Chennai Palani Mars Review: பரமா... மரண பயத்த காட்டிட்டாங்க பரமா.. சென்னை பழனி மார்ஸ்..! விமர்சனம்
ஒருவர் தன்னுடைய இலக்கை நோக்கி தொடர்ந்து முயற்சித்தால், ஏதாவது ஒரு ஜென்மத்திலாவது அதனை அடைய முடியும் என்கிறது சென்னை பழனி மார்ஸ்.
சென்னை: சிந்தனை ஆற்றல் வழியாக செவ்வாய்கிரகத்திற்கு செல்ல விடாமுயற்சி செய்யும் ஒரு இளைஞனை பற்றிய கதையே சென்னை பழனி மார்ஸ்.
நாயகன் பிரவீன் ராஜாவின் குரலில் தான் படம் துவங்குகிறது. விஞ்ஞானியான பிரவீனின் தந்தைக்கு செவ்வாய்கிரகத்திற்கு போக வேண்டும் என்பது வாழ்க்கை லட்சியம். அதற்காக அவர் இஸ்ரோவில் வேலைக்கு சேராமல், ராவணன் போல் சிந்தனை ஆற்றலின் மூலமாக வேறு கிரகத்திற்கு பயணிக்க முடிவு செய்கிறார்.

பிறரது பரிகாசங்களை காதில் போட்டுக்கொள்ளாமல் அப்பாவும், மகனும் ஒரு மலை உச்சிக்கு சென்று, ஆஸ்ட்ரோனட் போல உடையணிந்து கொண்டு, பிரமிட்டின் மினியேச்சர் போல ஏதோ ஒரு கருவியை கையில் வைத்துக்கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறார்கள்.
ஆண்டுக்கணக்காக அவர்கள் முயற்சி செய்தும், அந்த மலை உச்சியைவிட்டு அவர்களால் நகரமுடியவில்லை. 20 ஆண்டுகள் கழித்து அப்பாவின் கனவை நிறைவேற்றியே தீர வேண்டும் என சபதம் ஏற்கிறார் மகன். அவரது கணிப்பில் பழனி மலை உச்சிக்கு சென்று முயற்சித்தால் செவ்வாய்க்கு விசா கிடைத்துவிடும் என கண்டுபிடிக்கிறார்.
ஆனால் இதற்கிடையே போதை பழக்கத்துக்கு அடிமையாகும் நாயகன், தன்னை கிண்டல் செய்யும் நண்பனை கொலை செய்துவிட்டு போதை மருந்து மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்படுகிறார். பிறகு அங்கிருக்கும் மற்றொரு போதை நண்பருடன் பைக்கில் ஏறி தப்பித்து சென்னையில் இருந்து பழனிக்கு புறப்படுகிறார். அவரது பயணம் மார்ஸ்க்கு போய் முடிகிறதா என்பதே 'சென்னை பழனி மார்ஸ்'.
இதை படிக்கும் போது ஏற்படும் தலைச்சுற்றலைவிட படம் பார்க்கும் போது இன்னும் அதிகமாக ஏற்படும். கிட்டத்தட்ட ராட்சச ராட்டிணத்தில் ஏறி இறங்கும் போது ஏற்படுமே, அதுபோன்ற உணர்வு தான் நமக்கும் வரும்.

படம் முழுக்க ஏதோ இரண்டு போதை ஆசாமிகளிடம் சிக்கிக்கொண்ட உணர்வு. ஆரஞ்சு மிட்டாய் எடுத்த இயக்குனரின் படைப்பா இது எனும் கேள்வி தான் படம் பார்த்த பிறகு ஏற்படுகிறது. அதுவும் இந்த படத்தின் கதை விஜய் சேதுபதியாம். சத்தியமா நம்ப முடியல.
நாயகன் பிரவீனும் அவருடய நண்பராக வரும் ராஜேஷ் கிரி பிரசாத்தும் சதா போதையிலேயே இருக்கிறார்கள். ஆரம்பத்தில் அவர்கள் செய்யும் சேட்டைகள் லேசாக சிரிக்க வைத்தாலும், போக போக எரிச்சலையே ஏற்படுத்துகிறது.
படத்தின் முடிவில் இயக்குனர் ஒரு மெசேஜ் சொல்லியிருப்பார் பாருங்க, அது தான் செம ஹைலைட். அது என்னன்னா... ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாடி பல ஜென்ம உழைப்பு இருக்குமாம். கண்ணா பின்னான்னு படம் எடுத்துட்டு கடைசியில் மெசேஜ் சொல்றேன்னு எதையாவது போட்டு முடிக்கிறது இப்ப பேஷனா போயிடுச்சு.
படத்தின் ஒரே ஆறுதல் ஒளிப்பதிவு மட்டும் தான். அதற்காக வேண்டுமானால் பிஜுவை பாராட்டலாம். இண்டர்வெல் பிளாக்கில் வரும் சில்ஹவுட் காட்சி செம பீலிங். மற்றப்படி படத்தின் கதை, இயக்கம், எடிட்டிங் என எதையும் பாராட்ட முடியவில்லை.
நிரஞ்சன் பாபுவின் இசை ஆங்காங்கே லேசா வந்துட்டு போகுது. அதனால் ரசிக்க முடியவில்லை. "இத்தனை வருஷம் நீ அந்த மலைக்கு போனதுக்கு சபரி மலைக்கு போயிந்தா குருசாமியாவது ஆகியிருப்ப", என்பது போன்ற விஜய் சேதுபதியின் வசனங்கள் தான் மூச்சுவிட வைக்கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டரும், அவருடன் வரும் கான்ஸ்டபிளும் தான் படத்தின் மற்றொரு ஆறுதல் ஐட்டங்கள்.
சென்னையில் இருந்து கிளம்பி பழனி போறத்துக்கு மெயின் ரோடு அவ்ளோ பெரிசா இருக்கும் போது, காடு, மேடு, சந்துலயே வண்டி ஓட்டிட்டு போறதெல்லாம் எந்த ஊர்ல நடக்கும்னு தெரியல. இந்த வண்டி நிச்சயம் செவ்வாய்க்கிரகம் வரைக்கும் இல்ல, வரும் செவ்வாய்க்கிழமை வரைக்கும் கூட போய் சேராது.
சென்னை பழனி மார்ஸ்... வெறி வெறி ஒர்ஸ்!


Click it and Unblock the Notifications











