ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்... 'அவளுக்கென்ன அழகிய முகம்'! விமர்சனம்
நான்கு இளைஞர்களின் காதல் கதை தான் 'அவளுக்கென்ன அழகிய முகம்' திரைப்படம்!
சென்னை: நான்கு இளைஞர்களின் காதல் கதையை தனித்தனி எபிசோட்களாக சொல்லும் படம் 'அவளுக்கென்ன அழகிய முகம்'.
காதல் இருக்கும் வரை தமிழ் சினிமாவும் இருக்கும் என்பதை சொல்லும் மற்றுமொரு காதல் படம் தான் 'அவளுக்கென்ன அழகிய முகம்'. அறிவழகன், ராகவன், சிவா ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். கோயம்புத்தூரில் உள்ள டாஸ்மாக் பார்களில் ஒன்றாக மதுக்குடித்து மட்டையாகும் இந்த மூவரும் சரக்கடிக்க காரணம் காதல் தோல்வி. இவர்களுடன் எதேச்சையாக சேரும் கிருஷ்ணாவுக்கும் தனது காதலில் பிரச்சினை. மதுரை திருமங்கலத்தில் இருக்கும் அவரது காதலி காவ்யாவை சந்திக்க, நால்வர் அணி கிளம்புகிறது. இவர்களுக்கு தேரோட்டியாக (ஜீப் டிரைவர்) பவர் ஸ்டார் சீனிவாசன். இவர்கள் அனைவரும் சேர்ந்து கிருஷ்ணா - காவ்யாவின் காதலை சேர்த்து வைக்கிறார்களா என்பதே படம்.

வித்தியாசமான கதை எல்லாம் இல்லை. ஆனால் அதை சொன்னவிதத்தில் வித்தியாசம் காட்டி கவனம் ஈர்க்கிறார் புதுமுக இயக்குனர் கேசவன். ஒரு ஹீரோ மற்றவர்கள் எல்லாம் சைட் ஆர்டிஸ்ட் என ஓரங்கட்டாமல். நால்வருக்கும் தனித்தனியே பிளாஷ் பேக் காதல் கதை சொல்லியிருப்பது வரவேற்கும் ஐடியா.
அறிவழகனின் பிளாஷ் பேக் காட்சிகளில் அவரது நண்பனாக வரும் யோகி பாபு, காமெடியில் கலக்கி இருக்கிறார். சினிமாவுக்கு வந்த புதிதில் ஒப்புக்கொண்ட படம் போல. யோகி பாபு இருக்கும் போது, பவர் ஸ்டாரை மெயின் காமெடியனாக போட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சுமார் 15 நிமிட காட்சிகள் தான் என்றாலும், செம கலாய் கலாய்க்கிறார் யோகி பாபு.
பூவரசன், விக்கி, சபரி, விஜய் கார்த்திக் என படத்தில் நடித்துள்ள பசங்க எல்லோருமே கலக்கி இருக்கிறார்கள். ஹீரோயின் அனுபமாவும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறர். சுப்பு அருணாசலம், அம்மு, சம்பத் ராம், இந்து ரவி, ரவி வெங்கட்ராமன் என படத்தில் நடித்துள்ள அனைவருமே சிறப்பாக பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் டேவிட் ஷோரன் சர்ப்ரைஸ் அறிமுகம். எல்லா பாடல்களுமே சூப்பர் சொல்ல வைக்கிறது. ஐஸ்வர்யா பாட்டு செம ஐடம் நம்பர் புரோ. ஆனால் இளையராஜாவை வைத்தே பின்னணி இசை வேலைகளை முடித்திருப்பது தான் உறுத்தல். என்னடா கண்ணா பாடலில் நவநீதனின் மேகரா பளிச் என தெரிகிறது.
தமிழ் சினிமா இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் காதலை ஊட்டி வளர்க்குமோ தெரியவில்லை. நான்கு இளைஞர்களின் காதலுக்கும் பிளாஷ் பேக் வைத்திருப்பது முதலில் சுவாரஸ்யமாக இருந்தாலும், ஒரு கட்டத்திற்கு பிறகு அலுப்பை ஏற்படுத்துகிறது. நாடோடிகள் படத்தின் பாதிப்பு அப்படியே தெரிகிறது. அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சி ஈயடிச்சாங் காப்பி.
சின்ன பசங்க சேர்ந்து படம் எடுத்திருப்பதால், 'அவளுடைய முகம்' அழகாகவே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











