அய்யன் - விமர்சனம்

பிஆர்ஓ: பிடி செல்வகுமார்
தயாரிப்பாளர்: எஸ் சேகர் ராஜன்
இசை: இளையராஜா
இயக்குநர்: கேந்திரன் முனியசாமி
மாமதுரை படம் மூலம் அறிமுகமான வாசன் கார்த்திக்கின் (சிங்கமுத்து மகன்) இரண்டாவது படம் அய்யன். முழுக்க முழுக்க கிராமம் சார்ந்த ஒரு பொழுதுபோக்குப் படம்.
சட்டத்தைப் பெரிதாக மதிக்கும் கிராமத்துப் பெரியவர் ஆறுமுகத் தேவர் (பிதாமகன் மகாதேவன்). அவரது மகன் வாசன் கார்த்திக் ஒரு முரட்டு, நல்ல இளைஞர். ஒரு கட்டத்தில், சே குவேராவின் ரசிகையான திவ்யா பத்மினியுடன் காதல் வயப்படுகிறார் வாசன்.
திவ்யா பத்மினியின் காதல், வாசன் இயல்பை மாற்றுகிறது. வெறும் முரட்டு இளைஞனாக இருந்தவர், கொஞ்சம் கொஞ்சமாக அநியாயத்தைக் கண்டு பொங்கும் புரட்சி இளைஞனாக மாறுகிறார்.
ஆறுமுகத் தேவரின் உறவுக்காரர் சண்முகராஜன்தான் வில்லன். சட்டவிரோத காரியங்கள் செய்யும் உள்ளூர் எம்எல்ஏ இவர். உறவினர் என்று பார்க்காமல், அவர் செய்யும் தவறுகளைத் தட்டிக்கேட்க களமிறங்குகிறார் வாசன்.
க்ளைமாக்ஸ் என்னவென்பதை இந்நேரம் யூகித்திருப்பீர்கள்!
பழக்கமான கதைதான் என்றாலும், பார்க்கும்படி காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர். அந்த வகையில் இந்தப் படம் பாஸ்தான்!
படத்தின் முக்கிய பலம் இளையராஜாவின் இசை. ரொம்ப காஷுவலாக கலக்கியிருக்கிறார் இசைஞானி. 'எனக்காக ஒருத்தி', 'விடுதலைக் குயில் நான்' ஆகிய இரண்டு பாடல்கள் திரும்பத் திரும்ப கேட்க வைக்கின்றன.
வாசன் கார்த்திக்கின் நடிப்பு இயல்பாக உள்ளது. இன்னும் கொஞ்சம் மெருகேற்றினால் ஜொலிக்கக் கூடிய இளைஞர் இவர். அவருக்கு ஜோடியாக வரும் திவ்யா பத்மினியும் சிறப்பாக நடித்துள்ளார்.
சில காட்சிகளில் சோலோவாக வரும் சிங்கமுத்துவின் காமெடி ரசிக்க வைக்கிறது. பிதாமகன் மகாதேவன், சண்முகராஜன் ஆகியோரின் நடிப்பும் ஓகே.
இளையராஜாவின் நல்ல இசைக்காகவே படத்தின் சில குறைகளைக் கூட மன்னிக்கலாம்!


Click it and Unblock the Notifications











