Con City: மூளையை பைக் ஸ்டாண்ட்ல கழட்டி வச்சிட்டு படம் பாருங்க.. கான் சிட்டி செய்யாறு பாலு விமர்சனம்!
சென்னை: தனது கம்பீரமான குரலால் தனி முத்திரை பதித்த அர்ஜுன் தாஸ், மலையாள நடிகை அன்னா பென், காமெடி கிங் யோகி பாபு, வடிவுக்கரசி, சக்ஷி வைத்யா, வி.டி.வி. கணேஷ், ராதா ரவி, அருள்தாஸ் உள்ளிட்டப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள 'கான் சிட்டி' திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், படம் பார்த்த கையோடு செய்யாறு பாலு படம் எப்படி இருக்கிறது என்ற அசல் பின்னணியை உடைத்துள்ளார்.
கான் சிட்டி ஒன்-லைன் கதை: கர்நாடகாவில் ஒரு தமிழ் குடும்பம் இருக்கிறது. அவர்கள் அங்கு ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார்கள். இப்படிச் போய்க்கொண்டிருக்கும் வேளையில், ஒரு நாள் அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஒரு சிறுவன் திடீரெனக் காணாமல் போகிறான். பதறிப்போன குடும்பத்தினர் பள்ளிக்குச் சென்று விசாரித்த போது, யாரோ ஒரு நபர் அந்தப் பையனை அழைத்துச் சென்றதாகச் சொல்கிறார்கள். யார் அவன் என்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்க்கும்போது அத்தனை பேருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி அடைகின்றனர். அதன் பிறகுதான் கதையே தமிழ்நாட்டில் இருக்கும் மங்களாபுரம் என்ற கிராமத்திற்குள் நுழைகிறது.

இதுதான் கதை: நீங்கள் அடுத்தவர்களை ஏமாற்றினீர்கள் என்றால், ஒரு நாள் நீங்களும் ஏமாந்து போவீர்கள் என்பதுதான் இந்தக் கான் சிட்டி திரைப்படத்தின் ஒன்-லைன் கதை. படத்தில் வரும் வடிவுக்கரசி, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, அன்னா பென் ஆகிய நான்கு பேருமே பக்கா மோசடிக்காரர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் மோசடி நபர்களாக மாறும் இவர்கள் நால்வரும் எப்படி ஒரு குடும்பமாக ஒன்றாகச் சேர்ந்து கர்நாடகாவில் ஹோட்டல் நடத்தினார்கள்? காணாமல் போன அந்தச் சிறுவன் கிடைத்தாரா இல்லையா? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.
மைனஸ்: இப்படத்தின் டிரெய்லர் மிகவும் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்ததால், அதை மனதில் வைத்துக் கொண்டு யாரும் படம் பார்க்கச் செல்லக் கூடாது. தியேட்டருக்குள் படம் பார்க்கச் செல்லும் முன்பே நாம் நமது மூளையைக் கழட்டி பைக் ஸ்டாண்டில் பத்திரமாக வைத்துவிட்டுத்தான் உள்ளே போக வேண்டும். ஏனென்றால், கதை போகப் போக எந்தவொரு லாஜிக்கும் இல்லாமல் செல்கிறது. என்னதான் படத்தில் டார்க் காமெடி, பிளாக் காமெடி என பில்டப் கொடுத்திருந்தாலும், ஒரு சீனுக்கு கூடவா லாஜிக் வேண்டாமா? ஏமாற்றாதே ஏமாறாதே சொல்லிவிட்டு, தியேட்டருக்குள் படம் பார்க்க வந்த அத்தனை வாசகர்களையும், ரசிகர்களையும் மொத்தமாக ஏமாற்றி இருக்கிறார்கள். மோசடிகளைப் பற்றிப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள், ஆனால் அதைச் சுவாரசியமாகச் சொல்லத் தவறிவிட்டார்கள். இதனால் படம் பார்த்து முடித்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் அனைவரும் தலையிலடித்துக் கொண்டு உச்சிக்கொட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்று செய்யாறு பாலு கான் சிட்டி படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications