விஜயகாந்த் பெயரை காப்பாற்றினாரா சண்முகபாண்டியன்? படைத் தலைவன் படம் எப்படி இருக்கு? விமர்சனம்!
சென்னை: கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான படைத் தலைவன் படம் இன்று தியேட்டரில் வெளியானது. அறிமுக இயக்குநர் அன்பு இயக்கியுள்ள இந்த படத்தில் யாழினி சந்திரன், கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, ஏ. வெங்கடேஷ், எஸ்.எஸ். ஸ்டான்லி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் தியேட்டரில் வெளியாகி உள்ள நிலையில், இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
சண்முக பாண்டியன் (வேலு ) என்கிற கதாபாத்திரத்திலும், கஸ்தூரி ராஜா (வெள்ளைச்சாமி) ஆக நடித்துள்ளனர். இவர்கள் மணியன் என்ற யானையை குழந்தையாக நினைத்து வளர்ந்து வருகிறார்கள். அப்படி பாசம் காட்டி வளர்ந்து வந்த யானைக்கு திடீரென மதம் பிடித்து பலரை அடித்து தும்சம் செய்து விடுகிறது. யானைக்கு மதம் பிடித்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், நீதிமன்றம், இதற்கு மேல் யானையை வீட்டில் வைத்து வளர்க்கக்கூடாது, முகாமில் ஒப்படைத்துவிடும் படி சொல்ல, ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். முகாமில் இருந்த யானை திடீரென காணாமல் போய்விட, வேலு, யானையை தேடி, காடு மலையென அலைந்து திரிகிறார். அதன் பிறகு யானை கிடைத்ததா? இல்லையா? என்பது தான் படைத்தலைவன் படத்தின் கதை.

படைத்தலைவன்: இப்படத்தில் சண்முக பாண்டியன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் பறந்து வந்து அடிப்பதும், காலால் பன்ச் கொடுப்பதும் மாஸ். புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்பதை சண்முக பாண்டியன் நிரூபித்துவிட்டார். 'பொட்டு வெச்ச தங்கக்குடம்' பாட்டில் இவரின் ஆக்ஷன் சீக்குவன்ஸ் அதிரடி. ஆனால், சண்முக பாண்டியனை அழுத்தமாக காட்சிப்படுத்தாமல், மேம்போக்கான காட்சிகளை கொடுத்து அவரை டம்மி ஆக்கிவிட்டார். ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பிய சண்முக பாண்டியன் சில காட்சிகளில் ஜொலிக்காமலே இருக்கிறார். இயக்குனர், சண்முக பாண்டியனை இன்னும் சரியாக பட்டைதீட்டி இருக்க வேண்டும். அவரை மட்டுமில்லை படத்தில் வரும் கஸ்தூரி ராஜா, முனிஷ் காந்த், அருள் தாஸ் போன்றவர்களைத் தவிர மற்ற யாரும் நடித்ததாக தெரியவில்லை. ஏதோ, நானும் கடைத்தெருவுக்கு போனேன் என்பது போல வந்து போகிறார்கள்.
முதல்பாதி: யானையை குடும்பத்தில் ஒருவராக நினைத்து பாசத்தை கொட்டி வளர்ப்பது, என யானையை சுற்றியே முதல் பாதி கதை ஆமை வேகத்தில் செல்கிறது. இடைவேளைக்கு பிறகாவது கதையில் சூடு பிடிக்கும் என்று பார்த்தால் கதை எங்கெங்கோ சென்று கடைசியில் நரபலி கொடுப்பதில் வந்து முடிவடைகிறது. படத்தில் AI இல் வரும் விஜயகாந்த்தை இன்னும் அழகாக காட்டி இருக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு, ஏஐ மிகவும் மோசமாக இருந்தது. கோட் படத்தில் 'ஏஐ'யில் வந்த விஜயகாந்த், அதிரடியாக சண்டை போட்டு மிரட்டி இருப்பார். இந்த படத்தில் 'ஏஐ' படுமோசம். இருப்பினும் ரமணாவாக வரும் விஜயகாந்த்தை பார்த்து ரசிகர்கள் கண்கலங்கினார்கள். இசைஞானி இளையராஜா வழக்கம் போல இந்த படத்திலும் ஸ்கோர் செய்துவிட்டார். பின்னணி சூப்பர். ஆனால், பாடல் மனதில் ஒட்டவில்லை.
மற்றுமொரு ஆக்ஷன் ஹீரோ: அதிரடியான ஒரு நடிப்பை சண்முக பாண்டி கொடுத்திருந்தாலும், அறிமுக இயக்குனரான அன்பு, திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். அதில், கவனம் செலுத்தி இருந்தால் இத்திரைப்படம் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றி திரைப்படமாக அமைந்திருக்கும். ஆனால், பல காட்சிகளில் சண்முக பாண்டியன் விஜயகாந்த் நினைவுபடுத்துவதால் விஜயகாந்தின் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் நிச்சயம் பிடிக்கும். சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவில் மற்றுமொரு ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











