள்ளது.
காமெடி பஞ்சம்: யோகி பாபு, விடிவி கணேஷ் கெட்அப் ப்ரெஷ்ஷாக இருந்தபோதிலும் காமெடி எடுபடவில்லை. குழந்தைகளை டார்கெட் செய்யும் இந்த மாதிரி படங்களில் கிரிஞ்ச்சாக இருந்தாலும் பரவாயில்லை என முயற்சி செய்து பார்த்திருக்க வேண்டும். ஆனால் ரொம்ப சாஃப்ட்டாக காமெடி கையாளப்பட்டுள்ளது. முதல் அரை மணி நேரத்திற்கு பிறகு கோவை சரளாவிற்கும் காமெடியில் பெரிய ஸ்கோப் இல்லை. ராஷி கண்ணாவை ஹீரோயினாகவும் பயன்படுத்தவில்லை, கவர்ச்சிக்காகவும் இல்லை. அவர் இல்லாவிட்டாலும் படத்திற்கு பாதிப்பு இல்லை என்பது போல பயன்படுத்தியுள்ளனர். சுந்தர் சி படங்களின் ட்ரேட்மார்க்கான காமெடியும், கவர்ச்சியும் இதில் மிஸ் என்பது அதற்கான ரசிகர்களுக்கு பெரிய குறைதான்.

படத்தின் செட்: தமன்னா வசிக்கும் ஊர் மற்றும் அது சார்ந்த காடுகளில் பக்காவான செயற்கைத்தனம் தெரிகிறது. கிச்சா சுதீப் நடிப்பில் 2 வருடங்கள் முன்பு வெளியான விக்ராந்த் ரோணா படத்தால் ஹெவியாக இம்ப்ரஸ் ஆகியிருப்பார்கள் போல தெரிகிறது. ஆனால் நில அமைப்பில் கடும் நெருடல் இருக்கிறது. கதை எந்த ஊரில் நடக்கிறது என்பதை கனெக்ட் செய்துகொள்ள முடியவில்லை. குலசை தசரா விழாவை போன்றே ஒரு விழாவை காட்சிப்படுத்த நினைத்திருந்தாலும் பெரிய பிரமாண்டமாக அது இல்லை. கிளைமேக்ஸ் அம்மன் பாடலில் மட்டுமே ஹிப்ஹாப் ஆதிக்கு வேலை இருக்கிறது. மற்றபடி சோபிக்கவில்லை.
பழகிய டெம்ப்ளேட்: முதல் பாதி பாசிட்டிவ் என்றால் படத்தின் இரண்டாவது பாதி நெகட்டிவ். தானே பலமுறை, அடித்து துவைத்த அதே டெம்ப்ளேட்டை சுந்தர் சி பயன்படுத்தியுள்ளார். கிளைமேக்ஸ் நெருங்கும்போது சுந்தர் சி காரில் பரபரப்பாக போவது, இன்னொரு பக்கம் அம்மன் பாடல் இசைக்கப்படுவது என முந்தைய படத்தின் ரீலை மாற்றி இதில் போட்டுவிட்டார்களா என்ற சந்தேகத்தோடு, கண்ணை கசக்கி பார்க்க வைக்கிறது காட்சிகள். அம்மன் வந்து தீமையை அழிப்பது கிளைமேக்சாக இருப்பது சரியானதுதான். ஆனால் அதற்கு முந்தைய காட்சிகளை புது வகையில் யோசித்து வைக்க வேண்டும். அரண்மனை 5லாவது இயக்குநர் இதை யோசிப்பார் என நம்புவோம்.
அரண்மனை படம் எப்படி: ரிலீசே இல்லாமல் வறண்டு போய் கிடக்கும் தமிழ் சினிமாவில் குடும்பத்தோடு போய் நேரம் போக்க ஏற்ற படம் அரண்மனை 4. முகம் சுளிக்கும் காட்சிகள் இல்லை. கவர்ச்சி காட்சிகள் இல்லை. காமெடியும், ஹாரரும் மைல்டாக தூவப்பட்ட ஒரு டீசன்டான படமாக வெளியாகியுள்ளது அரண்மனை. கண்டிப்பாக அரண்மனை 3-க்கு மேல்தான். ஆனால் அரண்மனை 1 அளவுக்கு இல்லை. இரண்டாவது பாதியிலும், முதல் பாதியின் க்ரிப் இருந்திருந்தால், 5-க்கு 3.5 மதிப்பெண்ணுக்கு மேலே பெறத் தகுதியான படம்தான். ஆனால் முதல் பாதிக்காக 3 மதிப்பெண்களை வழங்கலாம்.


Click it and Unblock the Notifications











