டிமான்ட்டி காலனி 2 எப்படி இருக்கு?.. பயமா? சோர்வா?.. லாஜிக் கொஞ்சம் மறந்து ஒரு மேஜிக்கை காணலாம்
நடிகர்கள்: அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன்
இசை: சாம் சி.எஸ்
இயக்கம்: அஜய் ஞானமுத்து
ரேட்டிங்:
சென்னை: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் சாம் சி.எஸ் இசையில் உருவாகியிருக்கும் படம் டிமான்ட்டி காலனி 2. இதன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது. டிமான்ட்டி காலனி 2 படம் எப்படி இருக்கிறது என்பது தொடர்பான விமர்சனம் இதோ..
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பேய் படங்கள் என்றாலே ஒருவித ஈர்ப்பு காலங்காலமாக இருந்துவருகிறது. அப்படி வந்த படங்களில் டிமான்ட்டி காலனி படத்துக்கு தனித்த இடம் உண்டு. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு அருள்நிதி நடித்து வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகியிருக்கிறது.

படத்தின் ப்ளஸ்: அஜய் ஞானமுத்து மேக்கிங்கில் தான் சிறந்தவர் என்பதை இதிலும் நிரூபித்திருக்கிறார். பேய் படம் என்பதால் விறுவிறுப்புக்கும், த்ரில்லுக்கும் குறை வைக்காமல் படத்தை நகர்த்தி செல்கிறார். படத்தின் ஆரம்பமே ஒரு தற்கொலையில் தொடங்குவதால் முதல் சீனிலேயே ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார். ஆனால் அந்தத் தற்கொலை எதற்காக நடந்தது என்ற பேச்சு எழ; அதிலிருந்து செல்லும் ஸ்க்ரீன் ப்ளே ரசிகர்களை கவர ஆரம்பித்துவிடுகிறது. படத்தின் பெயர் போடும் இடம் எல்லாம் கைத்தட்டல்கள் எழுகின்றன தியேட்டரில்.
அதேபோல் கிராபிக்ஸ் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். ஆன்மாக்களின் உலகமாக காண்பிக்கப்படும் இடம் எல்லாம் உண்மையில் சிலிர்க்கத்தான் செய்கிறது. அந்த உலகத்துக்குள் செல்லும் ப்ரியா பவானி சங்கரை பார்க்கையில் நம்மையும் இயக்குநர் அந்த உலகத்துக்கு அழைத்து செல்கிறார். இதனால் ரசிகர்கள் பெரும்பாலும் படத்தோடு கனெக்ட் ஆகிவிடுகிறார்கள் என்பதுதான் எதார்த்தம்.

ப்ரியா பவானி சங்கர் ஸ்கோர்: படத்தின் மிகப்பெரிய தூண்களில் ஒருவராக தாங்கி பிடித்திருக்கிறார் ப்ரியா பவானி சங்கர். இதற்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான இந்தியன் 2வில் ப்ரியாவை நெட்டிசன்ஸ் ஓவராகவே கலாய்த்துவிட்டார்கள். அதற்கெல்லாம் சேர்த்து இதில் பதிலடி கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு சீனிலும் அவர் நடிப்பை பார்க்கையில் அட ப்ரியா பவானி சங்கர் இப்படியும் நடிப்பாரா என்று ஆச்சரியம் ஏற்படுகிறது. ஆன்மாக்களின் உலகத்தில் அவர் நுழையும்போதும்; டிமான்ட்டி அரசனை பற்றி பேசும்போதும் அவர் காண்பிக்கும் எக்ஸ்பிரெஷன்கள் நமக்கும் கிலியை ஏற்படுத்துகிறது.
அருள்நிதியின் அளவான நடிப்பு: அருள்நிதியை பொறுத்தவரை தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ரோலை அளவாக நடித்திருக்கிறார். அதுதான் அவரது பலங்களில் ஒன்றாகவும் தெரிகிறது. இரண்டாம் பாதியில் ஒரு அறையில் சிறுவனை கொலை செய்யும் இடத்தில் மிகச்சிறந்த நடிகராக மிளிர்கிறார் அருள். அதேபோல் தனது சித்தப்பாவிடமும், தனது தந்தை எழுதிய உயில் பற்றி தெரிந்து பேசும் இடத்திலும் ஹியூமர் சென்ஸோடு இருப்பதும் அவரது ப்ளஸ்ஸாக தெரிகிறது. இரட்டை வேடங்களில் அருள்நிதி தனது நடிப்பில் கொஞ்சம் வித்தியாசம் காட்டவும் செய்திருக்கிறார். இருந்தாலும் டிமான்ட்டி காலனி படத்தில் அவருக்கு இருந்த ஸ்பேஸ் இதில் கொஞ்சம் கம்மியாக இருப்பது போல் தெரிகிறது.

