Avatar 2 Review: ஜேம்ஸ் கேமரூனின் ப்ளூ மேஜிக் மீண்டும் கை கொடுத்ததா? அவதார் 2 விமர்சனம்!
நடிகர்கள்: சாம் வொர்த்திங்டன், ஜோ சல்டானா, கேட் வின்ஸ்லெட்
இசை: சைமன் ஃபிராங்க்ளன்
இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன்
சென்னை: அவதார் முதல் பாகம் 2009ல் வெளியான போது இதுவரை உலக மக்கள் பார்த்திராத ஒரு புதிய பாண்டோரா உலகத்தை ப்ளூ மேஜிக் உடன் மோஷன் கேப்ஷரிங் எனும் புதிய டெக்னாலஜியுடன் மனிதர்களும், அனிமேஷன் உருவங்களும் இணைந்து தத்ரூபமாக வாழும், சண்டையிடும் ஒரு பிரம்மாண்ட மேஜிக்கை திரையில் காட்டிய ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த 13 ஆண்டுகால தவத்தில் உருவாகி உள்ள படம் தான் அவதார் 2 - அவதார் தி வே ஆஃப் வாட்டர்.
ஜனனும் மரணமும் தண்ணீரில் தான் என்கிற வரிகளுடன் கூடிய ரிதம் பட பாடலின் கான்செப்ட் தான் இந்த படத்தின் கதை என்றும் சொல்லலாம்.
வாழ்க்கையின் மிக முக்கியமான தத்துவமே 'சந்தோஷம்' தான்.. அதுதான் நம் பலமும் பலவீனமும் என நாயகன் ஜேக் சுல்லி சொல்லும் இடம் உடம்பே புல்லரிக்கிறது.. வாங்க அவதார் 2 படம் எப்படி இருக்குன்னு விரிவாக இங்கே அலசுவோம்..
என்ன கதை
காடுகள் நிறைந்த வனப் பகுதியில் மனிதர்களுக்கும் நாவி இன மக்களுக்கும் இடையே நடைபெற்ற பெரிய போரில் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. நிலத்தில் இருந்து நீரில் வாழ முடிவெடுத்து தனது கூட்டத்துடன் நாவி இனத்தவராக மாறிய ஜேக் சுல்லி கிளம்ப நீரில் வாழும் மக்களும் நாவி இன மக்களுமே ஜேக் சுல்லியை ஒரு வந்தேறியாகவே பார்க்கின்றனர். அங்குள்ளவர்களுடனான போராட்டம் மற்றும் மீண்டும் வரும் மனிதப் படையை தனது குடும்பத்துடன் எதிர்கொண்டு குடும்பத்தை காப்பாற்றவும் நாவி இன மக்களை காப்பாற்றவும் நாயகன் போராடும் காதை தான் இந்த அவதார் 2.
ஜேம்ஸ் கேமரூன் மேஜிக்
உலகத்துக்கு ஏற்கனவே நாவி மக்களை அவதார் படம் மூலம் அறிமுகப்படுத்தியாச்சு, 2வது பாகத்தை அதுவும் இத்தனை ஆண்டுகள் கழித்து அவர்கள் ஏன் பார்க்க வேண்டும், எப்படி பார்க்க வருவார்கள் என்பதை ஆழமாக யோசித்து திரைக்கதையிலும், விஷுவல் எஃபெக்ட்ஸிலும் மீண்டும் தனது மாயாஜால வித்தையை ஒட்டுமொத்தமாக இறக்கி இருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.
இன எழுச்சி
பேராசை காரணமாக ஒரு இனத்தை அழிக்க நடக்கும் முயற்சிகளை புதிய உலகத்தில் புதிய பரிணாமத்தில் ஆனால், காரம் கொஞ்சமும் குறையாமல் அந்த நில மக்களுக்குத் தான் அந்த நிலம் சொந்தம் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கும் படம் தான் அவதார் 2. ஜேக் சுல்லியின் குழந்தைகள், கர்ப்பமான நெய்த்ரி, நீரில் வாழும் உயிர்களை புதுவிதமாக தனது கற்பனைத் திறனைக் கொட்டி எங்கேயும் பிசிறு தட்டாமல் எடுத்திருக்கும் விதம் அபாரம்.
பிளஸ்
வெறும் ஜிம்மிக் செய்வதற்காக இந்த படத்தில் ஜேம்ஸ் கேமரூன் 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை. 3டி தொழில்நுட்பத்தை வைத்து அடுத்த லெவல் சினிமாட்டிக் எக்ஸ்பீரியன்ஸை மட்டுமின்றி கதைக்கு தேவையான கற்பனை உலகத்தையும், கண்களுக்கு தேவையான காட்சிகளையும் கண் முன்னே கொண்டு வர ஜேம்ஸ் கேமரூன் போட்டிருக்கும் முயற்சி வியக்க வைக்கிறது. சாம் வொர்த்திங்டன், ஜோ சால்டானா, சிகோர்னி வீவர், கேட் வின்ஸ்லெட் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக உள்ளது. இசை, ஒளிப்பதிவு என அனைத்துமே உச்சகட்டம்.
மைனஸ்
அவதார் படத்தில் இருந்த அதே ஆன்மிக நம்பிக்கை இந்த படத்திலும் அதிகமாகவே இடம்பெற்று இருக்கிறது. சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியை வைத்துக் கொண்டு மக்களிடையே அந்த நம்பிக்கையை விதைக்க ஜேம்ஸ் கேமரூன் முயற்சித்திருப்பது சில இடங்களில் சிலருக்கு நெருடலாக இருக்கத்தான் செய்யும். குடும்பம் தான் அனைத்தையும் விட முக்கியம் என்கிற சிம்பிளான கதையில் பிரம்மாண்ட விஷுவல்ஸ் கொடுத்து இருப்பது திரைக்கதையில் இன்னமும் வித்தியாசம் காட்டியிருக்கலாம் என தோன்றுகிறது. ஸ்பாயிலர் அலர்ட்: இந்த படத்தில் ஜேக் சுல்லி, ஜோ சால்டானாவின் குழந்தைகள் தான் இந்த படத்தின் இறுதியில் பெரிய ரோல் பிளே பண்ணி உள்ளனர். அடுத்த பாகங்கள் அவர்கள் கையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் ஐமேக்ஸ் 3டியில் படத்தை பார்த்தால் வியப்பின் உச்சமாக இருக்கும் இந்த படம்.. கொடுத்த காசுக்கு மேலேயே விஷுவல் ட்ரீட் நிச்சயம்!


Click it and Unblock the Notifications











