BOAT Review: ’போட்’ விமர்சனம்.. வடிவேலுவுக்கு இம்சை அரசன்.. யோகி பாபுவுக்கு இந்த படம்!
நடிகர்கள்: யோகி பாபு, கெளரி கிஷன், எம்.எஸ். பாஸ்கர்
இசை: ஜிப்ரான்
இயக்கம்: சிம்புதேவன்
ரேட்டிங்:
சென்னை: இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. சந்தானத்தை வைத்து அவர் இயக்கிய அறை எண் 305ல் கடவுள் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப் பெறவில்லை. அதன் பின்னர் தொடர்ச்சியாக சிம்புதேவன் இயக்கிய இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், விஜய் நடித்த புலி உள்ளிட்ட படங்கள் சொதப்பிய நிலையில், சினிமாவில் இருந்தே சில காலம் மாயமாகி விட்டார்.
கசடதபற, விக்டிம் உள்ளிட்ட படங்களையும் இவர் இயக்கினாலும், அந்த படங்கள் இவர் படங்கள் தானா என்பதே பலருக்கும் தெரியாத வண்ணம் புலி படம் தான் கடைசி படம் என்கிற நிலையிலேயே இருக்கிறது. இந்நிலையில், யோகி பாபுவை லீடு ரோலாக வைத்து இவர் இயக்கியுள்ள மற்றுமொரு 'பீரியட் பொலிட்டிக்கல் சட்டையர்' திரைப்படம் தான் இந்த போட்.

BOAT என்பதன் விரிவாக்கமே Based On A True Incident என டைட்டில் கார்டில் போட்ட இடத்திலேயே சிம்புதேவன் கம்பேக் என்பதை நிரூபித்துள்ளார். வடிவேலுவுக்கு இம்சை அரசன் படம் வெற்றிப் படமாக அமைந்தது போல யோகி பாபுவுக்கு இந்த படம் அமையுமா? என்கிற முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
போட் கதை: 1943ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் இந்த படத்தின் கதை அமைகிறது. இரண்டாம் உலகப் போர் ஒருபுறம், சுதந்திரப் போராட்டம் இன்னொருபுறம் இதில் கடற்கரை அருகே உள்ள முகாமை நோக்கி ஜப்பானிய விமானப்படை குண்டு போடப்போறாங்க என ஒரு தகவல் தீயாக பரவ அங்கே இருந்து தனது பாட்டியுடன் குமரன் (யோகி பாபு) தனது படகில் ஏறி கடலுக்குள் சென்று விட்டால் நிலத்தில் தான் குண்டு போடுவார்கள் தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறார். அவருடன் மேலும், சிலர் அந்த படகில் ஏறிக் கொள்கின்றனர். ஆனால், அணுகுண்டை விட மனிதனின் சுயநலம் எவ்வளவு பெரிய கொடுரமானது என்பது அந்த படகு பயணத்தில் தெரிய வருவது தான் போட் படத்தின் கதை.
அரசியல் நய்யாண்டி: இம்சை அரசன் படத்திலேயே ஓவியம், அந்தப்புறம், மல்யுத்த போட்டி, அக்காமாலா, கப்சி, ஆங்கிலேயர்களுடன் இணைந்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக சதி செய்த அரச குடும்பத்தினர் உள்ளிட்ட பல விஷயங்களை அடுக்கி வைத்திருப்பார் சிம்புதேவன். அதே போல 1943ல் நடக்கும் கதைக்களமாக இந்த படத்தை எடுத்துக் கொண்டு சாதி, மத பாகுபாடு, இன்றைய அரசியல் சூழலில் நிலவும் பிரச்சனை உள்ளிட்டவற்றை அரசியல் நய்யாண்டியுடன் கையாண்டு இருக்கும் விதம் தான் இந்த படத்தை ரசிக்க வைக்கிறது.
பிளஸ்: யோகி பாபு படகோட்டியாக அசத்தலாக நடித்துள்ளார். அவரை தொடர்ந்து நூலகராக நடித்துள்ள எம்.எஸ். பாஸ்கர் ஸ்கோர் செய்கிறார். ஹீரோயினாக கெளரி கிஷன் அந்த கானா கர்நாடக சங்கீதம் பாடலில் ஸ்கோர் செய்து விட்டார். சாம்ஸ், ஷாரா, ஆங்கிலேய அதிகாரியாக நடித்துள்ள ஜெஸ்ஸி ஃபாக்ஸ் ஆலன், சின்னி ஜெயந்த், மதுமிதா மற்றும் லீலா என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஆளமான பின் கதையை அமைத்தும் அவர்களுக்கு எழுதப்பட்ட வசனங்களும் தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலமே. படகில் கடலுக்குள் நடக்கும் கதை என்பதால் போர் அடித்து விடாமல் இருக்கும் அளவுக்கு ஜிப்ரான் பின்னணி இசையில் பிரித்து மேய்ந்துள்ளார். நீலக்கடலையும் இயற்கை அழகையும் மனிதர்களின் வெறுப்புணர்வையும் படம் பிடித்து காட்டியதில் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் உழைப்பும் பாராட்டுக்குரியது.
மைனஸ்: லைஃப் ஆஃப் பை படத்தைப் போலவே படகை சுற்றியே படம் நகர்வதால் காட்சிகளை விட வசனங்கள் தான் படத்தை தாங்கிப் பிடிக்கின்றன. முதல் பாதியில் அது சுவாரஸ்யமாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் அதுவே சில இடங்களில் டல் அடித்து விடுகிறது. ஆனாலும், படத்தை முடிந்தவரை சுவாரஸ்யமாகக் கொண்டு சென்று தீவிரவாதி யார் என்கிற ட்விஸ்ட்டும் படகில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்கிற பரபரப்பையும் கொடுத்த விதத்தில் இந்த 'போட்' பாராட்டுக்களை பெறுகிறது.


Click it and Unblock the Notifications