சாம் சி.எஸ். மிரட்டல்: படத்தின் அடுத்த பலங்களில் ஒன்று சாம் சி.எஸ்ஸின் இசை. மனுஷன் பின்னி எடுத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் அந்த அறை சீனுக்கு அவர் கொடுத்திருக்கும் இசை அபாரம். அதேபோல் க்ளைமேக்ஸில் வில்லனை காண்பிக்கும்போது அவர் அமைத்திருக்கும் இசை நிச்சயம் அவருக்கு தனி இடம் எப்போதும் தமிழ் சினிமாவில் உண்டு என்பதை நிரூபித்திருக்கிறது. புதுமையாகவும், அதேசமயம் திகில் ஊட்டி நினைவில் பதியும் இசையைத்தான் படம் முழுக்க கொடுத்திருக்கிறார்.
ஓவர் டோஸ் பாஸ்: அதேசமயம் ஓவர் டோஸ் கிராஃபிக்ஸ் காட்சிகள் ஒருகட்டத்துக்கு மேல் சலிப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் படத்தின் முதல் பாகத்துடைய பெரும் ப்ளஸ்ஸே அதில் இருந்த எதார்த்த தன்மை. நமது நிகழ்காலத்தில் நடக்கும் ஒரு பேய் கதையை போல் அந்தப் படத்தை அவ்வளவு இயல்பாக கொண்டு சென்ற ஞானமுத்து இந்தப் படத்தில் சிஜியை அதிகம் நம்பிவிட்டார் என்றே தோன்றுகிறது.

அதேபோல் சாம் என்ற கேரக்டரில் வருபவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான விடையை இன்னும் கொஞ்சம் தெளிவாகவும், ரசிகர்களுக்கு புரியும்படியும் சொல்லியிருக்கலாம். முக்கியமாக இந்தப் படத்தில் புத்த துறவிகளை பேயை கண்ட்ரோல் செய்பவர்களாகவும், கட்டுப்படுத்துவதும் போல் காண்பிக்கையில், பழைய தமிழ் பேய் படங்களின் வாடை ஹெவியாகவே அடிக்கிறது. இதனால் இதையெல்லாம் ஏற்கனவே பார்த்தாச்சே என்ற எண்ணம் ரசிகர்களிடம் எழுந்துவிடுகிறது. அந்த எண்ணம் ஒரு நிலைமைக்கு மேல் சோர்வையும் ஏற்படுத்துகிறது. மேலும் ஒரு புத்தகத்தையும், ஒரு செயினையும் வைத்துக்கொண்டு நான்கு கல்லூரி பெண்கள் படும் பாடு ரசிகர்களையும் கொஞ்சம் படுத்துகிறது. முதல் பாகத்தில் காமெடி காட்சிகளை நன்றாகவே எழுதியிருந்தார் அஜய். ஆனால் இதில் அது ரொம்பவே மிஸ்ஸாகிறது.
திடீரென க்ளைமேக்ஸில் போர்ச்சுகலில் அரசனுக்கு நடந்த கொடுமையை காண்பிக்கும்போது ச்ச இதை படத்துக்குள் கொஞ்சம் லென்த்தாகவே வைத்திருக்கலாமே என்று தோன்றுகிறது. இருந்தாலும் அதை வைத்துதான் மூன்றாவது பாகத்துக்கான லீடை கொடுத்திருக்கிறார்கள். லாஜிக் மறந்து ஒரு மேஜிக்கை காண ஆசைப்படும் நபராக இருந்தால் தாராளமாக ஒருமுறை டிமான்ட்டி காலனி 2வுக்குள் சென்று வரலாம்.


Click it and Unblock the Notifications











