ப்ளீஸ்... மோடியை பிடிக்காதவர்கள் இதை படிக்காதீர்கள்... 'சலோ ஜீத் ஹெயின்'... விமர்சனம்!
பிரதமர் நரேந்திர மோடியின் பால்ய பருவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் 'சலோ ஜீத் ஹெயின்'.
Recommended Video

சென்னை: இந்தாண்டு லோக் சபா தேர்தல் வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பால்ய பருவத்தை அடிப்படையாக வைத்து வெளிவந்துள்ள படம் 'சலோ ஜீத் ஹெயின்'.
டீக்கடைக்காரர் மகனான சிறுவன் நருமோடி, எப்போதும் ஏதாவது சிந்தித்துக்கொண்டே இருக்கும் மனநிலை படைத்தவன். ஒருநாள் விவேகானந்தரின் "அடுத்தவர்களுக்காக வாழ்பவர்களே உண்மையில் வாழ்கின்றனர்" என்ற வாசகத்தை படிக்கிறான். அப்போது இருந்து நாம் யாருக்காக வாழ்கிறோம் என்ற கேள்வி அவனுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
'நீங்கள் யாருக்காக வாழ்கிறீர்கள்' என்ற கேள்வியை எல்லோரிடமும் கேட்கிறான் சிறுவன் நருமோடி. ஆனால் அவனது கேள்வியை எல்லோரும் புறக்கணிக்கின்றனர். பின்னர் ஒரு ஏழை மாணவனின் படிப்புக்கு உதவ நினைக்கிறான் நருமோடி. அதை அவன் எப்படி சாத்தியப்படுத்தினான் என்பதே படத்தின் கதை.

பிரதமர் நரேந்திர மோடியின் பால்ய பருவத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது 'சலோ ஜீத் ஹெயின்'. சிறு வயதிலேயே அடுத்தவர்களுக்கு உதவும் குணம் படைத்தவர், அடுத்தவர்களுக்காக வாழும் எண்ணம் படைத்தவர் மோடி என்பதை உலகுக்கு எடுத்துக்கூறும் விதமாக படம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணம் அவருக்கு எப்படி வந்தது என்பதையும் படத்தில் கூறுகிறார்கள்.
மேலும், சிறுவன் நருமோடி எல்லோரையும் சரிசமமாக நடத்தக்கூடியன் என்றும், கழிவறையை சுத்தம் செய்யும் மாணவனுக்காக நிதி திரட்ட முயன்றவன் என்பதும் படத்தின் சாராம்சம்.
இதை தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிக தரமான படமாக உருவாக்கியிருக்கிறார். இசை, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்துமே ஒரு முழுநீள படத்துக்கான தரத்தில் இருக்கிறது. 30 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இந்த படம், தொழில்நுட்ப ரீதியாக சபாஷ் சொல்ல வைக்கிறது.

அதேபோல் படத்தில் நடித்துள்ள அனைவருமே தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார்கள். குறிப்பாக நருமோடியாக நடித்துள்ள சிறுவனும், ஹரீஷ் சோலங்கி பாத்திரத்தில் நடித்துள்ள சிறுவனும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள்.
விரையில் நாடாளுமன்ற தேர்தல் வரக்கூடிய சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இமேஜை தூக்கிப்பிடிப்பதற்காக வெளியிடப்பட்டுள்ளது 'சலோ ஜீத் ஹெயின்'. ஆனால் அது பலிக்குமா என்பது மக்கள் கையில் தான் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











