Danny Movie Review.. ஓடிடி-க்குன்னே இப்படி எடுப்பாய்ங்களோ? கேமராமேன் மட்டுமே மெனக்கெட்டிருக்கிறார்!
சென்னை: ஓடிடி தளத்தில் விரும்பி பார்க்கும் படம் என்றால் அது க்ரைம் த்ரில்லர் படங்கள்தான்.
காரணம் குறைந்தபட்ச விறுவிறுப்பு, சஸ்பென்ஸ், கிளைமாக்ஸ் திருப்பம் என இருக்கும்.
ஒவ்வொரு காட்சியும் அடுத்த என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பை ஏற்படுத்தும்.
சீரியல் எபிசோட்
ஒரு சின்ன சப்ஜெக்டை கூட, இப்படியான படமாக உருவாக்க முடியும். ஆனால் இது எதுவுமே இல்லாமல் கிரைம் த்ரில்லர், தஞ்சை மாவட்ட கதை களம், வரலட்சுமி ஹீரோயின். ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிப்பு என்ற பில்டப்புகளுடன் வெளியாகி இருக்கிறது, டேனி! கிரைம் த்ரில்லருக்கான குறைந்தபட்ச நியாயத்தைக் கூட செய்யாமல் இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான ஒரு தொலைக்காட்சி தொடர் எபிசோடாக கடந்து சென்று விடுகிறது.
பாலியல் வன்கொடுமை
தஞ்சையின் பிரபலமான மருத்துவர், தனது ஒரே மகனை செல்லமாக வளர்க்கிறார். மகன் கேட்கும் போதெல்லாம் பணத்தை அள்ளிக் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் புழங்கும் ஒரு மருந்தை போதையாக உபயோகிக்க ஆரம்பித்து, அந்தப் போதையால் இளம்பெண்களைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொல்கிறார். இதை தொடர்கிறார். இந்த மர்ம மரணங்கள் பற்றி விசாரிக்கிறார், போலீஸ் இன்ஸ்பெக்டர் வரலட்சுமி.
டைட்டிலாக நாய் பெயர்
ஒரு கட்டத்தில் அவரது சகோதரியே வில்லனிடம் சிக்கி சீரழிகிறாள். பிறகு அவர் எப்படி டேனியின் உதவியுடன் வில்லனை கண்டுபிடித்து அழிக்கிறார் என்பது கதை. படத்தின் டைட்டில், டேனி. இது ஒரு போலீஸ் நாயின் பெயர். வரலட்சுமி குந்தவையாக வருகிறார். என்றாலும் ஒரு நாயின் பெயரையே படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்களே என்று ஆச்சர்யத்தோடு பார்த்தால், அந்த நாய் வருகிறது, ஓடுகிறது, குரைக்கிறது, ஓடுகிறது. அதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை.
யாரும் நடிக்கவில்லை
படத்தின் நாட்டை ஒரு ஹாலிவுட் படத்தில் இருந்து எடுத்திருக்கிறார்கள். அதை தஞ்சை களத்தில் தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர். முயற்சி திருவினையாக்கவில்லை. வரலட்சுமி மட்டுமே படத்தில் தெரிந்த முகம், அவரும் காக்கி யூனிபார்மை போட்டுக்கொண்டு நடந்தாலே போதும் என்று முடிவு செய்து நடித்திருக்கிறார். வரலட்சுமி உள்பட படத்தில் யாருமே நடிக்கவில்லை.
பறவை பார்வை
தங்களுக்கு கொடுக்கப்பட்ட வசனத்தை கேமரா முன்னால் பேசிவிட்டு போயிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் மட்டுமே கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார். கொரோனா லாக்டவுனால் ஊர் பக்கம் போக முடியாத தஞ்சாவூர்காரர்கள் தங்கள் ஊரை பறவை பார்வையில் பார்த்து
சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். 'ஓடிடி தளத்துக்குன்னாலும் கொஞ்சம் உருப்படியா எடுக்கலாம்ல' என்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











